புகைப்படத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன் அன்னை அங்கயற்கண்ணியின் வரலாறு சுருக்கமாக.
மதுரையை ஆண்ட மலயத்துவஜ பாண்டியன் தனக்கு வாரிசு வேண்டுமென்பதற்காக வளர்த்த வேள்வித்தீயில் தோன்றியவள் அன்னை அங்கயற்கண்ணி. உமையன்னையின் அம்சம். அழகிய மீனைப் போன்றக் கண்களைக் கொண்டிருந்ததாலும் மீன் எப்படி தன் கண்பார்வையாலேயே தன் குஞ்சுகளைப் பாதுகாக்கிறதோ அது போல் தன் அடியவர்களைப் பாதுகாப்பவள் என்பதாலும் இவளுக்கு அங்கயற்கண்ணி (அம்+கயல்+கண்ணி - அழகிய மீனைப் போன்ற கண்கள் உடையவள்), மீனாக்ஷி (மீன் + அக்ஷி - அக்ஷம் என்றால் வடமொழியில் கண்) என்ற பெயர்கள் அமைந்தன. பெற்றவர் வைத்தப் பெயர் தடாதகைப் பிராட்டியார்.
அன்னை வேள்வித்தீயிலிருந்து சிறுமியாகத் தோன்றியபோது அவளுக்கு மூன்று கொங்கைகள் இருந்தன. அதனைக் கண்டு பெற்றோரான மலையத்துவசனும் காஞ்சனமாலையும் வருந்த, தகுந்த மணவாளனை இந்தப் பெண் காணும் போது இயற்கைக்கு மாறாக இருக்கும் மூன்றாவது கொங்கை மறையும் என்று வானமகள் சொல் சொன்னது.
அன்னையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரச மகளுக்குரிய எல்லாக் கலைகளையும் அரசமகனுக்குரிய கலைகளையும் கற்றுத் தேறினாள். அன்னை தகுந்த வயதுக்கு வருமுன்னரே பாண்டியன் காலமாக அன்னையை மதுரைக்கு அரசியாக முடிசூட்டினர்.
அரசியான பின் அவளும் அரசர்களுக்குரிய முறைப்படி எல்லா திசையிலும் சென்று பகையரசர்களை வென்று வாகை சூட விரும்பி திக்விஜயம் மேற்கொண்டாள். எல்லாத் திசைகளிலும் உள்ள அரசர்களை வென்று வடதிசையில் கயிலைக்குச் சென்று எல்லா சிவகணங்களையும் வெல்கிறாள். அன்னையின் வீரத்தைக் கண்டு சிவபெருமானே போருக்கு எழுந்தருளுகிறார். அன்னையை ஐயன் கண்டதும் அன்னையின் மூன்றாவது கொங்கை மறைகிறது. அதனைக் கண்ட அன்னை இவரே தனக்கு மணாளன் என்று உணர்ந்து பெண்ணரசிக்குரிய நாணத்தால் தலை குனிகிறாள். ஐயன் தான் மதுரைக்கு எழுந்தருளி அவளை மணப்பதாக உறுதி கூறுகிறார். அதன் படி மதுரைக்கு எழுந்தருளி அன்னையை மணந்து சுந்தரப்பாண்டியனாக வேப்பம்பூ மாலை சூடி மதுரை அரசனாக மூடி சூட்டிக் கொள்கிறார். பின்னர் அன்னைக்கும் ஐயனுக்கும் முருகப் பெருமானின் அம்சமாக உக்கிரப் பாண்டியன் தோன்ற அவனுக்குத் தகுந்த வயது வந்ததும் அரசனாக முடிசூட்டி அன்னையும் ஐயனும் மதுரை நகரில் கோயில் கொள்கின்றனர். அது தொடங்கி வாழையடி வாழையாக பாண்டிய அரசர்கள் அன்னை மீனாட்சியின் பிரதிநிதியாக மதுரையை ஆண்டு வந்தனர். அன்னை இன்றும் மதுரை நகருக்கு அரசியாய் விளங்குவதால் மதுரை வாழ் மக்கள் அனைவரும், அவர் சைவரோ வைணவரோ, யாராயிருந்தாலும் அன்னையின் அருளை நாடி நாள்தோறும் அன்னையின் கோயிலுக்கு வந்து சென்ற வண்ணமே இருக்கிறார்கள்.
மதுரையைக் கோயில் மாநகர் என்று கூறுவார்கள். திட்டமிட்டுக் கட்டிய பழைய நகரங்களில் ஒன்று மதுரை. கோயிலை மையமாக வைத்து திருவீதிகள் நான்கு புறமும் அமைந்திருக்கின்றன. கோவிலின் வெளித் திருச்சுற்றாக இருக்கும் ஆடி வீதி, அதனைச் சுற்றி சித்திரை வீதி, ஆவணி மூல வீதி, மாசி வீதி, வெளி வீதி எனத் தெருக்கள் நீள் சதுரமாக கோயிலைச் சுற்றி அமைந்துள்ளன. மதுரையில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடந்தவண்ணம் இருக்கும். அன்னையும் ஐயனும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருவீதியில் வலம் வருவர். எந்த மாதத்தில் எந்த வீதியில் வலம் வருவார்களோ, அந்த வீதிக்கு அந்த மாதத்தின் பெயரை வைத்திருக்கிறார்கள்.

இந்தப் புகைப்படத்தில் இருப்பது வடக்கு ஆடி வீதி. கோயிலுக்குள்ளேயே இருக்கிறது இந்த திருவீதி. இந்தப் படத்தைப் பார்க்கும் போது பல நினைவுகள் பொங்கி வருகின்றன. முதலில் எதிரே தூரத்தில் நான்கு தூண்கள் மட்டும் தெரிகிற திருக்கல்யாண மண்டபம். ஒவ்வொரு வருடமும் சித்திரைத் திருவிழாவில் அன்னைக்கும் அப்பனுக்கும் திருக்கல்யாணம் இந்த மண்டபத்தில் தான் நடக்கிறது. அது மட்டும் அன்றி கோவிலில் நடக்கும் எல்லா வித சொற்பொழிவுகளும், இசை நிகழ்ச்சிகளும் இந்த மண்டபத்தில் தான் நடைபெறும். இந்த மண்டபத்தில் சொற்பொழிவு ஆற்றும் போது தான் வாரியார் சுவாமிகளின் அருளாசியும் பாராட்டுக்களும் அடியேனுக்கு கிடைத்தன. பல முறை அவரின் சொற்பொழிவுகளை இந்த மண்டபத்தில் கேட்டிருக்கிறேன். அது மட்டும் அன்றி மற்ற பலருடைய சொற்பொழிவுகளும் இசைக் கச்சேரிகளும் கேட்டு ரசித்தது இந்த மண்டபத்தில் தான்.
அதற்கடுத்து நினைவிற்கு வருவது திருக்குறள் சபை. வலப்பக்கம் தெரியும் பெரிய கோபுரத்தின் முன்பு ஒரு சின்ன மஞ்சள் நிறக் கட்டடம் தெரிகிறதே. மதில் சுவரை ஒட்டிய கட்டிடம் அன்று. கோபுரத்திற்கு முன் புறம் உள்ளது. இந்த சிறு மண்டபத்தில் திருவள்ளுவர் சிலை இருக்கும். அதற்கு முன் தினந்தோறும் திருக்குறள் சொற்பொழிவு நடைபெறும். கேட்டு இன்புறும் வாய்ப்பு சில முறை கிட்டியுள்ளது.
அடுத்து நினைவிற்கு வருவது இசைத் தூண்கள். இந்தப் படத்தில் அவை தெரியவில்லை. ஆனால் அருமையான தூண்கள் அவை. அந்தத் தூண்களில் வெவ்வேறு இடத்தில் தட்டும் போது வெவ்வேறு இசை வெளிப்படும். இது போன்ற இசைத் தூண்களை திருமாலிருஞ்சோலையான அழகர் கோவிலிலும் நாச்சியார் திருமாளிகையாகிய வில்லிபுத்தூரிலும் கண்டிருக்கிறேன். மதுரையில் வாழும் பலருக்கே தெரியாத வியப்பான விஷயம் இது.
அடுத்து நினைவிற்கு வருவது இந்தப் படத்தில் தெரியும் மரத்தின் கீழ் வீற்றிருக்கும் பிள்ளையார். வாராவாரம் அதிகாலை 5 மணிக்கு இவர் திருமுன்பிருந்து தொடங்கி இறைவன் திருப்பெயர்களைப் பாடிக் கொண்டு கோவிலை வலம் வரும் சாயி பஜன் குழுவினருடன் பலமுறை கோவிலை வலம் வந்தது நினைவிற்கு வருகிறது.
அடுத்து நினைவிற்கு வருவது இடப்புறம் கொஞ்சமே கொஞ்சமாய் தெரியும் பதினாறு கால் மண்டபம். இந்த மண்டபத்தில் தான் முறுக்கு, சுண்டல் போன்றவற்றை விற்கும் சிறு வியாபாரிகள் அமர்ந்திருப்பார்கள். ஒவ்வொரு முறை கோவிலுக்கு வரும் போதும் இவர்களிடம் வாங்கித் தின்ற தின்பண்டங்கள் ஒவ்வொன்றும் தமிழமுதைப் போல் என்றும் நினைவில் தித்திப்பவை. :)
இவை எல்லாவற்றையும் விட இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்து அந்த நீல நிற மேகக் கூட்டங்கள் தான். என்ன அருமையான படம் இது. அந்த மேகக் கூட்டங்கள் தான் இந்தப் படத்தின் அழகுக்கு அழகூட்டுகிறது என்று எண்ணுகிறேன். இந்தப் படத்தை எடுத்தவரும் அதனை அனுப்பியவர்களும் நூறாண்டு காலம் நலமாய் வாழட்டும்!