Saturday, September 23, 2017

இராமானுச நூற்றந்தாதி 2



கள் ஆர் பொழில் தென்னரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கி குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு ஒன்றறியேன் எனக்குற்ற பேரியல்வே

பொருள்: தேன் நிறைந்த மலர்களால் நிரம்பிய சோலைகளை உடைய தென் திருவரங்கத்தில் பள்ளி கொள்ளும் திருவரங்கப் பெருமானின் தாமரை போன்ற திருவடிகளை தமது நெஞ்சிலே என்றும் நினைக்காத மக்களை நீங்கி, திருக்குறையலூர் தலைவர் ஆன திருமங்கையாழ்வார் திருவடிகளிலே என்றும் நீங்காத அன்பு கொண்ட இராமானுசரின் சிறந்த குணநலன்களைத் தவிர வேறு ஒன்றையும் என் நெஞ்சம் நினைக்காது. இப்படிப்பட்ட பெருநிலை எனக்கு எப்படி ஏற்பட்டது என்று அறியேன்.

விரிவுரை: இவ்வளவு நாளும் தென்னரங்கன் திருவடிகளை நினைக்காத சிறு மனிசரோடு உறவு கொண்டிருந்தேன். இன்று அதைத் தொலைத்தேன். திருமங்கை ஆழ்வாரின் திருவடிகளையே என்றும் மனத்தில் கொண்டிருக்கும் எம்பெருமானாருடைய சிறந்த சீலங்களே என் நெஞ்சில் நிலை நின்றது. இப்படிப்பட்ட நிலைமை என் முயற்சியால் ஆவது இல்லை. எம்பெருமானாரது காரணமே இல்லாத பெரும் கருணையே இதனை நிகழ்த்தி உள்ளது. 

No comments: