Saturday, December 26, 2009

அகநானூறு போற்றும் புரிசடை அந்தணன்

பாரதம் பாடிய பெருந்தேவனார் என்னும் புலவர் சங்க கால தொகை நூல்களான அகநானூறு, புறநானூறு போன்ற பல தொகுப்புகளுக்கும் கடவுள் வாழ்த்து பாடியிருக்கிறார். வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களைத் தொகுத்து வைத்தவை இந்த எட்டுத் தொகை நூல்கள். யார் இவற்றைத் தொகுத்தார்கள் என்ற குறிப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஏரணப்படி பார்த்தால் தொகுக்கும் காலத்தில் கடவுள் வாழ்த்து பாடப்பட்டிருக்கலாம்; கடவுள் வாழ்த்து பாடியவரே தொகுத்த புலவராகவும் இருக்கலாம் - என்று தோன்றுகிறது. உறுதிபடுத்த மேற்கொண்டு ஆராய்ச்சிகள் வேண்டும்; ஏற்கனவே ஆய்வுகள் நடந்திருந்தால் அந்த ஆய்வுகளை நான் இனிமேல் தான் படிக்க வேண்டும். இந்த ஏரணம் சரி என்றால் பாரதம் பாடிய பெருந்தேவனாரே அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களைத் தொகுத்தவராவார்.

எட்டுத்தொகையில் இருக்கும் பல பாடல்கள் கி.மு. 5ம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 2ம் நூற்றாண்டு வரையில் பாடப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அதன் படி பார்த்தால் இவை கி.பி. 2ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கடவுள் வாழ்த்தும் அக்காலத்திலேயே எழுதப்பட்டிருக்கலாம். பாரதம் பாடிய பெருந்தேவனாரும் அக்காலத்திலேயே வாழ்ந்திருக்கலாம். இவ்விரு விடயங்களையும் உறுதி செய்ய மேற்கொண்டு ஆய்வுகளோ படிக்கவோ வேண்டும்.

அகநானூற்றின் கடவுள் வாழ்த்து சிவபெருமானைப் போற்றுகிறது. பதம் பிரித்துப் படித்தால் உரை இல்லாமலேயே விளங்கக் கூடிய வகையில் கொஞ்சம் எளிமையாகவே இருக்கிறது. சிவபெருமானின் திருவுருவத்தை எண்ணத்தில் நிலை நிறுத்தும் வகையில் பாடப்பட்டிருக்கிறது.

கார் விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர்த்
தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;
மார்பின் அஃதே மை இல் நுண் ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு
கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்
வேலும் உண்டு அத் தோலாதோற்கே!
ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே;
செவ்வான் அன்ன மேனி; அவ்வான்
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று
எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை;
முதிராத் திங்களொடு சுடரும் சென்னி;
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொல் முறை மரபின்
வரி கிளர் வயமான் உரிவை தைஇய
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன்
தாஇல் தாள் நிழல் தவிர்ந்து அன்று ஆல் உலகே!


பொன்னைப் போல் ஒளி வீசும் மஞ்சள் நிறக் கொன்றைப் பூ சூடியவனாக சிவபெருமான் சங்க கால பாடல்கள் பலவற்றிலும் போற்றப்படுகிறான். கொன்றை கார் காலத்தில் பூக்கும். அப்படி கார்காலத்தில் பூத்த, பொன்னைப் போல் நிறம் கொண்ட, புத்தம் புதிய கொன்றை மலர்களைத் தாராகவும் மாலையாகவும் திருமுடியில் சுற்றியிருக்கும் கண்ணியாகவும் அணிந்திருக்கிறான் சிவபெருமான். கார் விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர்த் தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்.

ஆண்டாள் மாலை என்று தற்காலத்தில் சொல்கிறோமே, இரண்டு குஞ்சம் வைத்து, கழுத்தில் சூடினால் நீண்டு இருபுறமும் தொங்குமே அதனைத் தார் என்று சொல்வார்கள். ஒரே ஒரு குஞ்சத்துடன் வளையம் போல் கட்டினால் அது மாலை. மிகவும் நெருக்கமாகச் சிறு சிறு வளையமாகக் கட்டினால் அது கண்ணி. இன்றைக்கும் வைதிகச் சடங்குகளின் போது கழுத்தில் மாலையும் கை மணிக்கட்டுகளில் கண்ணிகளும் அணிந்து கொள்ளும் வழக்கம் இருக்கிறது.

தார் ஆண்களுக்கும் மாலை பெண்களுக்கும் கண்ணி இருபாலருக்கும் உரியவை. தார் ஆண்களுக்கு உரியது என்றால் அது எப்படி ஆண்டாள் மாலை ஆகியது என்று யாராவது கேட்டால் 'போய் ஆண்டாள் கதையைப் படியுங்கள். அவள் சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆனதை நுண்மையாகப் படித்துப் பாருங்கள். அப்போது புரியும்' என்று சொல்லலாம்.

இந்தப் பாடலில் தாரும் மாலையும் கண்ணியும் அணிந்தவன் சிவபெருமான் என்று சொல்லும் போது அவன் ஆணுமாய் பெண்ணுமாய் அல்லனுமாய் நிற்பதைக் குறிக்கிறார் போலும் புலவர். மாதொருபாகனாய் நிற்கும் சிவபெருமான் தாரும் மாலையும் கண்ணியும் அணிந்திருப்பதில் தடையென்ன?

இந்தக் கொன்றைத் தாரை பிற்காலத்தில் வந்த அபிராமி பட்டரும் 'தார் அணிக் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர்' என்று பாடுகிறார். அபிராமி பட்டரும் 'தில்லை ஊரர் மாலையும் அணிந்தவர்' என்று சொல்லுவதைப் பாருங்கள். அதனைக் கவனித்தால் அவர் ஏன் 'தில்லை ஊரர் தம் பாகத்து உமை' என்று பாடுகிறார் என்பதும் புரியும்.

'மார்பின் அஃதே' என்னும் அடுத்த அடியின் முதல் பகுதியை கொன்றைத் தாரன், மாலையன், கண்ணியன் என்ற தொடருடன் சேர்த்துப் படித்தால் சிவபெருமானின் மார்பு நிறைய கொன்றைப்பூவே நிறைந்திருக்கிறது என்ற பொருள் கிடைக்கிறது. ஆனால் உரையாசிரியர்கள் இதனை அதே வரியில் இருக்கும் அடுத்தப் பகுதியுடன் சேர்த்துப் பொருள் கொள்கிறார்கள். 'மார்பின் அஃதே மை இல் நுண் ஞாண்' என்பதை ஒரே வரியாகக் கொள்கிறார்கள். இந்த அடிக்கு உரையாசிரியர்கள் தரும் பொருள் 'குற்றமில்லாத பூணூல் மார்பில் விளங்குகின்றது'. மை என்பது இங்கே கருமையைக் குறித்து 'மை இல்' என்பது குற்றமற்ற / வெண்ணிறமான என்ற பொருளைத் தருகிறது.

சிவபெருமானின் திருவுருவத்தில் இருக்கும் சிறப்புகளில் அடுத்த சிறப்பாகப் புலவர் குறிப்பது நெற்றிக் கண். தேவர்களின் கண்கள் இமைக்காமல் இருக்குமாம். எல்லா தேவர்களைப் போல் சிவபெருமானின் திருக்கண்களும் இமைக்காமல் இருக்கும் போது அவரது சிறப்பான மூன்றாவது கண்ணும் இமைக்காமல் இருக்குமாம் நெற்றியில். நுதலது இமையா நாட்டம் - நெற்றியில் இமைக்காத திருக்கண்.

தேவதேவனான சிவபெருமான் எண்ணியதெல்லாம் நிகழ்த்திக் கொள்ளும் ஆற்றல் உடையவன். தோல்வி என்பதே அறியாதவன். அதனால் அவனுக்குத் தோலாதவன் என்றே ஒரு திருப்பெயரைத் தருகிறார் புலவர். எந்த வித தடையையும் நீக்கிக் கொள்ளும் ஆற்றல் உடையவன். பகையெனும் தடையை நீக்கி அவன் திருக்கைகளில் விளங்குகின்றன மழுவும் மூவாய் வேலான திரிசூலமும். இகல் அட்டு கையது கணிச்சியொடு மழுவே; மூவாய் வேலும் உண்டு அத்தோலாதோற்கே! இகல் என்றால் பகை. பகையை வென்று கையில் இருக்கிறது மழு. மூவாய் வேலும் அந்த தோல்வியில்லாதவனிடம் உண்டு. கணிச்சி என்றாலும் மழு என்றே பொருள் சொல்கிறது அகரமுதலி. இங்கே புலவர் 'கணிச்சியொடு மழுவே' என்று ஏன் சொன்னார் என்பது புரியவில்லை. கணிச்சி என்றால் குந்தாலி என்று ஒரு பொருளை உரையாசிரியர் தந்திருக்கின்றனர்.

சிவபெருமானது ஊர்தி தரும வடிவான காளை; ஏறு. ஊர்ந்தது ஏறே. அவன் ஒரு பாகத்தில் இருப்பவள் உமையவள். சேர்ந்தோள் உமையே.

அவனது திருமேனி சிவந்த வானத்தைப் போன்ற நிறம் உடையது. செவ்வான் அன்ன மேனி. அந்த வானில் விளங்கும் பிறை நிலவைப் போல் வளைந்த வெண்மையான கூர் பல்லினை உடையவன். அவ்வான் இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று. விளங்கு என்றால் வளைவு. நேராக நில்லாமல் வளைந்து நிற்பதால் தான் மிருகங்களை விலங்கு என்றனர் போலும். வால் என்றால் வெண்மை. வை என்றால் கூர்மையான. எயிறு என்றால் பல். சிவபெருமானின் உருத்திர வடிவம் இங்கே போற்றப்படுகின்றது போலும். இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை என்று ஐந்து கரத்தனையும் இதே உவமையுடன் இன்னொரு பெரியவர் போற்றுவதையும் நினைவு கூரலாம்.

தீ கொழுந்து விட்டு எரிவதைப் போல் மேல் நோக்கிக் கட்டி விளங்கும் பல சுற்றுகள் கொண்ட சடை முடியை உடையவன் சிவபெருமான். எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை. மெல்லிய கோடு போல் இருக்கும் இளைய பிறையைச் சூடி ஒளிவிடும் தலை. முதிராத் திங்களொடு சுடரும் சென்னி. மற்றவர் இளம்பிறை என்று சொல்ல இப்புலவர் முதிரா திங்கள் என்று சொன்னது பெரும் சுவையாக இருக்கிறது.

திங்களை முதிர்ச்சியடையாத என்று சொன்னதைப் போல், என்றும் இளமையுடன் திகழும் அழிவில்லாத தேவர்களை மூவா அமரர் என்கிறார் புலவர். தேவரும் முனிவரும் பிறரும் என்று இருக்கும் யாவரும் அறிய முடியாத தொன்மையான மரபினை உடையவன் சிவபெருமான். எல்லோர்க்கும் மூத்தவன். மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொல் முறை மரபின்.

வரியை உடைய புலித்தோலாடையை அணிந்தவன் சிவபெருமான். வரி கிளர் வயமான் உரிவை தைஇய. இங்கே வயமான் என்று குறித்திருக்கிறார் புலவர். அதன் நேர் பொருள் மான். மான் தோலாடையும் சிவபெருமானுக்கு உண்டு. அதனால் இங்கே மான் தோலாடையைத் தான் புலவர் குறித்துள்ளார் என்று சொல்லலாம். ஆனால் மானுக்கு புள்ளிகள் உண்டு; வரிகள் இல்லை. இங்கே வரி கிளர் என்று சொன்னதால் இது புலித்தோலாடையைத் தான் குறிக்கிறது என்று பொருள் கொண்டார்கள் போலும் உரையாசிரியர்கள். நெய் என்பது விதப்பாகப் பாலின் நெய்யைக் குறித்து பொதுவாக மற்ற நெய்களையும் குறிப்பது போல் மான் என்பது விதப்பாகப் புள்ளிமானைக் குறித்து பொதுவாக மற்ற விலங்குகளையும் குறிக்கும் போலும். அது உண்மையென்றால் இங்கே வயமான் என்று சொன்னது புலியையே என்பதில் தடையில்லை. உரிவை என்றால் உரிக்கப்பட்ட தோல் ஆடை.

யாழைப் போல் இனிமையான குரலையும் கருமையான கழுத்தினையும் உடைய அந்தணன் சிவபெருமான். யாழ் கெழு மணி மிடற்று அந்தணன். இங்கே யாழ் ஆகுபெயராக மறைகளைக் குறித்தது என்று உரைகள் சொல்கின்றன. அந்தணன் என்று இங்கே குறித்தமையாலும் சிவபெருமானது திருவாக்கு மறைவாக்கு என்பதாலும் அப்பொருளும் பொருத்தமுடைத்தே என்று தோன்றுகிறது.

தொல் முறை மரபினன் சிவபெருமான் என்று முன்னர் சொன்னார் புலவர். முடிவும் இல்லாதவன் என்று இங்கே சொல்கிறார். முடிவு இல்லாத சிவபெருமானின் திருவடி நிழலில் உலகம் நிலையாக நிற்கின்றதே என்கிறார். தாஇல் தாள் நிழல் தவிர்ந்து அன்று ஆல் உலகே! இந்த உலகையும் மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் ஆனவர்களைக் காக்கத் தானே ஆலகாலத்தை உண்டு மணிமிடற்றன் ஆனான் சிவபெருமான். அவன் திருவடி நிழலின் பெருமை சொல்லவும் அரிதே!

13 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

புரிசடையானை, பூரண புண்ணியனை, மாதோரு பாகமுடையானைப் பணிகிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

ஆழ்ந்த அருமையான விளக்கங்கள்.
கரைந்’தேன்’.

S.Muruganandam said...

பொன்னார் மேனிப்புண்ணையனை போற்றும் அருந்தமிழ் பாடலுக்கு அருமையான விளக்கம் குமரன் ஐயா.

ஓம் நமசிவாய

Kavinaya said...

அருமையா விளக்கியிருக்கீங்க. ரொம்ப நாள் கழிச்சு இப்படி ஒரு பதிவு :) சிவபெருமான் படமும் அழகு. நன்றி குமரன் :)

குமரன் (Kumaran) said...

அடியேனும் உங்களுடன் சேர்ந்து பணிகிறேன் மௌலி.

குமரன் (Kumaran) said...

கூடல் பதிவில் தங்கள் முதல் பின்னூட்டத்திற்கு நல்வரவு ஸ்வாமி ஓம்கார்! விளக்கங்கள் தங்களுக்குப் பிடித்திருந்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சி.

குமரன் (Kumaran) said...

நன்றி கைலாஷி ஐயா.

குமரன் (Kumaran) said...

நன்றி கவிநயா அக்கா. ரெண்டு மூணு பேரு இதை சொல்லிட்டாங்க. (மின் தமிழ் குழுமத்திலும்)ஒவ்வொரு இடுகையும் இப்படி எழுத முடியாது என்றாலும் பல இடுகைகள் இப்படி அமைய வேண்டும் என்று ஆசை. :-)

Radha said...

மார்கழியில் திருவெம்பாவை கேட்காத குறை நீங்கியது குமரன். மிக்க நன்றி. :)

//இந்த உலகையும் மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் ஆனவர்களைக் காக்கத் தானே ஆலகாலத்தை உண்டு மணிமிடற்றன் ஆனான் சிவபெருமான். அவன் திருவடி நிழலின் பெருமை சொல்லவும் அரிதே! //

எண்ணுதற்கரிய கண்ணுதற் கடவுளை நானும் பணிகிறேன்.

Radha said...

//மாதொருபாகனாய் நிற்கும் சிவபெருமான் தாரும் மாலையும் கண்ணியும் அணிந்திருப்பதில் தடையென்ன?//
"தோடுடைய செவியன்" என்ற பதிகத்திற்கு திரு. கிருபானந்த வாரியார் சுவாமி அவர்களின் விளக்கம் நினைவிற்கு வருகிறது.

குமரன் (Kumaran) said...

நான் இதை எழுதத் தொடங்கியதே மார்கழியில் சிவபெருமானையும் போற்ற வேண்டும் என்பதற்குத் தான் இராதா. :-) கண்ணன் பாட்டில் மார்கழி 1 கவிநயா அக்காவின் இடுகையில் இட்ட பின்னூட்டத்தினைப் பார்த்தீர்களா?

தோடுடைய செவியன் விளக்கமும் படித்த நினைவிருக்கிறது இராதா.

Kavinaya said...

ராதா, போன வருஷம் மார்கழியில் தினம் திருவெம்பாவை பதிவிட்டேன்... நேரமிருந்தால் இங்கே ஆரம்பிச்சு படிச்சுப் பாருங்க -
http://kavinaya.blogspot.com/2008/12/1.html

Radha said...

//ராதா, போன வருஷம் மார்கழியில் தினம் திருவெம்பாவை பதிவிட்டேன்... //
hmmm...i never used to have access to blogspot.com in my previous organizations...slowly catching up with all your writings. :)