
நண்பர் சுரேஷ் தன் பதிவில் சௌராஷ்ட்ர மொழியின் வரலாற்றைப் பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கிறார். எழுத்துகள் இருந்தாலும் அவை இருப்பதே தெரியாமலும், தெரிந்தாலும் கற்றுக் கொள்ளாமலும் (நான் இந்த வகையில் இருக்கிறேன்), கற்றிருந்தாலும் புழங்காமலும் ஒரு பேச்சு மொழியாக மட்டுமே சௌராஷ்ட்ரம் இப்போது இருக்கிறது. மொழி நிலைத்திருக்க வேண்டுமெனில் இந்த நிலை மாற வேண்டும். மொழி வெறும் தகவல் தொடர்பு சாதனம் மட்டுமே இல்லை; அதில் பண்பாடும் அடங்கியிருக்கிறது. எழுதத் தொடங்கும் போது இலக்கியங்களும் புதிது புதிதாகத் தோன்றும். மொழியும் நிலைபெறும். இந்த நோக்கங்களை மனத்தில் கொண்டு பலரும் ஊக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த பட்டறையை மதுரை சௌராஷ்ட்ரக் கல்லூரியில் நடத்த நண்பர் சுரேஷும் அவருடைய செயற்துணைவர்களும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மேல்விவரங்களை அவருடைய பதிவில் பார்க்கலாம்.
