Sunday, July 22, 2012

ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையள்!



இன்றோ திருவாடிப்பூரம்! எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள்! - குன்றாத
வாழ்வான வைகுந்த வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்!

இன்று தானே திருவாடிப்பூரம்?! குறையொன்றும் இல்லாத வாழ்வான வைகுந்த வான்போகத்தை விட இந்த உலகத்தில் தோன்றி எம்மை போன்ற எளியோரை உய்விப்பதே பெருமை என்று தானே அந்த வான்போகத்தை இகழ்ந்து இந்த நன்னாளில் பெரியாழ்வார் திருமகளாராய் எமக்காக ஆண்டாள் இங்கு அவதரித்தாள்?!

பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த

திருவாடிப் பூரத்தின் சீர்மை - ஒருநாளைக்
குண்டோ? மனமே உணர்ந்துப் பார்! ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு!

பெரியாழ்வாரின் பெண்ணாக ஆண்டாள் பிறந்த இந்த திருவாடிப்பூரத்தின் பெருமை வேறு எந்த நாளுக்கு உண்டு? மனமே உணர்ந்து பார்! ஆண்டாளுக்கு ஒப்பாவார் வேறு யாராகிலும் இருந்தால் இந்த நாளுக்கும் ஒப்பு உண்டு!

அஞ்சுக்குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தன் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் - பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து!

என்றும் எந்த நிலையிலும் இறைவனைச் சார்ந்தே இருப்பது தான் உயிரின் இயல்பு என்று அவனருளாலே உணர்ந்து அவனுக்கே என்று அடியவராய் விளங்கும் ஆழ்வார்களின் குடிக்கு ஒரு குலமகளாக உதித்த, அந்த ஆழ்வார்களின் செயல்களை எல்லாம் விஞ்சி நிற்கும் தன்மை கொண்டவளான, இளமைக்காலத்திலேயே ஞானம், பக்தி போன்றவற்றில் தலைசிறந்து நின்றவளும் ஆன ஆண்டாளைப் பக்தியுடன் தினமும் மகிழ்ந்து வணங்குவாய் மனமே!

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தெய்வீக பதிவு... வாழ்த்துக்கள்...
நன்றி...

kaialavuman said...

சூடிக் கொடுத்தச் சுடர் கொடியின் பிறந்த தினத்தில் நல்ல பதிவு. நன்றிகள்

Kavinaya said...

அச்சோ. மறந்தே போயிட்டேன் :( நினைவூட்டலுக்கு நன்றி குமரன்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

குமரன் (Kumaran) said...

நன்றி திண்டுக்கல் தனபாலன், வெங்கட் ஸ்ரீநிவாசன், கவிநயாக்கா.

இராஜராஜேஸ்வரி said...

பிஞ்சாய்ப்பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும்வழுத்தும் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

குமரன் (Kumaran) said...

நன்றி இராஜராஜேஸ்வரி.

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல பகிர்வு.

அன்பு நண்பரே தங்கள் பதிவை நன்றியுடன் வலைச்சரத்தில் பகிர்ந்திருக்கிறேன்


http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_6.html

நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சர வாழ்த்துக்கள்...