***

ஸ்ரீபூமிப்பிராட்டியார் திருவவதாரமான சூடிக்கொடுத்த நாச்சியாருக்குத் திருவவதாரஸ்தலம் பாண்டியமண்டலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர். திருவவதரித்தது பெரியாழ்வாருடைய திருநந்தவனத்தில் திருத்துழாயடியிலே. திருநக்ஷத்ரம் ஆடி மாஸம் பூர்வபக்ஷத்தில் சதுர்த்தி செவ்வாய்க்கிழமை திருவாடிப்பூரம் வரீயாந்நாமயோகம் பத்ரகரணம் துலாலக்னம் மத்யாஹ்ந ஸமயத்தில். பூமியிலே இருந்து பெரியாழ்வார் திருமாளிகையிலே வளர்ந்தருளினார். திருநாமங்கள் சூடிக்கொடுத்தாள், கோதை, ஆண்டாள், ஆழ்வார் திருமகள். இவள் எழுந்தருளியிருக்கிறது நூற்றெட்டுத் திருப்பதிகளிலும். அதிலும் ப்ரதானம் ஸ்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். இவர் அருளிச் செய்த ப்ரபந்தங்கள் திருப்பாவை முப்பது பாட்டும், நாச்சியார் திருமொழி நூற்றுநாற்பத்து மூன்று பாட்டும். இவள் பாடின திருப்பதிகள் திருவாய்ப்பாடி, திருப்பாற்கடல், வடமதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், கோயில், திருமலை. இவளுக்குத் திருவாராதனம் நம்பெருமாள். ஆசார்யர் பெரியபெருமாள்.
இவளுக்குத் தனியன் (பராசரபட்டர் அருளிச் செய்தது)
நீளாதுங்க ஸ்தநகிரிதட ஸுப்தம் உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சத சிரஸ் ஸித்தம் அத்யாபயந்தீ
ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவ அஸ்து பூய:
இதன் பொருள் - நப்பின்னை பிராட்டியின் ஸ்தனங்கள் என்னும் மலைகளின் சாரலில் கண்வளர்பவனும், இவளது மாலையை தனக்கு விலங்காகக் கொண்டு கட்டுப்பட்டு உள்ளவனும் ஆகிய க்ருஷ்ணனை திருப்பள்ளி உணர்த்தினாள். வேதங்களின் தலைப்பாகமாக உள்ள வேதாந்தங்கள் கூறும் தனது அடிமைத்தனத்தை கண்ணனிடம் அறிவித்தாள். தானாக வலியச் சென்று அவனை அனுபவித்தபடி இருந்தாள். இப்படிப்பட்ட ஆண்டாளின் விஷயமாகக் கூறப்படும் இந்த நமஸ்காரங்கள், காலம் என்ற தத்வம் உள்ளவரை விளங்க வேண்டும்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
நன்றி: நம்பெருமாள் விஜயம் ஆகஸ்ட் 1 - 2007 மின்னிதழ்
***

பெருமாளின் தேவியர்களில் ஒருவரான பூமிப்பிராட்டியாரின் திரு அவதாரமான சூடிக்கொடுத்த நாச்சியார் எனப்படும் ஆண்டாளின் பிறந்த இடம் பாண்டிய நாட்டில் இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர். இவர் பிறந்தது பெரியாழ்வாரின் திருநந்தவனத்தில் துளசிச்செடியின் கீழே. இவருடைய பிறந்த நாள் ஆடி மாதம் வளர்பிறை நான்காம் நாள் செவ்வாய்க்கிழமை திருவாடிப்பூரம் என்னும் நட்சத்திரத்தில் துலா லக்னத்தில் மதிய நேரத்தில். பூமியிலே பிறந்து பெரியாழ்வாரின் வீட்டில் வளர்ந்தார். இவருடைய திருப்பெயர்கள் சூடிக் கொண்டாள், கோதை, ஆண்டாள், ஆழ்வார் திருமகள். இவர் நூற்றியெட்டு திவ்விய தேசங்கள் என்னும் திருப்பதிகளிலும் பெருமாளுக்கு இடப்பக்கம் எழுந்தருளியிருக்கிறார். அவற்றில் முதன்மையான இடம் ஸ்ரீவில்லிபுத்தூர். இவர் இயற்றிய நூல்கள் திருப்பாவை முப்பது பாட்டும், நாச்சியார் திருமொழி நூற்றுநாற்பத்தி மூன்று பாட்டும் ஆகும். இவர் பாடிய திருப்பதிகள் திருவாய்ப்பாடி, திருப்பாற்கடல், வடமதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், கோயில் எனப்படும் திருவரங்கம், திருமலை (அழகர் கோவில் எனப்படும் திருமாலிருஞ்சோலையையும் பாடியிருக்கிறார். ஆனால் எப்படியோ அந்தத் திருப்பதியின் பெயர் இங்கே விடுபட்டிருக்கிறது). இவர் வணங்கியது நம்பெருமாள் என்னும் திருவரங்க நகர் வளர் அழகிய மணவாளன். இவருக்கு ஆசாரியர் பெரியபெருமாள் என்னும் திருவரங்கத்து மூலவர். (ஆண்டாளே பட்டர்பிரான் கோதை என்று தன்னை அழைத்துக் கொள்வதால் பெரியாழ்வாரே ஆண்டாளின் ஆசாரியர் என்று சொல்லுவதுண்டு. இங்கே பெரியபெருமாள் இவருக்கு ஆசாரியர் என்று சொல்லியிருப்பது வியப்பளிக்கிறது.)
தனியனுக்குத் தரப்பட்டுள்ள பொருள் தற்காலத் தமிழிலேயே இருப்பதால் மீண்டும் தரவில்லை.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.