Saturday, June 13, 2009

கலித்தொகை காட்டும் சிவசக்தியின் ஊழிக்கூத்து - 2


கலித்தொகையின் கடவுள் வாழ்த்தாக கலித்தொகையைத் தொகுத்த 'மதுரையாசிரியன் நல்லந்துவனார்' இயற்றிய 'ஆறறி அந்தணர்' என்று தொடங்கும் கடவுள் வாழ்த்தினைச் சென்ற பகுதியிலிருந்து பார்த்து வருகிறோம். அந்தப் பாடலின் முதல் நான்கு அடிகளுக்கான விளக்கங்களைச் சென்ற இடுகையில் பார்த்தோம். இந்த இடுகையில் மற்ற அடிகளுக்கான விளக்கங்களைக் காண்போம்.

ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து
தேறு நீர் சடைக்கரந்து திரிபுரம் தீ மடுத்து
கூறாமல் குறித்து அதன் மேல் செல்லும் கடுங்கூளி
மாறாப்போர் மணிமிடற்று எண் கையாய் கேள் இனி
படுபறை பல இயம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி ஆடுங்கால் கோடு உயர் அகல் அல்குல்
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ
மண்டு அமர் பல கடந்து மதுகையான் நீறு அணிந்து
பண்டரங்கம் ஆடுங்கால் பணை எழில் அணை மென் தோள்
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ
கொலை உழுவைத் தோல் அசைஇக் கொன்றைத் தார் சுவற்புரளத்
தலை அம் கை கொண்டு நீ காபாலம் ஆடுங்கால்
மு(ல்)லை அணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ
என ஆங்கு
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை
மாண் இழை அரிவை காப்ப
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி.


'வாழும் வழிமுறைகளை அறியும் அந்தணர்களுக்கு அரிய மறைகள் பலவும் பகர்ந்து, தெளிந்த நீரைச் சடையில் மறைத்து, திரிபுரங்களைத் தீ மடுத்து, மொழியாலும் நினைவாலும் எட்ட இயலாத கடுமையான கூளி எனும் தோல்வியில்லாத கடும்போரினை நடத்தும் கரியமணி போன்ற கழுத்தினை உடைய எட்டுகைகளைக் கொண்டவனே இனி நான் சொல்வதைக் கேட்பாய்' என்று இறைவனை முன்னிலை விளியில் விளித்துப் பாடலைப் பாடுகிறார் நல்லந்துவனார்.

பாடுகிறார் என்று சொன்னது வெறும் எழில் வார்த்தை இல்லை. இப்பாடல் இசையுடன் பாடப்பட்டதே என்று முன்னோர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள். பாடல் வரிகளைப் பார்த்தாலும் இது இசைப்பா என்பது புரியும்.

எண் தோள் ஈசன் ஊழிக்கூத்து ஆடும் போது ஒலி மிக்க பல பறைகள் ஒலி செய்கின்றன. அவன் திருக்கையினில் இருக்கும் உடுக்கையும் இங்கே சொல்லப்பட்ட பறைகளில் ஒன்று - அதுவும் ஓங்கி ஒலிக்கின்றது. படுபறைகள் பல இயம்ப இறைவன் ஆடும் போது மாறி மாறிப் பல்வேறு வடிவங்களும் காட்டுகின்றான். அவன் காட்டும் அவ்வடிவங்கள் எல்லாம் அண்டங்களின் வடிவங்கள். அவை ஒவ்வொன்றையும் மீண்டும் தன்னுள்ளே ஒடுக்கிக் கொள்கின்றான். அப்படி ஒடுக்கத்திற்காக அவன் ஆடும் ஆட்டம் கொடியதாக 'கொட்டி' என்னும் ஆட்டம். இதனைப் புலவர் 'படுபறை பல இயம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ கொடு கொட்டி ஆடும்' என்று குறிக்கிறார்.

எல்லா அண்டங்களும் இறைவனிடமிருந்தே தோன்றி அவனுள்ளே ஒடுங்குவதால் 'பல்லுருவம் பெயர்த்து' என்றார் புலவர். 'நீல மேனி வால் இழைப் பாகத்து ஒருவன் இரு தாள் நிழல் கீழ் மூவகை உலகும் முகிழ்த்தன முறையே' என்று ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து அண்டங்களெல்லாம் சிவபெருமானிடத்திலிருந்து தோன்றுவதைக் காட்டும். 'மணி மிடற்று அந்தணன் தாவில் தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகே' என்று அகநானூற்றின் கடவுள் வாழ்த்து உலகங்களெல்லாம் நிலைபெற்றிருப்பது சிவபெருமானின் திருவடி நிழலில் என்று சொல்லும்.

'போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்' என்றும், 'போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்' என்றும் திருவாசகத்தின் பகுதியான திருவெம்பாவை பாடும்.

அப்படி யாவையும் ஒழிக்கும் காலத்தில் இறைவன் கொட்டி என்னும் ஆட்டத்தை ஆடும் போது அவன் அருகில் உமையன்னை இருந்து தாளத்தின் நிறைவினைக் குறிக்கும் சீரைத் தருவாளோ என்று புலவர் கேட்பது அன்னை அருளுருவாக இருக்க உலகனைத்தையும் நீ அழிக்கும் போது அதற்கு துணை போவாளோ என்று கேட்பது போல் இருக்கிறது. ஆனால் உலகெல்லாம் அழிந்து போனபடியால் அவளைத் தவிர தாளத்தின் காலங்களை உணர்த்த வேறு யாரும் இல்லை என்றும் சொல்வது போலவும் இருக்கிறது.

பக்கங்களில் உயர்ந்து அகன்ற அல்குலையும் கொடி போன்ற நுண்மையான இடுப்பினையும் கொண்டவள் உமையம்மை என்று அன்னையின் எழிலுருவை இந்த இடத்தில் புகழ்கிறார் புலவர்.

முடிவில்லாத பல போர்களையும் வென்று அந்த வலிமையால் பகைவரின் வெந்த உடலின் நீற்றினை அணிந்து நீ பாண்டரங்கம் என்னும் கொடிய ஆட்டத்தை ஆடும் போது மூங்கிலைப் போன்ற வடிவினை உடைய தோள்களையும் வண்டுகள் ஒலிக்கும் கூந்தலையும் உடைய உமையம்மை தாளத்தின் இடைக்காலத்தை உணர்த்தும் தூக்கினைத் தருவாளோ? அங்கு தான் வேறு யாரும் இல்லையே. அவள் தான் தரவேண்டும்.

கொல்லும் தொழிலையுடைய புலியை நீ கொன்று அதன் தோலை உடுத்துக் கொண்டு கொன்றைப்பூவால் செய்த மாலை தோளிலே அசைய, அயனுடைய (பிரம்மனுடைய) தலையைக் கையிலே ஏந்திக் கொண்டு நீ 'காபாலம்' என்னும் கூத்தினை ஆடும் போது முல்லையை ஒத்த புன்முறுவலை உடையவளோ தாளத்தின் தொடக்கத்தினைக் குறிக்கும் பாணியைத் தருவாள்? அவள் தான் தரவேண்டும். அப்போது தான் வேறு யாரும் இல்லையே.

கொட்டி, பாண்டரங்கம், காபாலம் என்னும் இந்த மூவகை ஆட்டங்களைப் பற்றியும் சிலப்பதிகாரம் பேசுகின்றது என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். அப்போது கொட்டியென்பது உலகை அழிக்கும் தொழிலின் போது ஆடும் கூத்து என்றும், பாண்டரங்கம் என்பது திரிபுரத்தை அழித்த போது ஆடிய கூத்து என்றும், காபாலம் என்பது அயன் தலையைக் கொய்த போது ஆடிய கூத்து என்றும் சொல்கிறதாம்.

அயன் உலகைப் படைக்கும் தொழிலை உடையவன் என்பதால் அவன் தலையைக் கொய்த பின் ஆடும் ஆட்டமான காபாலத்திற்கு 'பாணி' என்னும் தாளத் தொடக்கத்தை உமையம்மை தருகிறாள் போலும்.

தீமையை அழித்து நன்மையைக் காத்த நிகழ்வாகத் திரிபுரம் எரித்தது அமைவதால் அப்போது ஆடும் பாண்டரங்கத்திற்கு 'தூக்கு' என்னும் தாளத்தின் இடைநிலையைத் தருகிறாள் போலும் உமையன்னை.

உலகெல்லாம் அழிந்து நீறாகப் போகும் நிலையில் ஆடும் ஆட்டம் 'கொட்டி' என்பதால் அந்த நேரத்தில் தாளத்தின் முடிவான 'சீரினை'த் தருகிறாள் போலும் அம்மை.

ஆணவம் மிகுந்த போது அதனை அழித்த கூத்து முதலாவதான காபாலம். பிறருக்குத் தீங்கு விளைத்தாரை அழித்த கூத்து இரண்டாவதான பாண்டரங்கம். அனைத்தையும் அழித்த கூத்து மூன்றாவதான கொட்டி.

இப்படியாக அழிக்கும் தொழிலை நிகழ்த்தும் ஆட்டங்களை நீ ஆடும் போது அவைகளுக்கு உரிய 'பாணி', 'தூக்கு', 'சீர்' என்னும் தாள காலங்களை சிறப்பான அணிகலன்களை அணிந்த அம்மை காத்து நிற்க, நீ ஆடுகின்றாயோ? அன்னை அப்போது அருகிருக்கும் அருட்செயலினால் தான் போலும் நீ வெம்மையை நீக்கி அன்பற்ற பொருளான எமக்கும் அருள் தர ஒரு உருவோடு வந்து எதிர் நின்றாய்.

சிவபெருமானை வடமொழி வேதம் புகழவில்லை; உருத்திரனைத் தான் போற்றுகிறது. ஆனால் சங்கத் தமிழ் இலக்கியங்களோ உருத்திரனைப் போற்றவில்லை; சிவபெருமானையே போற்றுகின்றது என்று சில அன்பர்கள் கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த சங்கப் பாடல் மிகவும் விரிவாக சிவபெருமானின் உருத்திரத் திருக்கோலத்தைப் பாடிப் போற்றுகிறது. நுணிகிப் பார்த்தால் உருத்திரக் கோலத்தைப் போற்றும் சங்கப் பாடல்களும் மிகுதியாக இருப்பது புலப்படுகிறது.

8 comments:

R.DEVARAJAN said...

காபாலம்,பாண்டரங்கம்,கொட்டி என்னும் வரிசையில் அமைத்துப் பொருள் கூறியது நன்கு புரியும்படி உள்ளது;
இதுகாறும் இவற்றை அறிந்துகொள்ளும்
வாய்ப்புக் கிடைத்திலது.
மிக்க நன்றி குமரன்.

தேவ்

வித்யாஷ‌ங்கர் said...

verynice explanation thanku

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நுணிகிப் பார்த்தால் உருத்திரக் கோலத்தைப் போற்றும் சங்கப் பாடல்களும் மிகுதியாக இருப்பது புலப்படுகிறது.//

ஆமாம் குமரன்!
அம்பலவாணரான ஈசனைப் பற்றியோ, மணக்கோல சுந்தர ஈசனைப் பற்றியோ அதிகப் பாடல்கள் இல்லை!

ஊழிக் கூத்தும், ஆலமர் கடவுளுமாகவே சங்கப் பாடல்கள் உள்ளன! அழித்தல் தொழில் என்பதையே முன்னிறுத்திக் காட்டுகின்றன! இதன் அடியொற்றியே சங்க காலத்துக்குப் பின் உடனே வந்த முதல் தேவாரக் கவிதாயினி...காரைக்கால் அம்மையாரும் இதே கூத்தினைப் பற்றியே அதிகம் பேசுகிறார்!

மெளலி (மதுரையம்பதி) said...

நல்ல இடுகை குமரன்.

//சிவபெருமானை வடமொழி வேதம் புகழவில்லை; உருத்திரனைத் தான் போற்றுகிறது//

தவறு, இவ்வாறு சொல்பவர்கள் ருத்ரம்/மஹன்யாஸம் போன்றவற்றை இன்னும் ஆழ்ந்து படிக்க வேண்டும் வேண்டும் என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

குமரன் (Kumaran) said...

உண்மை தேவ் ஐயா. எனக்கும் இந்தப் பாடலைப் படிப்பதற்கு முன்னர் இந்த மூவகை கூத்துகளைப் பற்றியும் தெரியாது. உண்மையைச் சொல்வதென்றால் இந்தப் பாடலின் உரையைப் புரிந்து கொள்ள எனக்கு வெகு நாட்கள் ஆனது. மூன்று நான்கு முறை படித்த பின்னர் தான் புரிந்தது. :-)

குமரன் (Kumaran) said...

பாராட்டிற்கு மிகவும் நன்றி வித்யா ஷங்கர் அம்மா. மூன்று நான்கு முறை படித்து இந்த விளக்கங்களை எழுதிய உழைப்பின் பயன் கிடைத்ததாக உங்கள் பாராட்டினால் உணர்கிறேன்.

குமரன் (Kumaran) said...

நீங்கள் சொல்வது சரி தான் இரவி. ஆனால் எப்படியோ வடமொழி உருத்திர திருக்கோலத்தைப் பற்றியே பேசுவதாகவும் தமிழ் சுந்தரத் திருக்கோலங்களையே பேசுவதாகவும் அதனால் வடமொழி வேதங்கள் சொல்லும் சிவனும் தமிழ் நூல்கள் சொல்லும் சிவனும் வெவ்வேறு என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது.

குமரன் (Kumaran) said...

உண்மை மௌலி. நானும் நீங்கள் சொன்ன நூல்களை இன்னும் படிக்க வேண்டும். படித்ததில்லை.