Friday, June 12, 2009

கலித்தொகை காட்டும் சிவசக்தியின் ஊழிக்கூத்து - 1


எல்லா உலகங்களுக்கும் முதல் காரணமாகவும் அதே நேரத்தில் தனக்கு வேறெதுவும் காரணம் இன்றித் தான் அநாதியாகவும் விளங்குபவன் சிவபெருமான். அநாதி மட்டுமின்றி அனந்தனும் ஆனவன்; அவனுக்கு அழிவும் கிடையாது. அவனே படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலையும் ஆற்றும் முதல்வன். ஊழிக் காலத்திலே அனைத்தையும் தனக்குள் ஒடுக்கி வைத்துக் கொண்டு மீண்டும் தோற்றுவிப்பவன் அவனே. ஊழிப்பெருங்கூத்தினை அவன் ஆடி உலகனைத்தையும் அழித்து வரும் வேளையிலே அன்னை பராசக்தியின் அருள் நிறைந்த பார்வையினைக் கண்டுப் படிப்படியாக வேகம் குறைந்து அமைதி அடைந்து ஆதிசக்தியின் துணையோடு அனைத்துலகையும் மீண்டும் படைப்பான். ஊழிப் பெருங்கூத்தை சிவபெருமான் ஆடுவதையும் அப்போது உமையன்னை அருகிருந்து அவனை அமைதிப்படுத்துவதையும் மிக அழகான ஓவியமாக கலித்தொகையின் கடவுள் வாழ்த்தில் காட்டுகிறார் 'மதுரை ஆசிரியன்'
என்ற சிறப்புப் பெயர் பெற்ற நல்லந்துவனார் என்னும் புலவர். இவரே இக்கலித்தொகை என்ற நூலில் நெய்தல் திணைக்கு உரிய பாடல்களைப் பாடி இக்கலித்தொகை என்னும் நூலினைத் தொகுத்தவர்.

ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து
தேறு நீர் சடைக்கரந்து திரிபுரம் தீ மடுத்து
கூறாமல் குறித்து அதன் மேல் செல்லும் கடுங்கூளி
மாறாப்போர் மணிமிடற்று எண் கையாய் கேள் இனி
படுபறை பல இயம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி ஆடுங்கால் கோடு உயர் அகல் அல்குல்
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ
மண்டு அமர் பல கடந்து மதுகையான் நீறு அணிந்து
பண்டரங்கம் ஆடுங்கால் பணை எழில் அணை மென் தோள்
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ
கொலை உழுவைத் தோல் அசைஇக் கொன்றைத் தார் சுவற்புரளத்
தலை அம் கை கொண்டு நீ காபாலம் ஆடுங்கால்
மு(ல்)லை அணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ
என ஆங்கு
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை
மாண் இழை அரிவை காப்ப
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி.

அந்தணர் என்போர் அறவோர் என்றது அருந்தமிழ். ஒழுக்க நெறியை நன்கு அறிந்தவரே அந்தணர். ஆறு என்றால் வழி என்று ஒரு பொருள் உண்டு. ஒழுக்க வழிமுறைகளையும் வாழ்க்கை வழிமுறைகளையும் நன்கு அறிந்தவர்களே அந்தணர்கள் என்று சொல்லத் தகுந்தவர்கள். பிறப்பால் அந்தணர் என்று பெயர் பெற்றவர்கள் அல்லர். அப்படி 'ஆறு (வழி) அறியும் அந்தணர்களுக்கு அரிய மறைகள் பலவும் சொன்னவன் இறைவன்' என்கிறது இந்தப் பாடலின் முதல் அடி. கல்லால மரத்தின் கீழ் தென்முகக் கடவுளாக சிவபெருமான் அமர்ந்து அந்தணர்களுக்கு அருமறைகள் உரைத்ததாக பழங்கதைகள் கூறும். அச்செய்தியினை இந்தப் பாடலின் அடி கூறுகின்றது. மறைகள் பற்பல என்றும் எண்ணில்லாதவை என்றும் முன்னோர் சொல்லுவார்கள். அம்மறைகளை நான்காகத் தொகுத்து நான்மறைகள் என்று உரைக்கும் மரபு தோன்றுவதற்கு முன்னர் இருந்த நிலையை 'நான்மறைகள் பகர்ந்து' என்று சொல்லாமல் 'அருமறைகள் பல பகர்ந்து' என்பதால் இந்தப் பாடல் கூறுவதாகத் தோன்றுகிறது.

அருமறைகளுக்கு ஆறு அங்கங்கள் உண்டு. அந்த ஆறங்கங்களை அறிந்த அந்தணர்கள் என்பதையே 'ஆறு அறி அந்தணர்' என்று இந்தப் பாடலடி கூறுவதாகச் சொல்பவரும் உண்டு. 'ஆறு அறி' என்ற இடத்தில் அது வினைத்தொகையாக அமைகின்ற காரணத்தால் 'ஆறு அறியும், ஆறு அறிந்த, ஆறு அறியப் போகும்' என்று முக்காலத்திற்கும் பொருள் தரும்படி அமைந்திருக்கிறது. அருமறை பல இறைவன் அந்தணர்க்குப் பகர்ந்த பின்னர் அவர்கள் ஆறு அறிந்தார்கள் என்று சொன்னாலும் பொருந்தும். அந்த வகையில் அருமறைகளின் அங்கங்ளான ஆறங்களையும் அருமறையை இறைவனிடம் இருந்து அறிந்த பின்னர் அறிந்தனர் அந்தணர் என்றாலும் பொருத்தம் ஆகும்.

அருமறையைக் கொண்டவர்களைப் பார்ப்பார் என்று அழைக்க வேண்டும்; அந்தணர் என்று அழைக்கக் கூடாது என்று சில அன்பர்கள் இக்காலத்தில் கூறத் தொடங்கியிருக்கிறார்கள். சங்க இலக்கியங்களைக் கண்டால் இவ்விரு சொற்களும் ஒரு பொருட் பன்மொழியாக, ஒத்த பொருள் கொண்ட இரு சொற்களாகத் தான் விளங்குகின்றன என்பதற்கு இந்தப் பாடலின் முதல்
அடியும் ஒரு சான்று.



கங்கை என்ற பெயருக்குத் தெளிவுடையவள் என்ற பொருள் உண்டு. கங்கை நீர் வெண்ணிறமாகவும் யமுனை நீர் கருநிறமாகவும் இருக்கும் என்றும் கங்கையும் யமுனையும் சரசுவதியும் கலக்கும் முக்கூடலுக்குச் சென்றவர்கள் கூறக் கேட்டிருக்கிறோம். அப்படி தெளிந்த நீர் கொண்ட கங்கை என்பதனைத் தேறு நீர் என்கிறார் புலவர். அப்படி தெளிந்த நீரான கங்கையைத் தன் சடையின் ஒரு பகுதியில் முடிந்து வைத்துக் கொண்டவன் சிவபெருமான். பகீரதனுக்காக உலகிற்கு வந்த கங்கையைத் தன் சடையில் முடிந்து அவள் விரைவினைச் சிவபெருமான் தடுத்த நிகழ்வினை இந்த அடி கூறுகின்றது.

கொடுஞ்செயல்கள் பல புரிந்து எங்கும் திரிந்து கொண்டிருந்த திரிபுரங்களையும் அதில் வாழ்ந்தவர்களையும் தன் சிரிப்பினாலேயே கொளுத்தியவன் சிவபெருமான். அந்த நிகழ்வினை 'திரிபுரம் தீ மடுத்து' என்ற பகுதியால் சொல்கிறது இந்தப் பாடல் அடி.

கூளி என்பது ஒரு கடுமையான போர் வகை. அதனை மிகத் திறமையாக ஆற்றும் ஆற்றல் கொண்டவன் சிவபெருமான். அப்போரில் சிவபெருமான் தோற்றதே இல்லை. அந்தப் போரினைப் பற்றி விவரித்துச் சொல்வது இயலாது. அப்படியே சொன்னாலும் அவை முழுவதும் அப்போரினைப் பற்றியும் அப்போரினில் சிவபெருமானின் திறமையைப் பற்றியும் சொல்லி முடியாது. அது வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாத நிலையை உடையது. அதனை 'கூறாமல் குறித்து, அதன் மேல் செல்லும், கடும் கூளி மாறாப் போர்' என்கிறது இந்தப் பாடல் அடிகள்.

சிவபெருமானது போர்த்திறமை மட்டுமின்றி அவனது எச்செயலும் சொல்லுக்கும் நினைவிற்கும் எட்டாதவை. இறைவனுக்கு உருவமில்லை என்றும் இறைவனுக்கு உருவத்தை மனிதர்கள் உருவகித்துக் கொண்டார்கள் என்றும் சில அன்பர்கள் இப்போது சொல்லிக் கொள்கிறார்கள். சிவபெருமானுக்கு உருவமும் உண்டு; அவன் அருவுருவினனும் கூட. அவனுடைய உருவத்தைக் குறிக்கும் படி 'மணி மிடற்றன்' என்றும் 'எண் கையாய்' என்றும் இந்தப் பாடல் கூறுகின்றது.

பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலால விடத்தை உண்டதால் கருமணி போன்ற மிடற்றினைப் பெற்றான் சிவபெருமான். அவனுக்கு எட்டு குணங்களும் உண்டு; எட்டு கைகளும் உண்டு. எண்குணத்தான் ஆகிய சிவபெருமானுக்கு எட்டு கைகளும் உண்டு என்பதை 'எண் கையாய்' என்ற சொல் உணர்த்துகிறது.

சொல்லுக்கும் நினைவிற்கும் எட்டாத இறைவன் இப்போது மணிமிடற்றையும் எண் கைகளையும் தாங்கி உருவத்துடன் எதிரே நிற்கிறான். அவனை முன்னிலையாக வைத்து இந்தப் பாடல் பாடப்படுகின்றது என்பது 'கேள் இனி' என்னும் முன்னிலைச் சொற்களால் புரிகிறது.

வடமொழி புராணங்கள் கூறும் பல செய்திகளை இப்பாடலின் முதல் அடிகள் கூறுகின்றன. சங்க இலக்கிய தொகை நூல்கள் முதலில் ஆக்கப்பட்டன; பின்னர் கடவுள் வாழ்த்துப் பகுதிகள் இணைக்கப்பட்டன என்று ஒரு கருத்து உள்ளது. கடவுள் வாழ்த்துப் பகுதிகள் பிற்காலத்தவை ஆதலால் அவை வடமொழி நூல்களின் கருத்தினைச் சொல்வது இயல்பு என்றும் ஒரு கருத்து சொல்லப்படுகிறது. அந்த கருத்து மற்ற நூல்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால் இந்த கலித்தொகை நூலினைத் தொகுத்த பரங்குன்றத்து வாழ்ந்த மதுரையாசிரியர் நல்லந்துவனாரே இந்தக் கடவுள் வாழ்த்துப் பாடலையும் பாடியுள்ளதால் இந்த நூலும் கடவுள் வாழ்த்துச் செய்யுளும் ஒரே காலத்தவை என்று அறியலாம்.

(தொடரும்)

37 comments:

Radha said...

ஐயா, தங்கள் எழுத்து சுவாரஸ்யமாக உள்ளது ! பாற்கடலை கடைந்த பொழுது உண்டான விஷத்தை சிவனார் பருகும் காட்சி பிரமாதம் ! பிருந்தாவன கிரிதாரியின் பாதங்களை போன்றே இவருடைய பாதங்களும் சிவந்து உள்ளன.
//சொல்லுக்கும் நினைவிற்கும் எட்டாத இறைவன்//
"மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம்...." என்று அபிராமி அந்தாதி பாடல். இவ்வளவு மேன்மையும் போதவில்லை என்று மேலும் மேன்மை வேண்டி அடியார்களுக்கு எளியவனாகிறான்/ எளியவனாகிறாள். நன்று ! நன்று !!
~
ராதாமோகன்

கோவி.கண்ணன் said...

சிறப்பான இடுகை குமரன்.

//இறைவனுக்கு உருவமில்லை என்றும் இறைவனுக்கு உருவத்தை மனிதர்கள் உருவகித்துக் கொண்டார்கள் என்றும் சில அன்பர்கள் இப்போது சொல்லிக் கொள்கிறார்கள். சிவபெருமானுக்கு உருவமும் உண்டு; அவன் அருவுருவினனும் கூட. அவனுடைய உருவத்தைக் குறிக்கும் படி 'மணி மிடற்றன்' என்றும் 'எண் கையாய்' என்றும் இந்தப் பாடல் கூறுகின்றது.

//

சிவபெருமானுக்கு உருவம் உண்டு. ஜோதி சொருபன் என்றும் சொல்லுவார்கள். மற்றபடி மனித உருவம் ? இதில் எனக்கு மாற்றுக் கருத்துண்டு. உருவம் என்று காட்டப்படுவது நான் அறிந்த வகையில் சங்கரனுக்கு (ருத்ரன்) உடையது, சங்கரனும் சிவனும் ஒன்றல்ல என்பதாகவே படித்திருக்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@கோவி அண்ணா!
//உருவம் என்று காட்டப்படுவது நான் அறிந்த வகையில் சங்கரனுக்கு (ருத்ரன்) உடையது,
சங்கரனும் சிவனும் ஒன்றல்ல என்பதாகவே படித்திருக்கிறேன்//

சிவன் வேறு! ருத்திரன் வேறு!
ருத்திரன் சிவாம்சம்!
ஆனால் சங்கரன் இங்கே எங்கே வந்தான்? ருத்திரன்=சங்கரன்-ன்னு யாரு சொன்னது? ஏன் இத்தனை பெயர்க் குழப்பங்கள்? :)))

அடுத்து
ருத்திரனுக்கு உருவம் உண்டு!
ஆனால் ஆதி சிவனுக்கு உருவம் இல்லை-ன்னு யாரு சொன்னது?
ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே-ன்னு வருதே! உருவம் இல்லீன்னா "தாள்" எப்படி வரும்? :)

உருவம் இருந்தா கீழ்மை! உருவம் இல்லீன்னா மேன்மை - என்ற ஒரு தினுசான புரிதலால் வரும் பெருங்குழப்பமே இது!

உருவம் இல்லாமையும் ஒரு உருவமே!

ஒரு உருவம் இன்னொரு உருவமாய் இல்லாத காரணத்தால், உருவம் என்பதும் ஒரு வித உருவம் இல்லாமையே! :)

உருவமில்லா உயர்வு நவிற்சியில் இருந்து வெளியே வாங்க கோவி அண்ணா! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அருமறைகளுக்கு ஆறு அங்கங்கள் உண்டு. அந்த ஆறங்கங்களை அறிந்த அந்தணர்கள் என்பதையே 'ஆறு அறி அந்தணர்' என்று இந்தப் பாடலடி கூறுவதாகச் சொல்பவரும் உண்டு//

அந்த ஆறு அங்கங்கள் என்ன குமரன்?

//கூளி என்பது ஒரு கடுமையான போர் வகை. அந்தப் போரினைப் பற்றி விவரித்துச் சொல்வது இயலாது.//

கூளி என்பது காளியைப் போன்ற ஒரு பூத கணமும் கூட! கலிங்கத்துப் பரணியில் வரும்!
திண் கூளி கோடிகள் புடை சூழ
திருச்செங்கோடு மேவிய பெருமாளே என்பது அருணகிரியார் வாக்கு!

//'மணி மிடற்றன்' 'எண் கையாய்'//

நீல மணிக் கழுத்து சரி தான்!
எட்டு கைகள் ஈசனுக்குச் சொல்லப்பட்டிருக்கா? அஷ்ட புஜ துர்க்கை தெரியும்! அஷ்ட புஜ ஈசன்?

//பண்டரங்கம் ஆடுங்கால் பணை எழில் அணை மென் தோள்
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ//

இதுக்கெல்லாம் விளக்கம் சொல்லலையே! எங்கே? எங்கே? எங்கே?

//வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ
மு(ல்)லை அணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ//

பாட்டி அடிச்சாரோ பாலூட்டும் சங்காலே?
மாமன் அடிச்சாரோ மல்லியப்பூ செண்டாலே? -ன்னு மெட்டுல வருதே! சங்கப் பாடலை இசையோடு பாட முடியும் போல இருக்கே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//என்று சில அன்பர்கள் இக்காலத்தில் கூறத் தொடங்கியிருக்கிறார்கள்//

//என்றும் சில அன்பர்கள் இப்போது சொல்லிக் கொள்கிறார்கள்//

:))))

Radha said...

திரு ரவி கண்ணபிரான் அவர்களே,
திரு குமரன் பதில் அளிப்பதற்கு முன் வரும் இந்த அதிக பிரசங்கிதனமான comments-ஐ பொறுத்து கொள்ளவும்.

சிவபெருமான் எண்தோள் மூர்த்தி என்று பல இடங்களில் குறிப்பிடப் பெறுகிறார்.
ஒரு திருவாசக பாடல்:
"அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னைஆட்
கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய்
நானோ இதற்கு நாயகமே."

நிற்க, அஷ்ட புஜங்கள் கொண்ட திருமாலும் உண்டு. திரு அட்டபுயகரம் என்று காஞ்சீபுரத்தில் ஒரு திவ்ய தேசம் உள்ளது.
.....
Let me add some spice to the discussion about formless God.
Here are a few interesting songs...

சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்
ஒருவனே சொல்லுதற் கரிய
ஆதியே நடுவே அந்தமே பந்தம்
அறுக்கும் ஆனந்தமா கடலே
தீதிலா நன்மைத் திருவருட் குன்றே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாதுநீ போவதோர் வகையெனக் கருளாய்
வந்துநின் இணையடி தந்தே.
(திருவாசகம் - கோயில் திருப்பதிகம்: 9)

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய் கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே.

~
Radha

கோவி.கண்ணன் said...

//சிவன் வேறு! ருத்திரன் வேறு!
ருத்திரன் சிவாம்சம்!
ஆனால் சங்கரன் இங்கே எங்கே வந்தான்? ருத்திரன்=சங்கரன்-ன்னு யாரு சொன்னது? ஏன் இத்தனை பெயர்க் குழப்பங்கள்? :)))

அடுத்து
ருத்திரனுக்கு உருவம் உண்டு!
ஆனால் ஆதி சிவனுக்கு உருவம் இல்லை-ன்னு யாரு சொன்னது?
ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே-ன்னு வருதே! உருவம் இல்லீன்னா "தாள்" எப்படி வரும்? :)//

எத்தனை சிவன் கோவில்களில் சிவலிங்கம் அல்லாத உருவச் சிலை பார்த்திருக்கிறீர்கள் ? சிவ லிங்கத்திற்கு 'தாள்' இருக்கிறதா ?
சங்கரனுக்கு ருத்ரனுக்கும் உருவத்தில் என்ன வேறுபாடு இருக்கிறது ?


//உருவம் இருந்தா கீழ்மை! உருவம் இல்லீன்னா மேன்மை - என்ற ஒரு தினுசான புரிதலால் வரும் பெருங்குழப்பமே இது!//

உருவ வழிபாடு அனைத்து மதங்களுக்கும் பொதுவான ஒன்றாக இருக்க முடியாது என்பதைத் தவிர்த்து உயர்வு தாழ்வு என்ற வகைக்குள் சொல்வதற்கு இல்லை.

//உருவம் இல்லாமையும் ஒரு உருவமே!

ஒரு உருவம் இன்னொரு உருவமாய் இல்லாத காரணத்தால், உருவம் என்பதும் ஒரு வித உருவம் இல்லாமையே! :)
//

பெயரில்லாதவர் என்பது கூட ஒரு பெயர் தானே என்று நாம வசதிக்கு ஏற்ப எதையும் சொல்ல முடியும். ஆனால் அவை சரியான கூற்றாகாது. பெயரில்லாதது என்பது பெயராகாது அது ஒரு அடையாளம்(சுட்டு) தான்.

//உருவமில்லா உயர்வு நவிற்சியில் இருந்து வெளியே வாங்க கோவி அண்ணா! :)
//
இதே தான் சிறிது நாளைக்கு முன்பு 'நாராயணனே பரப்பிரம்மம்' பற்றிய கருத்தில் நீங்கள் நிலை கொண்டிருந்தீர்கள் என்பதை இங்கே நினைவு படுத்துகிறேன். ஆனால் அவை வெறும் பெயரளவிலான உயர்வு என்றேன்.

****

இது குமரன் இடுகையாக இருப்பதால் அதில் விவாதிப்பதற்கு இருவருக்கும் சங்கடங்கள் உண்டு. இங்கே இத்துடன் நிறுத்தி நாம மாதவி பந்தலில் வச்சிக்குவோம்.

:)

குமரன் (Kumaran) said...

இராதாமோகன் ஐயா. உங்கள் பாதிப்பெயரைப் பார்த்துவிட்டு இராதாம்மா என்று இன்னொரு பின்னூட்டத்திற்குப் பதில் சொல்லும் போது அழைத்துவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.

இடுகையைத் தாங்கள் அனுபவித்தது தங்களின் பின்னூட்டங்களில் மிக நன்றாகத் தெரிகின்றது. மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

பாராட்டிற்கு நன்றி கோவி.கண்ணன். தங்கள் மாற்றுக் கருத்திற்கு நன்றி. அவரவர் தமதமது அறிவறி வகைவகை என்று பெரியோர் சொன்னபடி உங்களுக்கும் இறையைப் பற்றி தனிப்பட்ட கருத்து இருப்பது நல்லதே.

குமரன் (Kumaran) said...

ஆறு அங்கங்களைப் பற்றி நச்சினார்க்கினியரின் உரையில் இருக்கிறது இரவி. அதனையும் எழுதத் தொடங்கினேன். ரொம்ப விரிவாகப் போய்விடுமோ என்று தயங்கி விட்டுவிட்டேன். அந்த ஆறு அங்கங்கள் என்ன என்று உங்களுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியும். இந்த அறிவினாவிற்கு நம் நண்பர்கள் யாராவது (குறிப்பாக மௌலி) வந்து சொல்லுவார்கள்.

கூளி என்ற சொல்லைப் படித்தவுடன் நானும் அந்தப் பொருளைத் தான் எடுத்துக் கொண்டேன் இரவி. ஆனால் உரையில் அது ஒரு போர்வகை என்று சொல்லியிருக்கிறது. மாறாப்போர் என்றதால் அந்த பொருள் பொருந்தும் என்று எடுத்துக் கொண்டேன்.

R.DEVARAJAN said...

//எட்டு கைகள் ஈசனுக்குச் சொல்லப்பட்டிருக்கா? அஷ்ட புஜ துர்க்கை தெரியும்! அஷ்ட புஜ ஈசன்?//

வாகீசரின் திரு அங்க மாலையில்
எண்டோள் வீசி நின்றடும் பான்மை
காட்டப்படுகிறது.

தேவ்

R.DEVARAJAN said...

எண்தோள் வீசி நின்று ஆடும் பிரான்தன்னை -கண்காள், காண்மின்களோ !

R.DEVARAJAN said...

//எட்டு கைகள் ஈசனுக்குச் சொல்லப்பட்டிருக்கா? அஷ்ட புஜ துர்க்கை தெரியும்! அஷ்ட புஜ ஈசன்?//

வாகீசரின் திரு அங்க மாலையில்
எண்டோள் வீசி நின்றடும் பான்மை
காட்டப்படுகிறது.

தேவ்

S.Muruganandam said...

ஐயனுக்கு ஐந்து முகங்கள் அதன் பிரகாரம் பத்து கரங்கள் இருக்க வேண்டும் ஆனால் தேவார திருவாசகத்தில் பல இடங்களில் எண்தோள் முக்கண் எம்மான் என்று ஐயனுக்கு எட்டுக் கரங்கள் என்று வந்துள்ளது.

யாராவது இதை விளக்குங்களேன்.

குமரன் (Kumaran) said...

நல்ல வேளை நான் உங்கள் கேள்விக்கு விடை சொல்ல நேரம் எடுத்துக் கொண்டேன் இரவி. நான் சைவத் திருமுறைகளை அவ்வளவாகப் படித்ததில்லை. அதனால் எண்தோள் இறைவரைப் பற்றி தெரிந்திருக்காது. இராதா ஐயாவும் தேவ் ஐயாவும் சொன்னதால் தெரிந்து கொண்டேன். உங்கள் கேள்விக்கும் அவர்களின் பதில்களுக்கும் நன்றி.

தொடரும் போட்டிருக்கேனே இரவி. பாக்கலையா? அடுத்த வரிகளுக்கு அடுத்த இடுகைகளில் விளக்கங்கள் வரும்.

இது இசைப்பாவான்னு பொருத்தமான கேள்வி கேட்டிருக்கீங்க. பரிபாடலும் கலித்தொகையும் இசைப்பாக்கள்ன்னு சொல்லிப் படிச்சிருக்கேன். சங்க கால பண்களுடன் இப்பாடல்களைப் பாட முடியும்; பாடியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

R.DEVARAJAN said...

குறித்து அதன் மேல் செல்லும் கடுங்கூளி –
குறித்த ஒன்றன் மேல் சென்று தாக்கும் ப்ருத்வி ஏவுகணை மாதிரி ஒரு கடும் கூளி

மாறாப் போர் – புறமுதுகிடாத போர்

(Jan 21,2006 தேதியிட்ட'முத்தமிழ்’ குழும மடலாடலில் பார்த்தது)


தேவ்

குமரன் (Kumaran) said...

இராதா மோகன் ஐயா. பொருத்தமான திருவாசகப்பாடலைகளையும் கந்தரனுபூதி பாடலையும் அபிராமி அந்தாதி பாடலையும் தந்தீர்கள். மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

//இது குமரன் இடுகையாக இருப்பதால் அதில் விவாதிப்பதற்கு இருவருக்கும் சங்கடங்கள் உண்டு. //

உண்மையாவா?

//இங்கே இத்துடன் நிறுத்தி நாம மாதவி பந்தலில் வச்சிக்குவோம்.//

மாதவிப் பந்தலும் என்னுடைய பதிவு தானே கோவி.கண்ணன்? :-)

குமரன் (Kumaran) said...

திரு அங்க மாலையின் வரிகளை எடுத்துத் தந்ததற்கு மிக்க நன்றி தேவ் ஐயா.

குமரன் (Kumaran) said...

ஐந்து முகங்கள் என்பதால் பத்து கரங்கள் என்ற கணக்கு ஆறுமுகனுக்கு வேண்டுமானால் பொருந்தும் கைலாஷி ஐயா. ஆறுமுகனுக்கு பன்னிரு கரங்கள் இருக்கின்றன. ஆனால் மூவரில் மற்றவருக்கு அந்தக் கணக்கு இருப்பதாகத் தெரியவில்லை. நான்முகனுக்கு நாற்கரங்கள் தான் காட்டப்பட்டிருக்கின்றன. மாயவனுக்கு ஒரு தலை தான் ஆனால் அவனுக்கும் சதுர்புஜம் என்றே சொல்லப்பட்டிருக்கின்றது.

குமரன் (Kumaran) said...

முத்தமிழ் குழும மடலை இப்போதே தேடிப் பார்க்கிறேன் ஐயா. நீங்கள் எடுத்துத் தந்திருக்கும் பொருளினைத் தான் நச்சினார்க்கினியரின் உரையாக இணையத் தமிழ் பல்கலைக்கழக நூலகத்தில் படித்தேன்.

Radha said...

குமரன் ஐயா,
என்னுடைய நண்பர்கள் அனைவரும் என்னை ராதா என்றே அழைப்பது வழக்கம். அதனால் நானும் அவ்வாறே sign செய்கிறேன். சில நேரங்களில் புது இடத்திற்கு வந்து இருக்கிறோம் என்ற awareness இருந்தால் மட்டும் முழு பேரை இடுவது வழக்கம்.

தாங்கள் எப்படி என்னை ராதாம்மா என்று அழைக்கலாம் என்று உங்களுடன் சண்டையிட ஆசை. :-) ஆனால் இங்கு பின்னூட்டு இடுபவர்கள் சொல்வதை பார்த்தால் நீங்கள் சாதுவாக இருப்பீர்கள் போல உள்ளது. சண்டையிட வேறு ஒரு இணைத்தளம் உள்ளது போல. அதானால் ரொம்ப பெரிய மனது வைத்து உங்களை விட்டுவிடுகிறேன். :-)

(i understand that i am several years(atleast 7) younger than you. i would be very happy if you drop the "ஐயா" when i am referred.)
~
ராதா

குமரன் (Kumaran) said...

Thanks for your big heart Radha ஐயா. I want to make a deal with you - if you drop ஐயா when addressing me I am ready to drop ஐயா when addressing you. :-)

For your information, I am not that Sadhu but not in a mood today to fight. Thats all. :-)

Radha said...

Oh! thats a good deal kumaran! :-)
i am very happy to have known you and i think i am going to like this group very much.
தங்களின் அடுத்த இடுகையில் சந்திப்போம் !
~
ராதா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Radha said...
திரு ரவி கண்ணபிரான் அவர்களே,//

ராதா, குமரன் போட்ட டீலை நானும் போட்டுக்கறேனே! அவர்களே எல்லாம் வேணாமே! உங்க ரெண்டு பேரை விட பொடியோ பொடியன்! KRS-ன்னே கூப்புடுருங்களேன்! :)

ராதா மற்றும் தேவ் சார் விளக்கங்களுக்கு நன்றி! அப்பர் சுவாமிகளின் தேவாரப் பாடலுக்கும் நன்றி!

கண்காள் காண்மின்களோ, கடல் நஞ்சுண்ட கண்டன் தனை
எண்தோள் வீசி நின்றாடும் பிரான் தனை - கண்காள் காண்மின்களோ!

ஆனந்த தாண்டவ மூர்த்தியாக = ஈசன் நான்கு கரங்களாகக் காட்டப் பெறுகிறான்!
ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியாக = ஈசன் எட்டு கரங்களாக காட்டப் பெறுகிறான்!

ராதா சொன்னபடி, துர்கைக்கு அஷ்டபுஜ துர்க்கையைப் போலே, பெருமாளுக்கும் அட்டபுயகரம் என்னும் திவ்யதேசத்தில் எண் தோள்கள் உண்டு! ஆனால் இதெல்லாம் சிறப்பு நேரங்களில் மட்டுமே! பொதுவாக எண் தோள் என்பது ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியான சிவபெருமானையே குறிக்கும்!

//Kailashi said...
ஐயனுக்கு ஐந்து முகங்கள் அதன் பிரகாரம் பத்து கரங்கள் இருக்க வேண்டும்//

கைலாஷி ஐயா
ஐயனுக்கு ஆறாவது முகமும் உண்டே! இந்த முகம்-கை கணக்கு எல்லாம் ஒரு நிகழ்ச்சியின் போதோ, தத்துவமாகவோ சொல்ல வந்தவையே அன்றி, வேறேதும் இல்லை!

குமரன் (Kumaran) said...

எண் தோள் வீசி நின்றாடும் பிரான் - ம்ம்ம்ம் இதுவும் அறிவினா தானா இரவி? :-)

இந்த சங்கப் பாடலில் ஈசனின் ஊழிக்கூத்தைத் தான் புலவர் பாடப்போகிறார். அதனால் தான் எண்கையா கேள் என்கிறார் போலும். ஆனந்தத் தாண்டவத்திற்கும் ஊர்த்துவ தாண்டவத்திற்கும் இந்த வேறுபாடு உண்டா? இன்று தான் தெரிந்து கொண்டேன். நன்றி இரவி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
எத்தனை சிவன் கோவில்களில் சிவலிங்கம் அல்லாத உருவச் சிலை பார்த்திருக்கிறீர்கள்?//

100% எல்லாச் சிவன் கோயில்களிலும் நடராஜர் "உருவச்" சிலை உண்டு! எல்லாச் சிவன் கோயில்களிலும் ஊருலா மூர்த்தி (உற்சவர்) "உருவம்" தான்!

//சிவ லிங்கத்திற்கு 'தாள்' இருக்கிறதா ?//

கோவி அண்ணா, நான் கேட்டது என்ன? நீங்கள் சொல்வது என்ன?
ஆதி சிவன் உருவம் இல்லாதவன் என்று நீங்களாகச் சொல்கிறீர்கள்! அப்படின்னா ஆதி சிவனுக்குத் "தாள்" எங்ஙனம்?

சிவலிங்கம் = ஆதி சிவனா? நல்லாத் தெரியுமா?
அப்படின்னா நடராஜன் = ஆதி சிவன் இல்லையா?

சிவலிங்கம் அரு"உருவம்" ஆச்சே! உங்கள் கூற்றுப்படி ஆதிசிவன் சுத்தமா உருவமே இல்லாதவன் ஆச்சே! :)

சிவ லிங்கத்துக்கு அடியும் உண்டு! முடியும் உண்டு! "தன்" முயற்சியால்
அடி முடி காணாதவர்கள், "இறை" முயற்சியால், சிவலிங்கத்தில் அடி முடி கண்டார்கள்!
எல்லாச் சிவலிங்கத்துக்கும் முடியும் உண்டு! அடியும் உண்டு!

//பெயரில்லாதவர் என்பது கூட ஒரு பெயர் தானே என்று நாம வசதிக்கு ஏற்ப எதையும் சொல்ல முடியும். ஆனால் அவை சரியான கூற்றாகாது//

அதே தான் நானும் சொல்கிறேன்! உருவம் இல்லாமை என்பதும் ஒரு அடையாளம்(சுட்டு) தான்! உம்ம வசதிக்கு ஏற்ப சொல்லிக் கொள்வது தான் :)))

//இதே தான் சிறிது நாளைக்கு முன்பு 'நாராயணனே பரப்பிரம்மம்' பற்றிய கருத்தில் நீங்கள் நிலை கொண்டிருந்தீர்கள் என்பதை இங்கே நினைவு படுத்துகிறேன்.//

இல்லை! 'நாராயணனே பரப்பிரம்மம்' என்ற நிலைப்பாடு அடியேனுக்கு இல்லை!
அது வேதங்களும், தமிழ் மறைகளும், மற்றும் சங்கரர்-இராமானுசர்-மத்வர் என்று தத்துவ மூவரும் கொண்ட நிலைப்பாடு!

//வெறும் பெயரளவிலான உயர்வு என்றேன்//

"ஆதி" சிவன் என்றும் "உருவமே" இல்லாமை என்பதும் அதே வெறும் பெயர் அளவிலான உயர்வைத் தானே நீங்களும் சுட்டுகிறீர்கள்? :)

"உருவம் இல்லாமை என்பதே உயர்வு/நன்று" என்ற மாயத் தோற்றத்தால் தான் இந்த உங்களுகு இந்த Calibration Error!

பரப்பிரம்மத்துக்கு உரு, அரு, உரு-அரு என்ற மூன்றுமே உண்டு!
அதை உணர்த்தத் தான் "நாரா" என்று நீரைக் காட்டினார்கள்!
நீர் முந்நிலைகளிலும் இருக்கும்! அடங்கும், ஆனால் அடங்காது! உருக் காட்டும், ஆனால் காட்டாது! அதுவே பரப்பிரம்மம்! அதுக்கு என்ன பேரு வேணாம்னாலும் கொடுத்துக்குங்க! அது அது தான்!

//இது குமரன் இடுகையாக இருப்பதால் அதில் விவாதிப்பதற்கு இருவருக்கும் சங்கடங்கள் உண்டு//

:)))

பந்தல் குமரனுக்கும் சொந்தமாமே! உங்களுக்கு இல்லையா? :)

//இங்கே இத்துடன் நிறுத்தி நாம மாதவி பந்தலில் வச்சிக்குவோம்//

மாதவிப் பந்தல்! ப் (ஹிப்) ஐ விட்டுட்டீங்களேண்ணா!
இடையழகு ரொம்ப முக்கியமாச்சே! :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
ஆனந்தத் தாண்டவத்திற்கும் ஊர்த்துவ தாண்டவத்திற்கும் இந்த வேறுபாடு உண்டா? இன்று தான் தெரிந்து கொண்டேன். நன்றி இரவி.//

:)

//இந்த சங்கப் பாடலில் ஈசனின் ஊழிக்கூத்தைத் தான் புலவர் பாடப்போகிறார். அதனால் தான் எண்கையா கேள் என்கிறார் போலும்//

எக்ஜாக்ட்லி! அதுக்குத் தான் அந்தக் கேள்வியைக் கேட்டு வச்சேன் :)

//எண் தோள் வீசி நின்றாடும் பிரான் - ம்ம்ம்ம் இதுவும் அறிவினா தானா இரவி? :-) //

எல்லாமே ஹரி வினா தான் குமரன்! :)))
அடியேன் வினா ஒன்றுமே இல்லை!

R.DEVARAJAN said...

சைவத் திருமுறைகள் ஒருபுறமிருக்க
அருளிச்செயலிலும் எண்தோள் பற்றிய
குறிப்பைக் காண்கிறோம்.
எண்டோள் ஈசர்க்கு எழில் மாடம் எழுபது செய்த கோச்செங்கட் சோழரின்
திருப்பணியை மங்கை மன்னர்
போற்றுகிறார்.
அரனாருக்கு ‘அஷ்ட மூர்த்தி’ என்னும் பெயரையும் ஆகமங்கள் அளிக்கின்றன.

தேவ்

குமரன் (Kumaran) said...

அருமை தேவ் ஐயா. அதே கோச்செங்கட்சோழர் எண்டோள் ஈசருக்கு எழில் மாடம் எழுபது மட்டுமின்றி பெருமாளுக்கும் மாடக்கோயில்கள் கட்டினார் என்று எங்கோ படித்த நினைவு. நீங்கள் படித்திருக்கிறீர்களா?

R.DEVARAJAN said...

செங்கட் சோழரின் மாடக்கோயில்கள்
சிவபெருமானுக்கானவை.
அஷ்ட புஜம் எம்பெருமானுக்கும்
உரியது என்பதால் சோழர் எழுபது விண்ணகரங்கள் சமைத்தார் என்று வலிந்து பொருள் கொள்வதில்
உடன்பாடில்லை; அப்படிக் கூறுவோரும் உள்ளனர்.

தேவ்

குமரன் (Kumaran) said...

விளக்கத்திற்கு நன்றி தேவ் ஐயா.

Radha said...

Ravi said...
//100% எல்லாச் சிவன் கோயில்களிலும் நடராஜர் "உருவச்" சிலை உண்டு! எல்லாச் சிவன் கோயில்களிலும் ஊருலா மூர்த்தி (உற்சவர்) "உருவம்" தான்!//

பொடியோ பொடியா ரவி, :-)
ஆஹா !! இப்படி ஒருவரை விளிப்பது தான் எவ்வளவு ஆனந்தமாக உள்ளது. :-)
நீ ஆவுடையார் கோயில் என்று அழைக்கப்பெறும் திருப்பெருந்துறை ஆத்மநாத சுவாமி கோயிலுக்கு சென்றதுண்டா ??
(இவ்வளவு தெனாவட்டாக கேள்வி கேட்பதால் ராதா அங்கு நிச்சயமாக சென்று இருப்பான் என்று யாராவது நினைத்தால் அது அவர்களது எண்ணப் பிழையே ! ;-) )
~
ராதா

கோவி.கண்ணன் said...

//100% எல்லாச் சிவன் கோயில்களிலும் நடராஜர் "உருவச்" சிலை உண்டு! எல்லாச் சிவன் கோயில்களிலும் ஊருலா மூர்த்தி (உற்சவர்) "உருவம்" தான்! //

நடராஜன் ? அது ஐம்பூத தத்துவங்களுகான உருவ அமைப்பு தான் சிவலிங்கத்திற்கு மாற்று உருவம். ஒளிவடிவத்தின் வழிபாட்டு உருவம் சிவலிங்கம், அதாவது வடிவமற்றதை வடிவாக்கி வழிபடுதல். சிவலிங்கமும் சங்கரனும்/ருத்ரனும் ஒன்றே என்று சொன்னால் ? சங்கரன் அல்லது ருத்ரன் (ருத்ர ஞான யக்ஞம்) சிவலிங்கத்திற்கு முன் பூஜை செய்வதாக இருக்கும் படங்கள் ஏன் ? தனக்கு தானே பூசையா ?

இதை முன்பே கேட்டு இருக்கேனா ? மறந்துவிட்டது !

//சிவ லிங்கத்திற்கு 'தாள்' இருக்கிறதா ?//

கோவி அண்ணா, நான் கேட்டது என்ன? நீங்கள் சொல்வது என்ன?
ஆதி சிவன் உருவம் இல்லாதவன் என்று நீங்களாகச் சொல்கிறீர்கள்! அப்படின்னா ஆதி சிவனுக்குத் "தாள்" எங்ஙனம்?

சிவலிங்கம் = ஆதி சிவனா? நல்லாத் தெரியுமா?
அப்படின்னா நடராஜன் = ஆதி சிவன் இல்லையா?

சிவலிங்கம் அரு"உருவம்" ஆச்சே! உங்கள் கூற்றுப்படி ஆதிசிவன் சுத்தமா உருவமே இல்லாதவன் ஆச்சே! :)

//

சிவலிங்கம் உருவ(க)ப் படுத்தப்பட்டது என்று கொள்க !

//சிவ லிங்கத்துக்கு அடியும் உண்டு! முடியும் உண்டு! "தன்" முயற்சியால்
அடி முடி காணாதவர்கள், "இறை" முயற்சியால், சிவலிங்கத்தில் அடி முடி கண்டார்கள்!
எல்லாச் சிவலிங்கத்துக்கும் முடியும் உண்டு! அடியும் உண்டு!//

இந்த கதைக்கு நான் வரவில்லை. ஒரு காலல் வானத்தை வாமன அவதாரம் அளந்தது என்று அளப்பது போல் இவையெல்லாம் கேள்விக்கு உட்படுத்தினால் அடிப்பட்டுப் போகும். இல்லாத வானத்தை எந்த காலால் அளந்தார் என்று கேட்க முடியும் அல்லவா ? மறுகாலால் அளப்பதற்கு பூமியும் தட்டையானது அல்ல. அது போல் அடிமுடி கண்ட கதை.

//பெயரில்லாதவர் என்பது கூட ஒரு பெயர் தானே என்று நாம வசதிக்கு ஏற்ப எதையும் சொல்ல முடியும். ஆனால் அவை சரியான கூற்றாகாது//

அதே தான் நானும் சொல்கிறேன்! உருவம் இல்லாமை என்பதும் ஒரு அடையாளம்(சுட்டு) தான்! உம்ம வசதிக்கு ஏற்ப சொல்லிக் கொள்வது தான் :)))

//"ஆதி" சிவன் என்றும் "உருவமே" இல்லாமை என்பதும் அதே வெறும் பெயர் அளவிலான உயர்வைத் தானே நீங்களும் சுட்டுகிறீர்கள்? :)//

நானும் 'தேவரும் மூவரும் காணாச் சிவபெருமான்' என்ற பாடலை வைத்துத் தான் சொன்னேன்.

//"உருவம் இல்லாமை என்பதே உயர்வு/நன்று" என்ற மாயத் தோற்றத்தால் தான் இந்த உங்களுகு இந்த Calibration Error! //

உருவம் வைத்து இறைவனை பொதுப்படுத்த முடியாது ? உதாரணத்திற்கு இந்திய முகம் உடைய கடவுளை உலகத்தினருக்கான கடவுள் என்று பொதுப்படுத்துவது எங்ஙனம் ? உருவம் என்பது இன அடையாளத்தில் ஒரு அங்கம். உயர்வு தாழ்வு என்ற பொருளில் சொல்லவில்லை. பொதுவான் ஒன்றாக பேசமுடியாது, என்பதால் உருவ வழிபாடு சமயம் / இனம் சார்ந்த என்றாகிவிடும் என்று பொருள் கொள்க

//பரப்பிரம்மத்துக்கு உரு, அரு, உரு-அரு என்ற மூன்றுமே உண்டு!
அதை உணர்த்தத் தான் "நாரா" என்று நீரைக் காட்டினார்கள்!
நீர் முந்நிலைகளிலும் இருக்கும்! அடங்கும், ஆனால் அடங்காது! உருக் காட்டும், ஆனால் காட்டாது! அதுவே பரப்பிரம்மம்! அதுக்கு என்ன பேரு வேணாம்னாலும் கொடுத்துக்குங்க! அது அது தான்! //

எனக்கு பரப்பிரம்மம் (எங்கும் நிறைந்திருப்பது) பற்றிய் நம்பிக்கை இல்லை. எனவே உங்கள் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. இறைவனுக்கு உருவம் உண்டு, புலன்களால் உணரமுடியாத உருவம் உண்டு ஆனால் அவை நீங்களும் ஏனையோரும் நினைப்பது போல் மனித உரு அல்ல, point of light எனச் சொல்லப்படும் நுன்னிய ஒளிப் புள்ளி வடிவம் என்று சிலர் சொல்லும் போது நான் மறுப்பது இல்லை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பொடியோ பொடியா ரவி, :-)
ஆஹா !! இப்படி ஒருவரை விளிப்பது தான் எவ்வளவு ஆனந்தமாக உள்ளது. :-)//

உங்கள் ஆனந்தம் கண்டு ஆனந்தமாக உள்ளது! :)

//நீ ஆவுடையார் கோயில் என்று அழைக்கப்பெறும் திருப்பெருந்துறை ஆத்மநாத சுவாமி கோயிலுக்கு சென்றதுண்டா ??//

ராதா
நீங்க சொல்லும் ஆவுடையார் கோயிலில் மேல் பாதி லிங்கம் இல்லை! கீழ்ப்பாதி ஆவுடையார் மட்டுமே! சரியா?
ஊருலாவும் மாணிக்கவாசகப் பெருந்தகைக்குத் தான்! சரியா? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
நடராஜன்? அது ஐம்பூத தத்துவங்களுகான உருவ அமைப்பு தான் சிவலிங்கத்திற்கு மாற்று உருவம்.//

அப்படி வாங்க வழிக்கு! :)
தத்துவத்துக்கான உருவ அமைப்பு-ன்னு ஒத்துக்கறீங்கல்ல? அதே போலத் தான் மற்ற உருவ அமைப்புகளும்!
தனக்கு வேண்டுவதில் மட்டும் தத்துவ உரு! மற்றதெல்லாம் வெறும் உரு என்பது செல்லாது! செல்லாது! :)

//ஒளிவடிவத்தின் வழிபாட்டு உருவம் சிவலிங்கம், அதாவது வடிவமற்றதை வடிவாக்கி வழிபடுதல்//

வடிவம் அற்றது-ன்னு எப்படித் தெரியும்?
அதை வடிவம் ஆக்க வேண்டிய அவசியம் என்ன?
ஒளி அலைவரிசைக்கும் வடிவம் உண்டே! அணுவில் அணுவுக்கும் வடிவம் உண்டே!

//சிவலிங்கமும் சங்கரனும்/ருத்ரனும் ஒன்றே என்று சொன்னால் ?//

நான் அப்படிச் சொல்லவில்லை! ஆனால் சிவலிங்கம்=ஆதிசிவன்!
சிவலிங்கம்<>சங்கரன் என்பதற்கு தரவு தாருங்கள் என்று கேட்கிறேன்! :)

//சங்கரன் அல்லது ருத்ரன் (ருத்ர ஞான யக்ஞம்) சிவலிங்கத்திற்கு முன் பூஜை செய்வதாக இருக்கும் படங்கள் ஏன் ? தனக்கு தானே பூசையா ?//

ஓவியர்கள் வரையும் படங்கள் தரவாகா! :)
தனக்குத் தானே பூசை செய்யும் பெருமாளும், இராமனும், கண்ணனும் கூட ஓவியத்தில் உண்டு! :)

மேலும் ஆதிசிவன் தனக்குத் தானே பூசை செய்து கொள்ளும் கேதார விரதமும் உண்டு! கண்ணாடி பிம்பத்தில் தன்னைத் தானே பூசித்த ஆதி சிவன் உருவமே சுந்தரமூர்த்தியாக வெளிப்பட்டது என்பது சைவ சித்தாந்தம்!

//சிவலிங்கம் உருவ(க)ப் படுத்தப்பட்டது என்று கொள்க !//

அதே போல் ஏனைய உருவங்களும் உருவ(க)ப் படுத்தப்பட்டது என்று நீரும் கொள்க!

//இல்லாத வானத்தை எந்த காலால் அளந்தார் என்று கேட்க முடியும் அல்லவா ? மறுகாலால் அளப்பதற்கு பூமியும் தட்டையானது அல்ல. அது போல் அடிமுடி கண்ட கதை.//

இல்லாத தராசில் எந்த நீதியை எடை போட முடியும்? எதற்குப் பின்னே தராசு? உருவகம் தானே! அதே போல் தான் வானம் அளத்தலும்!

அளத்தல் என்பது நீட்டல் அளவை மட்டும் அல்ல! கொள்ளல் அளவை, முகத்தல் அளவை என்று பலவும் நீட்டல் அளவையில் இருந்து விரியும்! அது போல் தான் மேலொரு பாதமும், கீழொரு பாதமும், அடையாளத்துக்காகப் பதித்தல்!

பொருளை அளக்க அதைத் தொட வேண்டிய அவசியம் இல்லை என்பது விஞ்ஞானம்! ஓரிடத்தில் தட்டையாக நிலைபெறச் செய்து, பின்னர் அகல-ஆழங்களை நிழலைக் கொண்டும், ஒளி உமிழ்ந்தும் அளக்கலாம்! அவ்வண்ணமே உலகளந்த அளவை ஆகியது! sin theta = nm (lamda)

//நானும் 'தேவரும் மூவரும் காணாச் சிவபெருமான்' என்ற பாடலை வைத்துத் தான் சொன்னேன்.//

இலக்கிய வர்ணனைப் பாடல்களும், வேத-திருமந்திர நூல்களும் ஒன்றாகாது! தேவரும் மூவரும் காணா என்று சொல்லும் அதே பாடல் தான், முருக ஞானத்தை அறிய மாட்டாத சிவம் என்றும் சொல்கிறது! :)

//உருவம் வைத்து இறைவனை பொதுப்படுத்த முடியாது ?//

உண்மை! ஆனால் பொதுவான உருவம் எது என்று நமக்குத் தெரியாததாலேயே, உருவம் இல்லை என்றும் சொல்லி விட முடியாது!

உருவம் என்றால் இந்திய/தமிழ் ஆணின் உருவம் என்ற தோற்றப் பிழையே இதற்கு காரணம்! ஓவியம்/காலண்டரை மட்டுமே தரவாகக் கொள்வதால் வரும் எண்ணச் சிதறல் இது! :)

//உதாரணத்திற்கு இந்திய முகம் உடைய கடவுளை உலகத்தினருக்கான கடவுள் என்று பொதுப்படுத்துவது எங்ஙனம் ?//

சீன உருவம் கொண்ட ஒருவர் ஐ.நா தலைவர் ஆவது எங்ஙனம்? :)

//பொதுவான் ஒன்றாக பேசமுடியாது, என்பதால் உருவ வழிபாடு சமயம் / இனம் சார்ந்த என்றாகிவிடும் என்று பொருள் கொள்க//

கருத்து மட்டும் இனம்/சமயம் சார்ந்த ஒன்று! அந்தச் சமயம்/இனத்தின்/பண்பாட்டின் சிந்தனை!
உருவம் மட்டும் பொது உருவமாக்கி, "பொதுமை" கண்டு விடலாம் என்றால் நடவாதே! :)
ஒளிப் பிழம்பு உருவை ஏற்கனவே வெந்து தணியும் பாலைவன மக்களிடம் எப்படிச் சமன்படுத்துவீர்கள்? :)

//எனக்கு பரப்பிரம்மம் (எங்கும் நிறைந்திருப்பது) பற்றிய் நம்பிக்கை இல்லை//

பரப்பிரம்மம் என்றால் எங்கும் நிறைந்திருப்பது என்ற பொருள் இல்லை! அனைத்திலும் மேலானது! வேறானது என்றே பொருள்!

//இறைவனுக்கு உருவம் உண்டு, புலன்களால் உணரமுடியாத உருவம் உண்டு ஆனால் அவை நீங்களும் ஏனையோரும் நினைப்பது போல் மனித உரு அல்ல, point of light எனச் சொல்லப்படும் நுன்னிய ஒளிப் புள்ளி வடிவம் என்று சிலர் சொல்லும் போது நான் மறுப்பது இல்லை//

அப்படி வாங்க வழிக்கு!
நான் மனித உரு-ன்னே சொல்லலையே! தமிழக ஆணின் உருன்னும் சொல்லலையே! :)

உருவமே இல்லை! என்று சாதிக்காதீர்கள் என்று தான் சொன்னேன்! உருவம் அற்றதே இறை என்ற முடிந்த முடிபு கொள்ள முடியாது என்றே சொன்னேன்!

உருக் கொள்வான்/உருக் காட்டான்!
அதான் நீரின் வடிவம்/வடிவமல்லா முத்தன்மைகளைச் சொன்னேன்! அது புள்ளி வடிவமோ, Point of Light-ஓ...எப்படி உருவத்துக்குள் மட்டுமே ஈசனை அடக்க முடியாதோ...அதே போல் உருவம் இன்மைக்குள் மட்டு"மே"யும் ஈசனை அடக்க முடியாது!

Radha said...

ரவி, ஆவுடையார் கோயில் நீங்க குறிப்பிட்ட மாதிரி மாணிக்க வாசகருக்கு சிவன் அருள் புரிந்த இடம். இங்கு இறைவனை "formless absolute" ஆக வழிபாடு செய்கிறார்கள் என்றும் இங்கு உருவ வழிபாடு இல்லை என்றும் கேள்வி. (நான் நேரில் சென்று சேவை செய்யும் பாக்யம் இன்னும் பெறவில்லை.)

தங்களுடைய பின்னூட்டங்களில் இருந்து உருவ அருவ இறை தத்துவங்கள் குறித்து தாங்கள் கொண்டுள்ள நிலைப்பாடு தெளிவாக புரிந்தது. திரு கோவி கண்ணன் அவர்களது நிலைப்பாடும் புரிந்தது.
நீங்கள் ரொம்பவும் மெனக்கட்டு உருவமும் உண்டு என்று வாதிடுவதும் ரசிக்கும்படி உள்ளது. :-)

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடையநின்றனரே.

~
ராதா