Tuesday, June 16, 2009

கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 3 (நாதமுனிகள்)

ஆசார்ய பரம்பரையில் திருமகள் கேள்வன், திருமகள், சேனைமுதலியாராகிய விஷ்வக்சேனர், நம்மாழ்வார் என்ற நான்கு ஆசாரியர்களின் வாழித் திருநாமங்களை சென்ற இரு இடுகைகளிலும் பார்த்தோம். முதல் மூவர் விண்ணுலகத்தவர். நான்காவது ஆசாரியரான நம்மாழ்வார் இறைவனால் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் - அதனால் உள்ளதை உள்ளபடி உள்ளங்கை நெல்லிக்கனி போல் அறிந்து வேதங்கள் சொல்லாதவற்றையும் வேதங்களில் நேரடியாகச் சொல்லப்படாதவற்றையும் வேதங்களில் குழப்பம் தரும் பகுதிகளைத் தெளிவுறுத்துபவற்றையும் தன்னுடைய திருவாய்மொழி முதலான பாசுரங்களில் பாடி 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று பெயர் பெற்றவர். இப்பரம்பரையில் ஐந்தாவது ஆசாரியர் நாதமுனிகள். அவர் முதற்கொண்டு தொடர்ந்து ஆசார்ய பரம்பரை தடையில்லாமல் வந்து கொண்டிருக்கிறது. முதல் மூவர் விண்ணுலகத்தவர்; நான்காமவர் அவதாரமாகிய ஆழ்வார் என்பதால் மானுட ஆசாரியர்களில் இவரே முதல்வராக அமைகிறார். அதனால் இவரிடமிருந்தே வைணவ ஆசாரிய பரம்பரை தொடங்குவதாகக் கூறும் மரபும் உண்டு.

காட்டுமன்னார்குடி என்ற திருத்தலத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் பிறந்தவர் நாதமுனிகள். அவர் பிறந்த காலத்தில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற பாசுரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பாடப்பெற்று வந்தன. எல்லோரும் முறையாகப் பயின்று பாடும்படியாக அவை தொகுக்கப் பெறவில்லை. அனைத்து பாசுரங்களையும் அறிந்தவர் என்று ஒருவரும் காணப்படவில்லை. அப்படியிருக்கும் போது இத்திருத்தலத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு இறைவனை வணங்கவந்த அடியவர்கள் சிலர் 'ஆராவமுதே' என்று தொடங்கும் திருவாய்மொழியின் பத்து பாசுரங்களைப் பாடினார்கள். அப்பாசுரங்களின் அழகிலும் இனிமையிலும் பொருளாழத்திலும் கவரப்பட்ட இளைஞரான நாதமுனிகள் அப்பாடல்களைப் பற்றி அந்த அடியார்களிடம் விசாரிக்க அவர்கள் தாங்கள் கும்பகோணத்தில் இருந்து வருவதாகவும் அப்பாசுரங்கள் நம்மாழ்வாருடைய திருவாய்மொழிப் பாசுரங்கள் என்றும் அவை திருக்குடந்தைப் பெருமாளைப் பாடும் பாசுரங்கள் என்றும் அதனால் முன்னோர்கள் கற்றுக் கொடுத்துத் தங்களுக்குப் பாடமாயின என்றும் தெரிவித்தனர். அப்பாசுரங்களின் முடிவில் 'ஆயிரத்தில் இந்தப் பத்துப் பாசுரங்கள்' என்ற குறிப்பு வந்ததைக் கேட்டு அந்த ஆயிரம் பாசுரங்களும் அவர்களுக்குத் தெரியுமா என்று நாதமுனிகள் கேட்க, 'தெரியாது. ஆழ்வாரின் பிறந்த ஊரான திருக்குருகூர் ஆழ்வார் திருநகரிக்குச் சென்றால் கிடைக்கலாம்' என்று அவர்கள் கூறினார்கள்.

அதன்படியே நாதமுனிகள் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கும் ஆழ்வார் திருநகரிக்கு வந்து விசாரிக்க அங்கும் அவருக்கு அப்பாசுரங்கள் கிடைக்கவில்லை. நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வார் தன் ஆசாரியரின் மேல் எழுதிய 'கண்ணிநுண்சிறுத்தாம்பு' என்று தொடங்கும் பத்து பாசுரங்கள் மட்டுமே கிடைத்தன. அந்தப் பாசுரங்களைக் கற்றுக் கொண்டு நம்மாழ்வார் அமர்ந்திருந்த உறங்காப்புளியின் கீழ் அமர்ந்து அப்பாடல்களைப் பல்லாயிரம் முறை ஓதினார் நாதமுனிகள். அப்படி ஓதும் போது யோகதசையில் நம்மாழ்வார் நாதமுனிகளின் முன்பு தோன்றி தன்னுடைய திருவாய்மொழி மட்டும் இல்லாமல் மற்ற ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களையும் தந்தருளினார். அப்பாசுரங்களை எல்லாம் தொகுத்து முறைப்படுத்தி இசையமைத்து தன் மருமகன்களுக்கு அவற்றைக் கற்றுக் கொடுத்து அவர்கள் மூலமாக இசையுடன் கூடிய ஆழ்வார் பாசுரங்களை தமிழகம் எங்கும் பரவச் செய்தார் நாதமுனிகள்.

ஆனிதனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே
ஆளவந்தார்க்கு உபதேசம் அருளி வைத்தான் வாழியே
பானு தெற்கில் கண்டவன் சொல் பல உரைத்தான் வாழியே
பராங்குசனார் சொல் பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசக் கதி அளித்தான் வாழியே
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே
நலம் திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே

ஆனி மாதத்தில் அனுஷ நட்சத்திரத்தில் இந்த பூமியில் அவதரித்த நாதமுனிகள் வாழ்க. ஆனிதனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே.

ஆசாரிய பரம்பரையில் நாதமுனிகளுக்குப் பின்னர் பெரும் புகழ் பெற்றவர் அவருடைய பேரனான யாமுனமுனிகள் /யமுனைத்துறைவர் . அவருக்கு ஆளவந்தார் என்றும் ஒரு பெயர் உண்டு. தனக்கு நம்மாழ்வார் மூலமாகக் கிடைத்த உபதேசங்களை எல்லாம் ஆளவந்தாருக்குத் தக்க காலம் வரும் போது உபதேசிக்கும் படி தன் சீடரான உய்யக்கொண்டாரிடம் சொல்லி வைத்தார் நாதமுனிகள். உய்யக்கொண்டாரும் தனது சீடரான மணக்கால் நம்பியிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார். மணக்கால் நம்பி ஆளவந்தாருக்கு உபதேசம் செய்து தன் பரமகுருவின் கட்டளையை நிறைவேற்றினார். அப்படி ஆளவந்தாருக்காக உபதேசத்தை அவருக்குத் தகுந்த காலம் வருவதற்கு முன்னரே உபதேசித்து வைத்த நாதமுனிகள் வாழ்க. ஆளவந்தார்க்கு உபதேசம் அருளி வைத்தான் வாழியே.

அயோத்தி நகரில் வாழ்ந்து வரும் போது தென் திசையில் தோன்றிய பேரொளியைக் கண்டு தெற்கே வந்து நம்மாழ்வாரை ஆழ்வார் திருநகரியில் தரிசித்து அவருடைய சீடரானார் மதுரகவியாழ்வார். அவர் அருளிய 'கண்ணிநுண்சிறுத்தாம்பு' என்று தொடங்கும் பாசுரங்களை பல முறை ஓதி நம்மாழ்வாரிடம் இருந்து நாலாயிரப் பனுவல்களைப் பெற்றார் நாதமுனிகள். நம்மாழ்வார் என்னும் பகலவனைத் தெற்கில் கண்ட மதுரகவியாழ்வாரின் பாசுரங்களைப் பல முறை உரைத்தவன் வாழ்க. பானு தெற்கில் கண்டவன் சொல் பல உரைத்தான் வாழியே.

மதம் பிடித்துத் திரியும் யானையை அங்குசம் கொண்டு அடக்கி நல்வழியில் அழைத்துச் செல்வார்கள். அது போல் தீயவழியில் செல்லுபவர்களைத் திருத்தி நல்வழியில் சேர்க்கும் திருவாய்மொழியைத் தந்த நம்மாழ்வார் அங்குசத்தைப் போன்றவர். அதனால் அவர் திருப்பெயர் பராங்குசர். அவர் யோகதசையில் அருளிச் செய்த நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களையும் மிகவும் பரிவுடன் கற்றுக் கொண்டவர் நாதமுனிகள். பராங்குசனார் சொல் பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே.

பாடல்களை ஓதினால் அவ்வளவு எளிதாக மனதில் நிற்காது. அதே பாடல்களை இசையுடன் பாடினால் மிகவும் எளிதாக மனதில் நிற்கும். இசையுடன் பாடும் படி அமைந்த நாலாயிரம் பனுவல்களுக்கும் தகுந்த இசைமுறைகளை அமைத்து கீழையகத்து ஆழ்வான், மேலையகத்து ஆழ்வான் என்னும் தன்னுடைய இரு மருமகன்களுக்கும் கற்றுக் கொடுத்து அதன் மூலம் நாலாயிரம் பாசுரங்களும் உலகத்தில் பரவும் படி செய்தார் நாதமுனிகள். இசையுடன் பாடும் படி தாளம் அமைத்து நாலாயிரம் பனுவல்களையும் இசைத்தவர் வாழ்க. கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே.

மக்கள் மீது இருக்கும் கருணையினால் நம்மாழ்வாரிடமிருந்து தான் கற்ற யோக இரகசியங்களையும் மறைப்பொருட்களையும் அனைவரும் அறியும் படி ஒரு உபதேச வழிமுறையைத் தோற்றுவித்தார் நாதமுனிகள். கருணையினால் உபதேசக் கதி அளித்தான் வாழியே.

அந்த உபதேச வழிமுறையை உலகமெங்கும் பரப்பிட ஒரு ஆசாரிய பரம்பரையை நிலைநாட்டினார் நாதமுனிகள். எதற்கும் அசையாத மலையைப் போல் அரைகுறைத் தத்துவவாதிகளின் மிடுக்கினை எல்லாம் ஒடுக்கி தான் எப்போதும் போல் இருக்கும் ஆசாரிய பரம்பரை என்பதால் அதனை குருவரை (குரு மலை) என்று சொல்கிறது இந்த வாழித்திருநாமம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு வகையான நிலங்களை உடைய உலகத்தில் குரு பரம்பரை என்னும் மலையை நாட்டியவன் வாழ்க. நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே.

உயர்வற உயர்நலம் உடையவன் என்று இறைவனைச் சொல்வார் நம்மாழ்வார். எல்லாவிதமான கல்யாண குணங்களும் உடையவன் இறைவன். அவனைப் போன்ற கல்யாண குணங்கள் நிரம்பியவர் நாதமுனிகள். அவருடைய திருவடிகள் வாழ்க. நலம் திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே.

நாதமுனிகள் திருவடிகளே தஞ்சம்.

30 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

பிற ஆழ்வார்கள் அருளியாதும் நம்மாழ்வாராலேயே வெளிவந்தது என்பது எனக்கு இதுவரை தெரியாது. நன்றி குமரன்

Raghav said...

தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளல் நாதமுனிகள் திருவடிகளே சரணம்..

அரையர் சேவையை தொடக்கி வைத்தவர் நாதமுனிகள் என்றே நினைக்கிறேன்.

Radha said...

குமரன்,
மறுபடியும் ஒரு நேர்த்தியான இடுகை கண்டு மிக்க மகிழ்ச்சி. :)) பல சுவையான தகவல்களை தருகிறீர். பகவானை பற்றி பாடாமல் நம்மாழ்வாரை பற்றி மட்டுமே பாடி ஆழ்வார் ஆன மதுரகவி ஆழ்வார் பற்றியும், அவருடைய 'கண்ணிநுண்சிறுத்தாம்பு' பற்றியும் ஒரு இடுகை இட வேண்டுகிறேன். :)
~
ராதா

Radha said...

//அப்பாசுரங்களை எல்லாம் தொகுத்து முறைப்படுத்தி இசையமைத்து தன் மருமகன்களுக்கு அவற்றைக் கற்றுக் கொடுத்து அவர்கள் மூலமாக இசையுடன் கூடிய ஆழ்வார் பாசுரங்களை தமிழகம் எங்கும் பரவச் செய்தார் நாதமுனிகள்.//
நாத யோகம் இவருக்கு இயல்பாகவே கைகூடின ஒன்று என்று சொல்வர். அதனாலேயே நாதமுனிகள் என்று பெயர் பெற்றதாகவும் சொல்வர். குமரன், நீங்க பிரபந்த பாசுரங்களை (கோயில்களில் பாராயணம் செய்யும் முறையில் இல்லாமல்) இசை வடிவில் கேட்டதுண்டா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நாலாயிரமும் நம் ஊனக் கண்களுக்குக் காட்டுவித்த காட்டு மன்னார்குடி!
குருமுனிகள், யோகீஸ்வரர், ஸ்ரீமந் நாதமுனிகள் திருவடிகளே சரணம்!

சேமங்கொள் வீர நாராயண புரத்தான் வாழியே!
செல்வ முற்றும்_ஆனி தன்னில் அளித்தான் அவன் வாழியே!
தேமருவு தென்குருகூர் நகர் மாறன் தாள் வாழியே!
தேசமிகு சடகோபன் சரண் அடைந்தான் தாள் வாழியே!

நாம் உய்ய நாலாயிரத்தின் பொருள் அளித்தான் வாழியே!
நன்றாகத் தாளத்தில் இசைத்து உரைத்தான் வாழியே!
சீர் மிகுத்த யோகமுடைச் செல்வனார் தாம் வாழியே!
திருப் பொலிந்த நாதமுனி திருவடிகள் வாழியே!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆசார்ய பரம்பரையில் திருமகள் கேள்வன், திருமகள், சேனைமுதலியாராகிய விஷ்வக்சேனர், நம்மாழ்வார் என்ற நான்கு ஆசாரியர்களின் வாழித் திருநாமங்களை சென்ற இரு இடுகைகளிலும் பார்த்தோம்//

ஒவ்வொரு இடுகையின் அடிக்குறிப்பில் அனைத்து சுட்டிகளையும் தர வேண்டுகிறேன் குமரன்!

//திருவாய்மொழியைத் தந்த நம்மாழ்வார் அங்குசத்தைப் போன்றவர்//

நம்மாழ்வார் சேனை முதலியார் என்னும் விஷ்வகசேனரின் அம்சம் என்றும் சொல்லுவார்கள்! அதனால்
அங்குசம், கஜமுகம் எல்லாம் இங்கும் மிகவும் பொருந்தியே வருகிறது! :))

நாதமுனிகள், காட்டுமன்னார் கோயில், ஆழ்வார் பாசுரம் பண்ணோடு இசைத்தல், ஆயிரத்தில் ஒரு பத்து மட்டும் முதலில் கேட்டல் - எல்லாம் பொன்னியின் செல்வனில், முதல் பாகத்திலேயே வரும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இளைஞரான நாதமுனிகள் அப்பாடல்களைப் பற்றி அந்த அடியார்களிடம் விசாரிக்க அவர்கள் தாங்கள் கும்பகோணத்தில் இருந்து வருவதாகவும் அப்பாசுரங்கள் நம்மாழ்வாருடைய திருவாய்மொழிப் பாசுரங்கள் என்றும்//

குமரன்
நாதமுனிகள் குடந்தை சென்றிருந்த போது இதைக் கேட்டு அதிசயித்து தேட முயன்றாரா?
இல்லை காட்டுமன்னார்கோயிலில் கேட்டறிந்தாரா?
ஏன் கேட்கிறேன் என்றால், குடந்தை ஆராவமுதனைத் தான் நாலாயிரத் தூண்டு பொருளாக உவமித்துச் சொல்வது வழக்கம்! அதான்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நாலாயிரம் பனுவல்களுக்கும் தகுந்த இசைமுறைகளை அமைத்து கீழையகத்து ஆழ்வான், மேலையகத்து ஆழ்வான் என்னும் தன்னுடைய இரு மருமகன்களுக்கும் கற்றுக் கொடுத்து//
//இசையுடன் பாடும் படி தாளம் அமைத்து நாலாயிரம் பனுவல்களையும் இசைத்தவர்//

இந்த இசை அமைப்பு, அதன் பண்கள் பற்றிய குறிப்பு இருக்கா குமரன்?

ஏன் கேட்கிறேன்னா, இன்று பெருமாள் கோயில்களில் தமிழ்ப் பாசுரங்களை வேதமந்திரம் போல் அதிர்வலைகளோடு ஓதுகிறார்கள்! அரையர் சேவையிலும் ஓதலும் அபிநயமும் தான் உள்ளது!

இன்னின்ன பாசுரம் இந்த ராகம், இந்தப் பண் வகையைச் சேர்ந்தது என்ற குறிப்புகள் இருக்கா? அதைக் கொண்டு ஓத மட்டுமே செய்யாது பாட முடியுமா?

தேவாரப் பதிகங்களுக்கு காந்தாரம், இந்தளம், நட்டராகம், பைரவி என்றெல்லாம் பண்கள் உள்ளன. அதே போல் பாசுரங்களுக்கும் உண்டா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தேவாரத் திருமுறைகளுக்கும், நாலாயிர அருளிச் செயல்களுக்கும் என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்! இரண்டுமே காலத்தின் கோலத்தால் தொலைந்து போய், அங்கொன்றும் இங்கொன்றுமாகவே வாய்மொழியாகப் பாடப்பட்டன!

பின்னர் நாதமுனிகள், நம்பியாண்டார் நம்பி போன்ற அடியார்கள் முயற்சியால் தான் அனைத்தும் ஒன்றாகத் திரட்டப்பட்டன!

கால வெள்ளத்தால் தேவாரத் திருமுறையும் நாலாயிரப் பனுவல்களும் நமக்கு கிடைக்காமேலே போயிருந்தால்? - ஐயகோ! நினைச்சிக் கூடப் பார்க்க முடியலை!

இதனை நமக்கு கிடைக்க வைத்து நாட்டி அருளிய நாதமுனிகள் திருவடிகளே சரணம்!
நம்பியாண்டார் நம்பி திருவடிகளே சரணம்!

R.DEVARAJAN said...

’காளம் வலம்புரியன்ன நற்காதல் அடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ் மறை இன்னிசை தந்த’ வள்ளலின் சரிதத்தை
வாழித்திருநாமங்களோடு இணைத்துச் சொல்லியிருக்கும் உத்தி அருமையாக உள்ளது.

தேவ கானத்தால் பல்வேறு பண்களில் முற்காலத்தில் பாடப்பட்டு வந்தது என்று தெரிகிறது.

தேவ்

Radha said...

Ravi said...
//நாதமுனிகள், காட்டுமன்னார் கோயில், ஆழ்வார் பாசுரம் பண்ணோடு இசைத்தல், ஆயிரத்தில் ஒரு பத்து மட்டும் முதலில் கேட்டல் - எல்லாம் பொன்னியின் செல்வனில், முதல் பாகத்திலேயே வரும்!//
ஆம் ரவி ! நாதமுனிகள் காட்டுமன்னார் கோயிலில் ஒரு பாலகனாக இருந்த பொழுது, "பொலிக பொலிக பொலிக" என்று தொடங்கும் திருவாய்மொழி பாசுரங்களை கேட்டதாக வரும். இது அமரர் கல்கி அவர்களின் அதிசயமான கற்பனையா அல்லது உண்மை நிகழ்ச்சியா என்பது தெரியாது. பின்னாளில் தான் கோயில் அர்ச்சகராக பணியாற்றி வரும் வேலையில் ஒரு பக்தர்கள் குழு "ஆராவமுதே" பாசுரங்களை பாடக் கேட்டு,கடைசி பாசுரத்தில் "குருகூர் சடகோபன்" என்பதை குறியாகக் கொண்டு, குருகூர் சென்றதாக சொல்வர். "ஆராவமுதே" பாசுரங்களை நாதமுனிகள் யாத்திரை சென்ற பொழுது கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் கேட்டதாகவும் சொல்வர்.
~
ராதா

Radha said...

Ravi said...
//இன்னின்ன பாசுரம் இந்த ராகம், இந்தப் பண் வகையைச் சேர்ந்தது என்ற குறிப்புகள் இருக்கா? அதைக் கொண்டு ஓத மட்டுமே செய்யாது பாட முடியுமா?//
ரவி, தங்கள் கேள்வியில் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, இசையுடன் பாடுவது பற்றி சில செய்திகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சென்னை புறநகர் பகுதியில் ஒரு தேவகான பாடசாலையில் இசையுடன் பிரபந்தம் சொல்லி தருகிறார்கள். கர்நாடக சங்கீதம் என்று நினைக்கிறேன். ஆனால் ராகம், பண் பற்றி எல்லாம் எனக்கு அறிவு கிடையாது. மேல்கோட்டை திரு நாராயணபுரத்தில் அரையர் சேவை செய்து வந்த ஒருவர் (தற்போது இல்லை) தொடங்கிய பாடசாலை.

நம்மிடையே பிரபலமாக திகழும் இசை வடிவுடன் கூடிய பாசுரங்கள் என்றால்:
1. திருப்பாவை - M.L.V
2. M.S அவர்கள் பாடிய சில விருத்தங்கள்:
- "தாழ் சடையும் நீள் முடியும்"
- "குலம் தரும் கல்வி தரும்"
3. M.S அவர்கள் ராகமாலிகையில் பாடிய "பாடி பற" என்று முடியும் பெரியாழ்வார் பாசுரங்கள்.
(முடியொன்றி மூவுலகும்...)
4. ஜானகி ராமானுஜம் என்றொரு இசைக் கலைஞர் பாடிய சுமார் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட பாசுரங்கள்.

எனக்கு தெரிந்த அளவில் இவ்வளவே . நண்பர்கள் வேறு எவருக்கும் இசையுடன் பாசுரங்கள் பற்றி தெரிந்து இருந்தால் பகிர்ந்து கொள்ளவும். இசையுடன் கேட்பதில் அலாதி இன்பம் உள்ளது. :)
~
ராதா

குமரன் (Kumaran) said...

ஆமாம் சந்திரமௌலி. நாதமுனிகள் யோகநிலையில் நம்மாழ்வாரிடமிருந்தே நாலாயிரமும் கற்று கொண்டார் என்பது மரபு.

குமரன் (Kumaran) said...

நானும் அப்படித் தான் நினைக்கிறேன் இராகவ். ஏனெனில் உடையவரைத் திருவரங்கனுக்காக திருவத்தியூரானிடம் பெறுபவர் திருவரங்கத்து அரையர் என்று படித்திருக்கிறோமே. அதனால் நாதமுனிகள் காலத்திலேயே அரையர் சேவை தொடங்கியிருக்கலாம். தேவ் ஐயாவும் இரவிசங்கரும் உறுதிபடுத்துவார்கள் என்று நினைக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

இராதா,

மதுரகவியாழ்வாரைப் பற்றி எனக்குத் தெரிந்த வரையில் 'பொருநைத் துறைவன்' என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன். இதே கூடல் பதிவில் தேடிப் பாருங்கள். கிடைக்கவில்லையெனில் தொடுப்பு/சுட்டியைத் தருகிறேன்.

அவர் பாடிய பாசுரங்களைப் பற்றி விரைவில் இடுகிறோம். அந்த வாய்ப்பு அடியேனுக்கா இரவிசங்கருக்கா மற்றவருக்கா என்று பார்க்கலாம். :-)

குமரன் (Kumaran) said...

அண்மைக்காலத்தில் சில இசைவாணர்கள் பாடிய வடிவில் தான் பாசுரங்களை இசைவடிவில் கேட்டிருக்கிறேன். கோவில்களில் சந்தை கூறும் முறையிலேயே கேட்டிருக்கிறேன் இராதா.

குமரன் (Kumaran) said...

நாதமுனிகள் மேல் இருக்கும் மற்ற வாழித் திருநாமத்தையும் தந்ததற்கு நன்றி இரவி. அதற்கு பொருளுரையும் சொல்லுங்கள்.

Radha said...

kumaran said...
//மதுரகவியாழ்வாரைப் பற்றி எனக்குத் தெரிந்த வரையில் 'பொருநைத் துறைவன்' என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன். இதே கூடல் பதிவில் தேடிப் பாருங்கள்.//

குமரன்,
நான் மிக பொறுமையாக, நண்பர் ரவி மற்றும் உமது பதிவுகளை வாசித்து வருகிறேன். எப்படி இவ்வளவு நாட்கள் கண்களில் படாமல் போயின என்பது தெரியவில்லை.

பொதுவாக இருவர் பதிவுகளுமே (ஒவ்வொரு கோணத்தில்) நிறைய ரசிக்கும்படி உள்ளது. :)

மெல்ல இங்கு வருகை தரும் ஏனையோர் பதிவுகளும் படிக்க வேண்டும்.

~
ராதா

Radha said...

kumaran said...
//அவர் பாடிய பாசுரங்களைப் பற்றி விரைவில் இடுகிறோம். அந்த வாய்ப்பு அடியேனுக்கா இரவிசங்கருக்கா மற்றவருக்கா என்று பார்க்கலாம். :-)//

பொடி வைத்து பேசுகிறீர். :) அந்த வாய்ப்பு எமக்கு விரைவில் இல்லை என்றாலும் நிச்சயமாக உண்டு என்று என் ஆருயிர் தோழன் கிரிதாரி சொல்கிறான். :)

இங்கு ஆழ்வார் பாசுரங்கள் வாசி யாருக்கு அதிகம் உண்டு என்று பார்த்தால் பெயரிலேயே கண்ணபிரானை கொண்டுள்ளவர் உம்மை முந்தி விடுவார் என்று தோன்றுகிறது குமரன். (வந்ததுக்கு எதையாவது கிளப்பி விட்டு போக ஆசை. :). ரவி, தயவு செய்து பெரியோர் யாரிடமாவது சென்று திரிஷ்டி சுற்றி போட்டுக் கொள்ளவும். நிறைய கண் வைத்து விட்டேன். :))
~
ராதா

Unknown said...

//அதனால் நாதமுனிகள் காலத்திலேயே அரையர் சேவை தொடங்கியிருக்கலாம்.//

அதில் ஐயத்திற்கிடமில்லை;அவர் காலத்தில் தொடக்கம் பெற்று
ஆளவந்தார் காலத்திலும் வளர்ச்சி பெற்றது.
‘நடமினோ ....நாமுமக்கறியச் சொன்னோம் ....’ என்பதை
ஸ்வாமி ஆளவந்தாரை நோக்கியபடி
அரையர் சேவிக்க, ஆளவந்தார்
திரு அநந்தபுரம் கிளம்பினார் என்பது குருபரம்பரைச் செய்தி.

தேவ்

குமரன் (Kumaran) said...

நீங்கள் சொன்ன மாதிரி செய்ய வேண்டும் இரவி. 'வகைகள்' கொண்டு தொடர்களைப் படிப்பார்கள் என்று நினைத்து விடுகிறேன்; ஆனால் புதிதாக பதிவிற்கு வருபவர்களுக்கு அது உடனே தெரியாது என்பதால் சுட்டிகள்/தொடுப்புகள் கொடுத்தால் நல்லது தான். ஒரு நாள் உட்கார்ந்து செய்ய வேண்டும்.

ஆமாம் இரவி. நம்மாழ்வார் சேனைமுதலியாரின் அம்சம் என்று சொல்வார்கள். பொன்னியின் செல்வனில் படித்ததும் நினைவில் இருக்கிறது.

குமரன் (Kumaran) said...

நான் படித்த வரையில் காட்டுமன்னார் கோவிலுக்கு வந்த அடியவர்கள் பாடிய பாசுரங்களைக் கேட்டுத் தான் நாதமுனிகள் திருவாய்மொழியின் ஆயிரம் பாசுரங்களைத் தேடினார். ஆனாலும் 'ஆராவமுதே' என்று தொடங்கும் பத்து பாசுரங்கள் திருக்குடந்தைப் பாசுரங்கள் ஆதலால் ஆராவமுதப் பெருமாளையே நாலாயிரம் தந்தவனாகச் சொல்லும் மரபு உண்டு என்று நினைக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

இசையைப் பற்றிய குறிப்புகள் எனக்கு ஏதும் தெரியாது இரவி. உங்களுக்குத் தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.

குமரன் (Kumaran) said...

நன்றி தேவ் ஐயா.

குமரன் (Kumaran) said...

தேவகான பாடசாலையைப் பற்றி சொன்னதற்கு நன்றி இராதா.

குமரன் (Kumaran) said...

ஆமாம் இராதா. நிறைய எழுதியிருக்கிறோம். மெதுவாகப் பொறுமையாகப் படித்து பாருங்கள். இரவியோட பதிவுகள் என் பதிவுகளை விட எளிமையாகவும் வண்ணமயமாகவும் இருக்கும். புதிதாக சமய தத்துவ ஆன்மிகத்தைப் பற்றி படிப்பவர்களுக்கு அவருடைய இடுகைகள் மிகப் பொருத்தம். கொஞ்சமேனும் இவற்றில் ஈடுபாடு இருப்பவர்களுக்கே என் இடுகைகள் சுவைக்கும்.

நீங்கள் சொன்னது போல் மற்றவர் பதிவுகளையும் ஒவ்வொன்றாகப் பாருங்கள். சுவையாக இருக்கும்.

உங்கள் இடுகைகளுக்கும் பின்னூட்டம் இடவேண்டும் என்று ஆவல். பின்னூட்டப் பெட்டியைத் திறந்துவிட்டீர்களா?

குமரன் (Kumaran) said...

பொடி எல்லாம் வைத்துப் பேசவில்லை இராதா. நிறைய தொடர்களைத் தொடங்கி எல்லாம் பாதியில் நிற்கிறது. ஒவ்வொன்றாக எழுதி வருகிறேன். அதனால் எப்போது கண்ணிநுண்சிறுத்தாம்பு பாசுரங்களைப் பார்க்கும் வாய்ப்பு வரும் என்று தெரியவில்லை. நாம் எல்லோருமே எழுதலாம்; ஆனால் யார் எழுத முதலில் வாய்க்கிறது என்பது தெரியவில்லை.

இரவிசங்கரை 'அகில உலக ஆன்மிக சுப்ரீம் ஸ்டார்' என்று அழைப்போம். நீங்கள் சொன்னதைப் போல் பாசுரங்களில் அவருக்கும் நிறைய பயிற்சி உண்டு. பாசுரங்கள் மட்டுமின்றி பதிகங்களிலும்.

குமரன் (Kumaran) said...

யமுனைத்துறைவர் காலத்திலும் அரையர் இருந்தார் என்ற செய்தியைச் சொன்னதற்கு நன்றி தேவ் ஐயா.

Radha said...

//உங்கள் இடுகைகளுக்கும் பின்னூட்டம் இடவேண்டும் என்று ஆவல்.பின்னூட்டப் பெட்டியைத் திறந்துவிட்டீர்களா?// //

நன்றி குமரன் ! நான் இன்னமும் யோசித்து கொண்டு இருக்கிறேன். :-)

Radha said...

//இரவிசங்கரை 'அகில உலக ஆன்மிக சுப்ரீம் ஸ்டார்' என்று அழைப்போம்.//
இந்த பட்டம் என்னை அவருடைய பதிவிற்கு செல்ல தூண்டியது. "ஓம்" என்பது பற்றிய 4-வது தொடரில் அவருடைய பின்னூட்டங்கள் மிகவும் குழப்பமாக இருந்தன.இது தான் சாக்கு என்று இரு பெரிய பின்னூட்டங்கள் அளித்து மேலும்
குழப்பி விட்டு வந்துவிட்டேன். :-)