Wednesday, June 17, 2009

திருக்குறளும் ஊழியலும் - முனைவர் க.நெடுஞ்செழியன்

கால வரையறை செய்வதிலும் கருத்து வரையறை செய்வதிலும் ஆய்வாளர்களுக்குத் திருக்குறள் ஒரு பெரும் புதிராகவே உள்ளது. திருக்குறளை ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமயக் கோட் பாடுகளோடு அணுகியுள்ள காரணத்தாலும், திருக்குறளின் சமூகப் பின்புலம் பற்றியோ அதன் மெய்யியல் பின்புலம் பற்றியோ கவலைப்படாத நிலையில் அதுபற்றிய ஆராய்ச்சிகளைத் தொடர்ந் துள்ளதாலுமே திருக்குறளை முற்றாக அறியவும், அதன் கோட்பாடுகளை வகைப்படுத்தவும் முடியாத ஒருநிலை ஏற்பட்டுள்ளது.

தொல்காப்பியத்தில் காணப்படும் மெய்யியல் கூறுகள் யாவும் திருக்குறளிலும் அப்படியே அமைந்துள்ளன. தொல்காப்பியம் இலக்கண நூலாதலால், அதில் செய்திகள் சுருக்கமாகச் சொல்லப் பட்டுள்ளன. ஆனால் திருக்குறளோ செய்திகளை விளக்கமாகவும் செறிவாகவும் தொகுத்தும் வகுத்தும் விளக்கியுள்ளது. மேலும் திருக்குறள் வழங்கும் செய்திகள் அனைத்தும் பொருள்முதல் கோட்பாடு களுக்கு உரியனவாகவே உள்ளன.
திருக்குறளில் ஆய்வில் விடுவிக்க வேண்டிய பல புதிர்களுள் ஊழியலும் அடங்கும். அறத்துப்பாலை இல்லறவியல், துறவறவியல் எனப் பகுத்த வள்ளுவர் அதன் மூன்றாவது கூறாக ‘ஊழியல்’ என ஒன்றையும் அமைத்துள்ளார். இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள இவ்வியலில் ஓர் அதிகாரம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இவ்வியலின் அமைப்பைக் குறித்துப் பரிமேலழகர்,

“இவ்வாற்றான் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயத்தற் சிறப்புடைத்தாய அறம் கூறினார்; இனிப் பொருளும் இன்பமும் கூறுவார் அவற்றின் முதற் காரணமாகிய ஊழின்வலி கூறு கின்றார்” என்பார்.
பரிமேலழகர் கருத்துப்படி ஊழியல் பொருட்பாலுக்கும், காமத்துப்பாலுக்கும் முன்னுரையாக வைக்கப்பட்டது என்பதாகின்றது. அப்படியாயின் இல்லறத்தானுக்கும் துறவிக்கும் ஊழ் தேவை யில்லையோ என்ற ஐயம் தோன்றுகின்றது.

ஆனால் வள்ளுவர் இவ்வியலை மூன்று பால்களுக்கும் பொருந்தும் வண்ணம் ‘மத்திம தீபமாக’ வைத்துள்ளாரா? அல்லது தன் கோட்பாட்டை நிலைநாட்டப் பிறர்மதம் கூறலாக அமைத் துள்ளாரா? என்பதும் ஆய்விற்கு உரியது.

ஊழியல் அதிகாரத்தில் சொல்லப்படும் செய்திகளைப் பின் வருமாறு வகைப்படுத்தலாம்.

ஆகூழ் : செல்வப் பெருக்கிற்கும் ஆக்கத்திற்கும் காரணமாவது, அறிவு வளர்ச்சிக்கும் இது அடிப்படை.
போகூழ் : இழவூழ் என்றும் குறிக்கப்படும். சோம்பலுக்கும் பொருள் இழப்பிற்கும் காரணமாவது. அறிவையும் பேதமைப் படுத்தும். (குறள் 1-2)

அறிவு மிகுதிக்கு ஊழே காரணம். (3)

செல்வம் உடையராய் இருத்தல், அறிவுடையோராய் இருத்தல் ஆகிய இருவேறு நிலைமைகட்கும் ஊழே அடிப்படை. (4)

நல்லனவெல்லாம் தீயனவாக மாறுவதற்கும், தீயனவெல்லாம் நல்லனவாக மாறுவதற்கும்-மாற்றுவதற்கும் உள்ள ஆற்றல் ஊழிற்கு உண்டு. (5)

பொருள் ஒருவரிடம் நிலைத்துத் தங்குவதற்குக் காரணம் ஊழே. தமக்குரிய ஊழ் அல்லாத போது பொருள்களை எவ்வளவுதான் போற்றிப் பாதுகாக்க முற்பட்டாலும் அது தாங்காது. (6)

கோடி கோடியாகப் பொருளைத் திரட்டினாலும் தங்களுக்கென்று ஊழ் வகுத்துள்ளது எதுவோ அதைத் தவிர வேறு எதையும் துய்த்துவிட முடியாது. (7)

எட்டாவது குறள் சற்றுச் சிக்கலானது. உரையாசிரியர்களான பரிமேலழகர், பரிப்பெருமாள் ஆகியோரின் உரையும் பொருள் விளக்கத்தோடு புரிந்து கொள்ளுமாறு அமையவில்லை.

துறப்பார்மன் துப்புரவு இல்லார்; உறற்பால
ஊட்டா கழியும் எனின்.

ஊழினால் வரும் இன்பங்கள் தமக்குக் கிட்டாதபோது துய்ப்பதற்கு ஏதுமற்ற வறியவர்களும் துறவை மேற்கொள்வார்கள் என்பது குறளின் பொருள்.
மெய்ப்பொருளை நாடும் பேரறிவாளர்களின் துறவு சமூகப் பயன் கருதியது. உலக நோக்கம் கொண்டது. வரன்முறைகளும், தூய ஒழுக்கங்களும் நிறைந்தது. ஆனால் வறுமையாளர்களின் துறவு வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உதவுவது, வயிற்றுப் பசியை அடிப்படையாகக் கொண்டது. எனவே மேற்காட்டிய குறள் சமூகச் சிக்கலை ஒட்டி அமைந்துள்ளது என்பது புலனாகிறது. ஆனால் பரிமேலழகர்,
‘ஊழ்வினைகள் துன்பங்களைச் சேர்க்காமல் நீக்கினால் வறுமையால் அனுபவிக்கப்படும் பொருள் இல்லாதவர் துறவு கொள்வர்’ என உரை கூறுகின்றார்.

வறுமையால் வரும் துன்பம் கொடியது எனில் ஊழ்வினையினால் வரும் துன்பமும் கூட கொடியதாகத்தான் இருக்க முடியும். ஊழ்வினையின் துன்பத்தைத் தாங்கிக் கொள்ள ஒருவனால் முடியுமாயின் வறுமையினால் வரும் துன்பத்தையும் அவனால் தாங்கிக் கொள்ள முடியும். எனவே, ‘உறற்பால ஊட்டா கழியும்’ என்பதற்கு ஆகூழால் தோன்றும் செல்வ நுகர்ச்சி இல்லாத போது எனப் பொருள் கொள்வது குறளை அறியத் துணை புரிகின்றது. ‘துறவும் கூட ஊழின் பயனே’ எனக் கூறும் காலிங்கரின் கருத்து பொருத்தமாக உள்ளது. (8)

நல்வினை இன்பங்களைக் கொடுக்கும் போது மகிழ்ச்சியுடன் நுகர்பவர், தீவினை துன்பந் தரும்போது அதை எதிர்கொள்ளாமல் கலங்குவது ஏன்? (9)

ஊழ் மிகுந்த வலிமையுடையது; அதை விலக்க நினைத்தாலும் முந்திக் கொண்டு வந்து நிற்கும். (10)

இப்பத்துக் குறள்களிலும் அமைந்த கருத்தைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1. ஊழ் இரண்டு வகைப்படும். ஒன்று நன்மைக்குக் காரணமாவது; மற்றொன்று தீமைக்குக் காரணமாவது.
2. செல்வத்தின் செழிப்பிற்கு ஆகூழும் செல்வத்தின் தேய்விற்குப் போகூழும் காரணங்களாகின்றன.
3. கற்ற கல்வியும் ஒருவனுக்குத் தன் ஊழின் காரணமாகவே பயன் தரும்.
4. ஊழினால் வரும் நுகர்ச்சி இல்லையெனில் வறுமையால் மனிதர்கள் துறவை நாடலாம். (பஞ்சத்திற்கு ஆண்டி என்ற மக்கள் வழக்கும் ஒப்பு நோக்கத்தக்கது.)
5. ஊழ் மிகுந்த வலிமையுடையது.

மேற்காட்டிய வகையில் ஊழின் இயல்புகளைச் சொல்லிச் செல்கிறார் வள்ளுவர்.

வள்ளுவரும் கோசாலரும்

வள்ளுவரின் ஊழ் பற்றிய கருத்து, மற்கலி கோசாலர் ஊழ் (நியதி) பற்றிச் சொல்லும் கருத்திலிருந்து முற்றாக மாறுபட்டு நிற்பதை இரண்டையும் ஒப்பிட்டுக் காணும்போது உணர முடிகின்றது.

கோசாலரின் கருத்துப்படி ஊழ் அனைத்து ஆற்றலும் கொண்டது. பிறவிக்குக் காரணமாக இருப்பது. பிறவிகள் தோறும் எவ்வளவுதான் நன்மைகள் செய்தாலும் ஊழ்வினையின் துணை இல்லாது போனால் பிறவித் தளையை அறுக்க முடியாது. சுருங்கக் கூறினால், கணியன் பூங்குன்றனார் கூறுவது போல், உயிர் ஊழின் இயக்கத்திற்கு ஏற்பவே இயங்கும்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்

என்ற குறளிலும் கூட தீயவன் வளத்தோடு வாழ்வதும், நல்லவன் வறுமையோடு உழல்வதும் நினைக்கப்படும் என்றே சொல்லுகின்றார். இக்குறளில் ஊழ்வினையின் தாக்கம் இருப்பதை பரிமேலழகர்,

இம்மை செய்தன யானறி நல்வினை
உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்து

என்ற சிலப்பதிகார அடிகளை மேற்கோளாகக் காட்டி உணர வைக்கின்றார்.
வள்ளுவர் ஊழ்வினையைப் பற்றித் தனி ஓர் இயல் அமைத்துப் பத்துக் குறட்பாக்களாகத் தொகுத்துக் கூறினாலும் கூட மற்கலி கோசாலர் வரையறுத்த ஊழ்வினை பற்றிய கோட்பாட்டைப் பின்பற்றவில்லை என்பது தெளிவு.

வள்ளுவர் கோசாலருக்குப் பிற்பட்ட காலத்தவராக இருந் திருப்பின், ஊழியலுள் வரும் கருத்துக்கள் ஆசீவகத்தின் தாக்கத்தோடு அமைந்திருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. கோப்பெருஞ்சோழன் கணியன் பூங்குன்றனார் இருவரும் கோசாலரின் நியதிக் கோட்பாட்டைப் பின்பற்றியதைப் போல வள்ளுவரும் பின்பற்றி இருக்கலாம். ஆனால் ஊழின் முழு வல்லமையை-அதாவது இன்ப துன்பம், ஆக்கம் இழப்பு, பிறப்பு இறப்பு ஆகிய அனைத்திற்கும் காரணமாக அமைந்த ஊழின் தலைமையை வள்ளுவர் குறிக்காததுடன் ஊழ்வினையின் ஆற்றலை மறுக்கும் கருத்துக்களையும் பல அதிகாரங்களுள் கூறியுள்ளார்.

கோசாலர் ஊழின் ஆற்றலை மக்கள் நடுவே பரப்பத் தொடங்கிப் பேரளவில் வெற்றியும் கண்டவர். இந்நிலையில் மகாவீரரும், புத்தரும் ‘இக்கோட்பாடு செல்வாக்குப் பெறுமானால் மனித வாழ்வில் முயற்சிக்கே இடமில்லாது போய்விடும்’ என்று பெரிதும் கவலைப்பட்டனர்.

வள்ளுவர் முயற்சி பற்றிக் கூறும் கருத்துக்களைத் தொகுக்கும் போது, அவர் வாழ்வின் வெற்றிக்குக் காரணமாக அமைவது மனித முயற்சிதான் என்ற கோட்பாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையைப் புரிந்து கொள்ளலாம்.

‘ஊக்கமுடைமை’ அதிகாரத்துள்,

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை

என்று அசைவிலா ஊக்கத்தை வலியுறுத்துவார். ‘ஆள்வினை உடைமை’ அதிகாரத்திலோ,

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்

என்று இடைவிடா முயற்சியின் ஆற்றலை எடுத்துக் காட்டுவார்.
ஊக்கமுடைமை, ஆள்வினை உடைமை என்ற இரண்டு அதிகாரங்களிலும் முயற்சியின் வெற்றியை உடன்பாடாகச் சொல்லுவார். ‘மடியின்மை’, ‘இடுக்கண் அழியாமை’ என்ற அதிகாரங்களுள் எதிர்மறையாக மனித முயற்சியைப் போற்றுகின்றார். குடியியலிலும் ‘குடிசெயல்வகை’ என்ற அதிகாரத்துள்,

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையால் நீளுங் குடி

என்று முயற்சியையும் அதற்குத் துணையாகிய ஆன்ற அறிவையும் எடுத்துக் காட்டுவார். வள்ளுவரின் கருத்தில் ‘முயற்சியின் இடத்தைக்’ காணும்போது பொருட்பால் முழுமையுமே மனித முயற்சியின் அடித்தளத்தில்தான் கட்டப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

இவ்வாறு பொருட்பால் முழுமையிலும் முயற்சியின் ஆற்றலை, அது நல்கும் பயனை விளக்குவதால், ஊழின் ஆற்றலைக் கோசாலரைப் போல வள்ளுவர் பெரிதாகக் கருதவில்லை என்பது தெளிவு.

துறவறவியலிலும் பல குறள்கள் ஊழ்வினைக்கு மாறாக அதாவது நியதிக் கோட்பாட்டிற்கு உடன்பாடில்லாத வகையில் அமைந்துள்ளன.

‘அவா அறுத்தல்’ என்ற அதிகாரத்துள்,

அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து

என்ற குறள் பிறப்பிற்குக் காரணம் ‘அவாவே’ என வற்புறுத்துகின்றது.
துறவு என்ற அதிகாரத்துள்ளும்,

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்; மற்று
நிலையாமை காணப் படும்

என்ற குறள்வழி பிறப்பினை அறுப்பது பற்றற்ற நிலைதான் என்பதை வற்புறுத்துவார்.

இவ்வாறு அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் பல அதிகாரங்களுள் ஊழின் ஆற்றலை வள்ளுவர் மறுப்பதுடன் ஊழ்வினையின் இலக்கணமாகச் சொல்லப்படும் அனைத்துக் கருத்துக்களுக்கும் எதிர்மறையான கருத்துக்களையே விளக்கிச் செல்கின்றார். எனவே, ஊழ் பற்றிய கருத்துக்கள் திருக்குறளில் இடம் பெற்றிருந்தாலும் அவை நியதிக் கோட்பாட்டை ஒட்டி அமையவில்லை. ஆதலால் வள்ளுவர் காலத்தில் தமிழகத்தில் நிலவிய ஊழ் பற்றிய சிந்தனையின் வளர்ச்சியே ‘ஆசீவகமாக’ உருப்பெற்றிருக்க வேண்டும் என்பது தெளிவு.

நன்றி: முனைவர் நெடுஞ்செழியன்; தமிழாயம் குழுமம்; முனைவர் இரவா.

4 comments:

Subbiah Veerappan said...

////1. ஊழ் இரண்டு வகைப்படும். ஒன்று நன்மைக்குக் காரணமாவது; மற்றொன்று தீமைக்குக் காரணமாவது.
2. செல்வத்தின் செழிப்பிற்கு ஆகூழும் செல்வத்தின் தேய்விற்குப் போகூழும் காரணங்களாகின்றன.
3. கற்ற கல்வியும் ஒருவனுக்குத் தன் ஊழின் காரணமாகவே பயன் தரும்.
4. ஊழினால் வரும் நுகர்ச்சி இல்லையெனில் வறுமையால் மனிதர்கள் துறவை நாடலாம். (பஞ்சத்திற்கு ஆண்டி என்ற மக்கள் வழக்கும் ஒப்பு நோக்கத்தக்கது.)
5. ஊழ் மிகுந்த வலிமையுடையது./////

இதில் ”வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும்
துய்த்தல் அரிது” எனும் குறளும் முக்கியமானது.
அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் குமரன்

குமரன் (Kumaran) said...

நன்றி வாத்தியார் ஐயா.

ராஜரத்தினம் said...

குமரன் அவர்களுக்கு,
நான் இப்பொழுதுதான் உங்களின் பதிவை பார்த்தேன். மிகவும் அருமை. எனக்கு இது பொன்ற செய்திகளைத்தான் அதிகம் வாசிக்க விருப்பம். நான் உங்களின் முதல் பதிவிலிருந்து ஆரம்பித்திருக்கிறேன். உங்களிடம் ஒரு வேண்டுகோள். திருமலை நாயக்கரை பற்றி நீங்கள் எழுத வேண்டும். காரணம் என்னவென்றால் அவர் தன் இறுதி காலத்தில் கிருத்தவ மதம் மாற விரும்பினார் என்று படித்ததாக ஞாபகம். அது உண்மையா? அது பொய்யாக இருக்க எனக்கு ஆசை. அது உண்மையென்றால் ஏன் அது நிறைவேறவில்லை. அல்லது அவர் கிருத்தவராகத்தான் இறந்தாரா?

குமரன் (Kumaran) said...

திருமலை நாயக்கரைப் பற்றி ஒன்றும் நிறைய தெரியாது இராதா. ஆனால் மதுரையில் கிறித்தவ சமய பிரச்சாரம் செய்ய பாதிரியார்களுக்கு அவர் தான் முதலில் அனுமதி தந்தார் என்று படித்திருக்கிறேன்.