Tuesday, July 29, 2008

வினையனேனுடைய மெய்ப்பொருளே!


விடைவிடாதுகந்த விண்ணவர் கோவே!
வினையனேனுடைய மெய்ப்பொருளே!
முடைவிடாதடியேன் மூத்தற மண்ணாய்
முழுப்புழுக் குரம்பையில் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தென்னை ஆண்ட
கடவுளே! கருணைமாக்கடலே!
இடைவிடாதுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

இறைவன் தருமத்தின் தலைவன். கடைபிடிக்க வேண்டியதில் சிறந்தது தருமம். தர்மோ ரக்ஷதி ரக்ஷித: - தருமம் தன்னைக் காப்பவனைக் காக்கிறது என்கிறது வேதம். அந்த தருமம் எருது ரூபமாய் இருக்கும்போது அதன் மேல் அன்பு கொண்டு அதனைத் தனது வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளான் இறைவன்.

தரும வழி நடப்பவரே மனிதர் தொழும் தெய்வங்களாகி நிற்கிறார்கள். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுகிறார்கள். இறைவன் தருமத்தின் தலைவன் ஆகையால் இயற்கையாகவே அவன் விண்ணில் வாழும் விண்ணவர் தலைவன் ஆகிறான்.

அவன் விண்ணவர் தலைவனாய் அவ்வளவு உயரத்தில் நின்றாலும் புண்ணிய பாவங்கள் செய்து அந்த வினைப்பயனை அனுபவித்துக்கொண்டிருக்கும் சாதாரண உயிர்க்கும் என்றும் நிலையான துணையாக இருக்கிறான்.

ஈசன் வானவர்க்கு என்பன்; என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு?
நீசனேன் நிறை ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்தப் பரஞ்சுடர் சோதிக்கே

என்பார் நம்மாழ்வார்.

நீசனாய் எந்த நற்குணங்களும் இல்லாமல் இருக்கும் என்னிடமும் அன்பு வைத்த இறைவனுக்கு 'வானவர் தலைவன்' என்பதா பெருமை? என்னிடமும் அன்பு வைத்தான் என்பதே பெருமை, என்கிறார் நம்மாழ்வார். அது போலவே வாதவூராரும் 'விடை விடாது உகந்த விண்ணவர் கோவே; வினையனேனுடைய மெய்ப்பொருளே' என்கிறார்.

அந்த கருத்தையே இன்னும் விரித்து 'உன் அடிமையாகிய நான் இந்த உடம்பில் கிடந்து கெட்ட நாற்றம் விடாது முதுமையடைந்து வீணே மண்ணாய் அழியாத வண்ணம் என்னை ஆண்டு கொண்டாய்' என்கிறார்.

அப்படி உயர்ந்தவன் தாழ்ந்தவனை ஆண்டுகொண்டதால் அவனைக் கருணைமாக்கடலே என்கிறார். எல்லோரும் தம்மில் உயர்ந்தவருடன் அன்புடன் நடந்துகொள்வர். தமக்கு இணையானவருடன் நட்புடன் நடந்துகொள்வர். தம்மிலும் சிறிது தாழ்ந்த நிலையில் இருப்பவருடன் அன்பு கொண்டாலே அவர்களைக் கருணைக்கடல் எனலாம். இறைவனோ மிகப் பெரியவனாய் இருந்த போதிலும் மிகத் தாழ்ந்த நம்மிடமும் கருணை கொள்வதால், அவனே 'கருணைமாக்கடல்' எனத் தகுந்தவன்.

என்னை ஆண்டு கொண்டவனே என்பதோடு நிறுத்தவில்லை. கடவுளே என்கிறார். எல்லாப் பொருளிலும் நம்மிலும் உள் கடந்து நிற்பதால் அவனுக்குக் கடவுள் என்று பெயர். நம் தனி முயற்சியால் எவ்வளவு தான் முயன்றாலும் அந்த உள் கடந்து நிற்பவனைக் காண முடியாது; அப்படி அவனைக் காணும் வரை நம் புலன்களின் ஆட்சியிலிருந்து விடுபட முடியாது. அவனே தன்னைக் காட்டிக் கொடுக்கவேண்டும். இப்படி உள்கடந்து கடவுளாய் நின்றாலும் என்மேல் கருணை கொண்டு நீயாய் உன்னைக் காட்டிக்கொடுத்தாய் என்பதைக் குறிக்கத்தான் 'கடவுளே' என்கிறார்.

இப்படிப் பட்ட உன்னை இடைவிடாமல் நான் பிடித்துக்கொண்டேன். நீ எம்மை விட்டு செல்லவேண்டாம் என்று வேண்டி இந்தப் பாட்டை முடிக்கிறார்.

2 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'திருவாசகம் ஒரடொரியோ' பதிவில் 13 நவம்பர் 2005 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

தி. ரா. ச.(T.R.C.) said...
Dear Kumaran,
Nov onnam thetheya intha padalai ezhuthe vilakkamum koduthu viteergal.idu athanudaiya part twova TRC

November 13, 2005 8:56 AM
--

சிங். செயகுமார். said...
hi kumaran if u attach thoose song am get more pleasure . can u try?

November 13, 2005 9:35 AM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் திரு. TRC. நவம்பர் 1ம் தேதி பதிவும் இந்தப் பாடலைப் பற்றியதே. ஒவ்வொரு பாடலுக்கும் முதலில் ஒரு பதிவில் சொற்பொருள் விளக்கம் கொடுத்துவிட்டு பின்னர் இரண்டாம் பதிவில் என் மனதில் தோன்றும் விளக்கங்களைக் கொடுக்கிறேன்.

November 13, 2005 10:14 AM
--

குமரன் (Kumaran) said...
சிங். செயகுமார். நீங்கள் சொல்வது போல் அந்தப் பாடலின் ஒலிப்பதிவை இணைத்தால் இன்னும் சுவையாய் இருக்கும் தான். ஆனால் Copy rights ப்ரச்னை இருக்கே. இளையராஜா எப்போது அதனை பொதுவில் copyrights உரிமைகள் இல்லாமல் வைக்கிறாரோ அப்போது ஒலிவடிவத்தை இணைப்பதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது.

November 13, 2005 10:16 AM
--

G.Ragavan said...
// ஒவ்வொரு பாடலுக்கும் முதலில் ஒரு பதிவில் சொற்பொருள் விளக்கம் கொடுத்துவிட்டு பின்னர் இரண்டாம் பதிவில் என் மனதில் தோன்றும் விளக்கங்களைக் கொடுக்கிறேன் //

நல்ல முயற்சி குமரன். படிக்கும் பொழுது எங்கேயாவது எனது கருத்தைத் திணிக்கலாம் என்றிருந்தேன். ஆனால் அதற்கு இடமில்லாமல் நன்றாக எழுதியிருக்கின்றீர்கள். எனது பாராட்டுகள்.

November 14, 2005 3:51 AM
--

தி. ரா. ச.(T.R.C.) said...
Dear Kumaran
Kadavul thannai katti kodukka vendum appadi seithal than Avanai pidikka mudium engireerkal . Ungalukku oondru thiriyuma. Kadavulai azhvarkal yanaikku samanamaha oppiduvarkal.
Yanai thannai kattavendiya sangiliyay thane sumanthukondu sellum.Athupola kadavulum thnnai katta vendiya kayertrayahiya Bhakthikayerai thane eduyhukonduseluvar endru kurupiduvarkal. unkal karuthu Pl. Nandri TRC

November 14, 2005 10:00 AM
--

குமரன் (Kumaran) said...
என்ன இராகவன்...இந்தப் பாட்டுக்கு ஒரு எடுத்துகாட்டு டக்குன்னு நினைவுக்கு வரலையா? என்ன இது? Just Kidding...

அடுத்தவங்க பாட்டுக்கே எவ்வளவு நாள் விளக்கம் சொல்லப் போறீங்க. உங்க சொந்தக் கருத்தை 'திணிக்க'லாம் இல்லையா என்று நண்பர்கள் சிவாவும் திருப்பதியும் வற்புறுத்தியதால் இப்படி முயற்சி செய்கிறேன்.

November 14, 2005 12:02 PM
--

குமரன் (Kumaran) said...
கடவுளை யானைக்கு ஒப்பிடும் வைஷ்ணவக் கருத்தை நானும் படித்துள்ளேன் திரு. TRC

அந்த கடவுள் எனும் யானை தன்னைக்கட்ட 'பக்தி' எனும் கயிற்றை மட்டும் நமக்கு கொடுப்பதில்லை. நாம் அதன் மேல் ஏறவேண்டும் என்றால் தன் 'காலைக்' கொடுத்து நம்மை மேலே ஏற்றிவிடவும் செய்யும். இல்லையா?

November 14, 2005 12:06 PM
--

G.Ragavan said...
// கடவுளை யானைக்கு ஒப்பிடும் வைஷ்ணவக் கருத்தை நானும் படித்துள்ளேன் திரு. TRC //

ஆனையோடு தொடர்புள்ள பழந்தமிழ்க் கருத்து இன்னொன்று உள்ளது. அது கந்தன் என்ற பெயர்க்காரணம். விரைவிலேயே அதற்கு ஒரு தனிப்பதிவு போடுகிறேன்.

November 14, 2005 11:50 PM
--

குமரன் (Kumaran) said...
உங்கள் கந்தனும் ஸ்கந்தனும் பதிவைப் பார்த்தேன் இராகவன். அங்கு வந்து என் பின்னூட்டத்தை இடுகிறேன்.

November 15, 2005 5:00 AM
--

Voice on Wings said...
//இளையராஜா எப்போது அதனை பொதுவில் copyrights உரிமைகள் இல்லாமல் வைக்கிறாரோ அப்போது ஒலிவடிவத்தை இணைப்பதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது.//

Copyrights பற்றி தெரியாது. ஆனால் கீழே தரப்பட்ட சுட்டியில் எல்லா திருவாசகப் பாடல்களும் ஒலிவடிவில் கேட்கக் கிடைக்கின்றன.

http://www.musicindiaonline.com/l/26/s/album.3785/music_director.504/

November 21, 2005 4:53 AM
--

குமரன் (Kumaran) said...
வருகை தந்ததற்கு நன்றி Voice on Wings

November 21, 2005 8:47 PM
---

jsankar said...
kumaran,
theiruvasagam is not what u wrote.
That starts with sivapuram.
namachivaya vazhga nathan thal vazhga.

June 26, 2007 10:10 AM
--

குமரன் (Kumaran) said...
Jசங்கர், நீங்கள் சொல்லும் 'சிவபுரம். நமச்சிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க' என்று தொடங்கும் பாடலும் திருவாசகத்தின் பகுதியே. அது மட்டுமே திருவாசகம் இல்லை. திருவாசகம் என்று இணையத்தில் தேடிப் பாருங்கள். அடியேன் இங்கே பொருள் சொல்லும் பாடல்களும் வரும்.

July 05, 2007 9:17 PM

Kavinaya said...

அருமையான விளக்கம் குமரா.

//இறைவனோ மிகப் பெரியவனாய் இருந்த போதிலும் மிகத் தாழ்ந்த நம்மிடமும் கருணை கொள்வதால், அவனே 'கருணைமாக்கடல்' எனத் தகுந்தவன்.//

//நீசனேன் நிறை ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்தப் பரஞ்சுடர் சோதிக்கே//

இறைவனின் கருணையை செவ்வனே எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.