Saturday, December 31, 2005

99: தெய்வீக எண்

எண்களில் ஒன்பதாம் எண்ணுக்கு ஒரு தனிப் பெருமை உண்டு. இந்த எண்ணை தெய்வீக எண் என்றும் கூறுவர்.

உயர்வற உயர்நலம் உடையவன் இறைவன்; அவனைக் குறிக்க எண்களிலேயே உயர்ந்த எண்ணாகிய ஒன்பது தானே பொருத்தமான எண்.

இந்த எண்ணுடன் வேறு எந்த எண்ணைக் கூட்டினாலும் எந்த எண்ணைக் கூட்டினோமோ அந்த எண்ணே மிகும். எடுத்துக்காட்டுகள்: 9 + 5 = 14 = 1+4 = 5; 9+3 = 12 = 1+2 = 3; இப்படி தன்னுடன் எந்த எண்ணைக் கூட்டினாலும் தான் மறைந்து அந்த எண்ணை வெளிப்படுத்திக் காட்டுவதால் அது இறையைக் குறிக்கும் எண் என்பர்; இறையும் தன்னை மறைத்து தன்னைச் சார்ந்து நிற்கும் பிறவற்றை வெளிப்படுத்துகிறதே.

அதே போல் இந்த எண்ணின் பெருக்கல் வாய்ப்பாட்டைப் பார்த்தால் இன்னும் ஒரு உண்மை விளங்கும். இந்த எண்ணை வேறு எந்த எண்ணோடு பெருக்கினாலும் விடையாக வரும் எண் ஒன்பதாய்த் தான் இருக்கும். எடுத்துக்காட்டுகள்: 9 * 5 = 45 = 4+5 = 9; 9*11 = 99 = 9+9 = 18 = 1+8 = 9. இப்படி மற்ற எண்களை எல்லாம் தன்னுள் அடக்கிக் கொண்டு தான் மட்டுமே நிலையாய் நிற்பதால் இந்த எண் இறையைக் குறிக்கிறது என்பதில் என்ன சந்தேகம்?

பழந்தமிழில் இந்த எண்ணுக்குத் தொன்பது என்பது பெயர் என்று படித்துள்ளேன். தொன்மையான இறைவனைக் குறிக்கும் எண் தொன்பதாய்த் தானே இருக்க முடியும்? அந்தப் பெயர் எப்படியோ ஒன்பது என்று மறுவிவிட்டது. ஆனால் தொன்னூறு, தொள்ளாயிரம் எல்லாம் இன்னும் வழக்கில் இருக்கிறது.

தொன்னூற்றித் தொன்பதாம் பதிவில் தொன்பதைப் பற்றி பேசக் கிடைத்தது அந்தத் தூயவன் அருளே. அவனைப் பணிந்து இந்த 2005 வருடத்தை இனிதே முடித்து புது வருடம் எல்லார்க்கும் எல்லா நன்மையும் தர வேண்டும் என்று பணிந்து வாழ்த்துவோம்.

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.

எல்லார்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

29 comments:

ஞானவெட்டியான் said...

தங்களின் இல்லத்திலுள்ளோர் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

தருமி said...

கருத்துப் பிடிக்கவில்லை; வாழ்த்து பிடிக்கிறது.

வாழ்த்துக்கள்

மதுமிதா said...

99
9+9=18; 1+8=9
9x9=81; 8+1=9

நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள் குமரன்.


எம்பது,தொம்பது-80,90
எண்ணூறு,தொண்ணூறு-800,900
எண்ணாயிரம்,தொள்ளாயிரம்-8000,9000
என்று ஏன் இல்லை?

தொண்ணூறு-90
தொள்ளாயிரம்-900
ஒன்பதாயிரம்-9000
என்கிறோம்.

தனிபதிவிட எண்ணியிருந்தேன்.

b said...

கீழ்க்கண்ட இணைப்பில் அலசலைப் பார்க்கவும்.

http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&file=viewtopic&t=417

எனக்கு 7, மற்றும் 9 பிடிக்கும். பயங்கர எண் விரும்பி எல்லாம் இல்லை நான்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் நண்பர்களுக்கும்.

சிவா said...

குமரன்!

அப்போ 100 வது பதிவுல எண் 100-அ பத்தி பேசப்போறீங்களா?. நான் இதுவரை அறியாத கணிதம். கணிதத்தில் கூட கடவுளை இழுத்து போடும் உங்க பக்தியே பக்தி ஐயா
:-))) அப்படியே நியூமராலஜி பத்தி ஒரு பதிவும் போட்டுடுங்க குமரன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

எண்களில் இறைவனை பார்ப்பது அந்த நாள் முதல் இந்தநாள் வரை உள்ளதுதான்.அருவமும் உருவமாகி அநாதியாய் பலவாய் ஒன்றாய் ----அருணகிரியார் கண்ணதாசனும் ஒன்றானவன் உருவில் இரண்டானவன--- அதுமட்டும் இல்லாமல் பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் அவன் பெயர்தான் இறைவன் என்று 0வில் இறைவனை பார்த்தவர் நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்பன் தி. ரா. ச

G.Ragavan said...

முதற்கண் வாழ்த்துகள் குமரன். நூறைத் தொடப் போகின்றீர்கள். தொடும் முன் ஒரு சின்ன நிதானமாய் இந்தப் பதிவு.

தொன்பது என்பதே முந்தைய ஒன்பது என்பது மிகச் சரி.

ஆனால் ஒன்பதில் இறைவனைக் கண்டதாக நான் எங்கும் படித்த நினைவில்லை.

முதல் பூரணவெண் என்பதால் ஆறை இறைவன் என்று சொல்லிப் படித்திருக்கின்றேன். இந்தச் செய்தி எனக்கு மிகப் புதிது.

பூரணவெண் குகனைப் போற்று என்று முடியும் செய்யுள் ஒன்றை மலேசிய ஜேபி அவர்கள் எழுதிப் படித்த நினைவு.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஞானவெட்டியான் ஐயா. தங்களின் இல்லத்தில் உள்ளோர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி தருமி ஐயா. பதிவின் கருத்து முழுவதும் பிடிக்கவில்லையா; இல்லை ஏதேனும் ஒரு பாகம் மட்டும் பிடிக்கவில்லையா?

குமரன் (Kumaran) said...

ஆமாம் அக்கா.

//99
9+9=18; 1+8=9
9௯9=81; 8+1=9
//

இது தான் 99ம் பதிவில் இதைப் பற்றி எழுத எனக்குத் தூண்டுதலாக இருந்தது. :-)

தொன்பத்து (பத்தின் முன்னால் வருவது) என்ற பொருளும் தொன்பது (ஒன்பது) என்பதற்கு உண்டு என்று படித்திருக்கிறேன். அது போலவே தொண்ணூறு (நூறுக்கு முன்னால் வருவது), தொள்ளாயிரம் (ஆயிரத்துக்கு முன்னால் வருவது) என்பவைகளும்.

குமரன் (Kumaran) said...

மூர்த்தியண்ணா. நீங்கள் கொடுத்த சுட்டியைப் பார்த்தேன். நன்றி. உங்களுக்கும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

சிவா. 100வது பதிவு நாளை வரும். அப்போது என்ன பதிக்கிறேன் என்று பார்க்கலாம். :-)

இந்தப் பதிவின் கருத்து நானும் என் தம்பியும் இரண்டு வருடங்களுக்கு முன் ஆன்மிகம் சம்பந்தமாகப் பேசிக்கொண்டிருந்த போது வந்தது. அது 99 என்பதைப் பார்த்தவுடன் நினைவுக்கு வந்தது; உடனே பதித்துவிட்டேன். :-)

நியூமராலஜியும் நானும் வெகு தூரம் சிவா. அதனால் பதிவு எல்லாம் அதைப் பற்றி எழுத என்னால் முடியாது.

குமரன் (Kumaran) said...

ஆமாம் TRC. நீங்க சொன்ன மாதிரி பல பேர் எண்களில் இறைவனைக் கண்டிருக்கிறார்கள். திருவிளையாடல் படத்தில் வரும்
ஒன்றானவன் உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்றான வேதத்தில் நான்கானவன்
நமசிவாய என ஐந்தானவன்
இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
... என்று போகும் பாடல் எனக்கும் மிகப் பிடிக்கும்.

வாழ்த்துகளுக்கு நன்றிகள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

நன்றி இராகவன். ஆறுமுகனைப் பற்றியே அதிகம் படித்தும் சிந்தித்துக் கொண்டும் இருப்பதாலோ என்னவோ மற்ற எண்கள் கண்களில் படவில்லை. :-)

ஜேபி அவர்கள் எழுதியதை எங்கே படிக்கலாம் இராகவன்?

Unknown said...

Arrumayana Pathivu. Really I did not know that number nine has such a speciality.

Nandri Kums.

Anbudan,
Natarajan.

துளசி கோபால் said...

குமரன்,

100வது பதிவுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

என்னோட எண் 9 தான்! அட!

G.Ragavan said...

// நன்றி இராகவன். ஆறுமுகனைப் பற்றியே அதிகம் படித்தும் சிந்தித்துக் கொண்டும் இருப்பதாலோ என்னவோ மற்ற எண்கள் கண்களில் படவில்லை. :-)
// உங்களைச் சொல்கின்றீர்களா என்னைச் சொல்கின்றீர்களா? ரெண்டும் ஒன்றுதானா?

// ஜேபி அவர்கள் எழுதியதை எங்கே படிக்கலாம் இராகவன்? //

அதைத்தான் நான் தேடித் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. அகத்தியர் என்ற யாஹூ குழுமத்தில் அவர் மிகவும் சிறப்பாகச் செய்து வருகின்றார். அங்கு சேர்ந்து அவரிடம் கேட்டால் கண்டிப்பாகக் கிடைக்கும்.

குமரன் (Kumaran) said...

TRC அண்ணா ரொம்ப நல்லா தமிழில் பின்னூட்டம் இட ஆரம்பித்துவிட்டார். நீங்களும் தமிழில் எழுத சீக்கிரம் ஆரம்பிக்கலாமே நடராஜன். ஏன் இன்னும் தங்கிலீஷிலேயே பின்னூட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்?

ஒவ்வொரு எண்ணுக்கும் இப்படி ஒவ்வொரு பெருமையைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். மற்ற பின்னூட்டங்களைப் பார்த்தாலே தெரிந்திருக்குமே. கொஞ்சம் யோசிச்சா எல்லா எண்களுக்கும் பதிவுகள் போட்டுவிடலாம்.

குமரன் (Kumaran) said...

100வது பதிவு 'கூடலி'லேயே போட்டாச்சு துளசி அக்கா. அட்வான்ஸ் வாழ்த்துகளுக்கு நன்றி. பெரிய ஆளுங்க எண்ணெல்லாம் 9 தான் அக்கா. நம்ம முதல்வர் அம்மாவுக்கும் 9 தான் ராசியான எண்ணாமே? :-)

குமரன் (Kumaran) said...

உங்களைத் தான் சொன்னேன் இராகவன். ஆறுமுகனை நினைத்தால் இராகவனும் இராகவனை நினைத்தால் குமரனும் நினைவுக்கு வருகிறார்கள். வலைப்பதிவர்களின் பின்னூட்டங்களைப் பாருங்கள் அது நன்றாய்த் தெரியும் :-)

அகத்தியர் குழுமத்தில் சீக்கிரம் சேர்கிறேன். நிறைய பேர் அதனைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.

G.Ragavan said...

// உங்களைத் தான் சொன்னேன் இராகவன். ஆறுமுகனை நினைத்தால் இராகவனும் இராகவனை நினைத்தால் குமரனும் நினைவுக்கு வருகிறார்கள். வலைப்பதிவர்களின் பின்னூட்டங்களைப் பாருங்கள் அது நன்றாய்த் தெரியும் :-) //

ஆறுமுகனோடும் குமரனோடும் நினைக்கப் பெறும் பெரும் மகிழ்ச்சிக்கு ஈடு உண்டா! ஆகா!

Anonymous said...

kumaran,

The number 9 is not special at all other than that it is the last number in the decimal numbering system.

if you take any last number from an arbitary numder system, all the facts about 9 will also be true for the number in that particular number system.

e.g take hex decimal ( it is easy because we use it in computer)
0x0F + 1 = 0x10 ==> 1 + 0 = 1
0xFF ==> 0xF + 0xF = 0x1E = 1 + 0xE = 0xF

this is true for binary, octal ..all number system.

I think if you want to see GOD, you can see anywhere and everywhere not only #9.

-bala

குமரன் (Kumaran) said...

தகவலுக்கு மிக்க நன்றி பாலா. கணிதத்தின் படி நீங்கள் சொல்வது சரியாய் இருந்தாலும் வழக்கில் தசம எண்கள் தானே உள்ளது. எல்லாருக்கும் பைனரி, ஹெக்சாடெசிமல் எல்லாம் புரியாது. எல்லாருக்கும் புரியும் படி உள்ளது ஒன்பதின் பெருமையே. அதனால் அது தெய்வீக எண்ணே. :-)

பாலா. நீங்கள் எனக்குத் தெரிந்தவரா? அப்படியென்றால் நீங்கள் யாரென்று இங்கோ இல்லை தனி மடலிலோ சொல்லுங்கள்.

Anonymous said...

kumaran,
in maths a lot of number have certain property in it. If you highlight that property and call that as a GOD number, then you can.
e.g. 1 has some property.
1 * anything = anything.
anything/1 = anything.

0 has some peroperty.
0 * anything = ZERO like this.
anything/ 0 = universe.

the same way prime numbers have certain properties in it. Can we call all PRIME numbers are GOD?.

Similary the last number( i.e. 9) in the number system ( decimal system) has that property thats all.

I certailny like the view of seeing GOD everywhere not only number 9. I belong to the group which accepts

" Yennum eluthum iraivan aagum".

Sorry I can not accept just number 9 has more significance than others.

Yes. I'm balakesan ! I'm intersted in maths, so i just peeked your writing.

Keep it up !! your writing are good.

-bala

குமரன் (Kumaran) said...

Thanks Balakesan for your comments.

உன் கருத்தைப் படித்தவுடனேயே தோன்றியது என் நண்பர்களில் ஒருவர்தான் இதை எழுதியிருக்கிறார் என்று. ஆனால் எந்த பாலா என்று உடனே தெரியவில்லை.

நீ சொன்ன மாதிரி ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு சிறப்பினைக் கூறலாம். 0 (பூஜ்யம்), 1 (ஒன்று) இந்த இரண்டினை இங்கே எடுத்துக்காட்டியிருக்கிறாய். சீக்கிரம் அந்த எண்களையும் தெய்வீக எண்கள் என்று இலக்கிய சான்றுகளுடன் பதிவுகள் போடுகிறேன். அதனால் அடிக்கடி இந்த வலைப்பதிவுக்கு வந்து பார். :-)

Prime Numbers நிச்சயமாய் தெய்வீக எண்கள் தான். அதில் என்ன சந்தேகம். :-) தெய்வம் தானே Prime.

இந்தப் பதிவு எனது 99ம் பதிவு என்பதால் என்ன எழுதலாம் என்று எண்ணிப்பார்த்ததில் வந்த எண்ணம் தான் இந்த எண்ணைப் பற்றியப் பதிவு. மற்றபடி எந்த எண்ணையும் இறைவனாய்க் கூற முடியும் என்பதற்கு ஏராளமான இலக்கியச் சான்றுகள் இருக்கின்றன. உனக்குத் தெரியாததா?

பாராட்டுகளுக்கு நன்றி. தவறாமல் மற்றப் பதிவுகளையும் படித்துப், பிடித்திருந்தால் + வாக்கும் போட்டுவிட்டு போகவும்.

Anonymous said...

Arumayana Vilakkam. Puthandu nal vazhthukkal !!

KT

rv said...

ஒன்பதுக்கு இவ்வளவு விசேஷமா?

எனக்குத் தெரிஞ்சதெல்லாம்..

"மூன்றெழுத்து கெட்டவார்த்தை அந்த வார்த்தை என்ன சிஷ்யா??"

குமரன் (Kumaran) said...

நன்றி KT

குமரன் (Kumaran) said...

இராமநாதன், உங்கள் பின்னூட்டத்திற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அதனால் நன்றி மட்டும் கூறிக்கொள்கிறேன்.

நிச்சயமாய் அந்த கெட்ட வார்த்தைகள் என்ன என்று பதிவு போட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். :-)