Tuesday, December 19, 2006

சொல்லின் செல்வன் அனுமன்



அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்

ஐம்பூதங்களில் ஒன்றான காற்றின் மகன் அனுமன். ஐம்பூதங்களில் ஒன்றான நீரைத் (கடலைத்) தாவி, ஐந்தில் ஒன்றான விண்ணகமே வழியாக நல்லவர்களான இராம இலக்குவருக்காகச் சென்று, ஐந்தில் ஒன்றான பூமி பெற்ற பெண்ணான சீதையை கண்டு, அயலவர் ஊரான இராவணன் ஊரில் ஐந்தில் ஒன்றான நெருப்பை வைத்தான். அவன் நம்மை காப்பான்.

இன்று (20-Dec-2006) அனுமன் பிறந்த நாள்.

Wednesday, December 06, 2006

தமிழ்மணத்தில் இருந்து விடைபெறுகிறேன்

அன்பு நண்பர்களே,

கடந்த சில மாதங்களாக மனதில் ஓடிக் கொண்டிருந்த இந்த எண்ணத்தை நிறைவேற்றும் காலம் வந்துவிட்டது என்று எண்ணுகிறேன். அதனை அறிவித்துவிட்டு இதோ தமிழ்மணத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன்.

தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றி இரண்டு மூன்று வருடங்களாக அறிந்திருந்தாலும் 2005 வருடம் தான் தமிழ்மணத்தைப் பற்றியும் பிளாக்கரைப் பற்றியும் நண்பர் சிவபுராணம் சிவா சொன்னார். அந்த அறிமுகத்தால் தமிழ்ப்பதிவுகள் எழுத வந்து தமிழ்மணத்தால் பல நன்மைகள் பெற்றேன். தமிழ்மணத்தால் பெற்ற நன்மைகளைச் சொல்லி முடியாது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதனைப் பற்றி பலமுறை சொல்லியிருக்கிறேன்.

தமிழ்மணத்தின் பழைய நிர்வாகமும் புதிய நிர்வாகமும் உவப்பு வெறுப்பின்றி நடுநிலைமையோடு இந்த வலைதிரட்டும் பணியைச் செவ்வனே செய்து வருகிறார்கள். அவர்கள் தொடர்ந்து இந்தத் தமிழ்ப்பணியைச் செவ்வனே செய்து தமிழை வளர்த்து வரவேண்டும் என்று வாழ்த்துகளுடன் வேண்டிக் கொள்கிறேன்.

அண்மைக்காலமாகத் தமிழ் வலைப்பதிவுலகில் கருத்து மோதல்களில் தொடங்கி அவை தனிமனிதத் தாக்குதல்களாகவும் நக்கல், நகைச்சுவை என்ற பெயரில் எழுதப்படும் தரம் குறைந்த எழுத்துகளாகவும் பரிணாமம் பெற்று வருகிறது. வலையுலகச் சூழல் மிகவும் நச்சூட்டப் பெற்று வருகிறது. இந்தச் சூழலில் இருந்து விடுபட பதிவுகளில் எழுதுவதையே நிறுத்திவிடலாமா என்று சிந்தித்ததில் அதனை விட சிறந்தது இந்த சூழல் எங்கு அதிகம் தென்படுகிறதோ அங்கிருந்து விடுபடுவதே என்று தோன்றியது. அதனால் நான் விரும்பிப்படிக்கும் வலைப்பூக்களைச் சேமித்து வைத்துக் கொள்ளத் தொடங்கினேன். நிறைய பதிவுகளைச் சேர்த்து வைத்தாகிவிட்டது. இன்னும் சில நாட்களில் எல்லாமும் சேர்ந்துவிடும் என்ற சூழலில் நேற்று தனி மனிதத் தாக்குதல் என் வட்டத்திற்குள்ளேயே வந்து இந்த முடிவை இப்போதே செயல்படுத்து என்று பிடித்துத் தள்ளிவிட்டது.

என் வலைப்பூக்களில் இருவகை இருக்கிறது. கூட்டு வலைப்பூக்கள், தனி வலைப்பூக்கள். தனி வலைப்பூக்கள் எல்லாவற்றிலும் தமிழ்மணப்பட்டையை எடுத்துவிட முடிவு செய்திருக்கிறேன். கூட்டு வலைப்பூக்களைப் பற்றி அந்த வலைப்பூ அன்பர்கள் எல்லோரிடமும் பேசி அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்ய முடிவு செய்திருக்கிறேன். அதனால் சில கூட்டு வலைப்பூக்கள் தமிழ்மணத்தில் இருக்கும். அதன் மூலம் எனது சில பதிவுகளும் தமிழ்மணத்தில் தெரியலாம்.

தமிழ்மணப்பட்டையை நீக்குவது மட்டும் போதாது. நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று சில நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். விரைவில் நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்துகிறேன். (இந்த நேரத்தில் ஒரு வேண்டுகோள் - எப்படி தமிழ்மணத்தில் இணைத்துக் கொள்வது என்ற வழிமுறைகள் சொல்லியிருப்பதைப் போன்று, எப்படி தமிழ்மணத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பதைப் பற்றியும் சொன்னால் இனி மேல் அதனைப் பயன்படுத்த நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த வேண்டுகோளை நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்துகிறேன்).

தமிழ்மணத்தைத் தவிர வேறு எந்த வலைத்திரட்டியிலும் என் பதிவுகளைச் சேர்த்ததில்லை. தேன்கூடு தொடங்கப்பட்ட போது என் வலைப்பூக்களில் சில அங்கே இருப்பதைப் பார்த்தேன். மேல் விவரங்கள் சில அப்போது கொடுத்தேன். ஆனால் அதன்பிறகு தொடங்கப்பட்ட எந்த வலைப்பூவும் தேன்கூட்டில் நான் இணைக்கவில்லை. தமிழ்மணத்தில் மட்டுமே இணைத்தேன். இனிமேலும் நானாக எந்த வலைத்திரட்டியிலும் என் வலைப்பூக்களை இணைக்கப்போவதில்லை. தானாக ஏதாவது வலைத்திரட்டி திரட்டிக் கொண்டால் திரட்டிக் கொள்ளட்டும்.

தமிழ்மணத்தால் பெற்ற நன்மைகள் பலவற்றில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது நண்பர்களும் அவர்களின் வலைப்பூக்களும். தமிழ்மணத்தில் இருந்து விலகும் போது, பெற்ற நன்மைகளை மிகவும் நன்றியோடு நினைத்துப் பார்த்து அன்புடனும் மகிழ்ச்சியுடனும் தமிழ்மணத்திற்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன்.

என் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் நண்பர்கள் அப்படியே தொடர்ந்து படித்து ஊக்குவிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

Saturday, December 02, 2006

திருமகளும் நம்மையுடையவள்!

நம் நண்பர் இரவிசங்கர் கண்ணபிரான் திருவேங்கடவன் திருப்பள்ளியெழுச்சிக்குப் பொருள் சொல்லிக் கொண்டு வருகிறார். அண்மையில் அவர் இட்ட பதிவில் அடியேன் சில பின்னூட்டங்களை இட்டேன். அப்போது தோன்றிய கருத்துகளை அப்படியே எழுத்தில் இட முயன்றதால் முற்றுப்புள்ளியே இல்லாமல் சில கருத்துகளைச் சொல்லியிருந்தேன். அவற்றை இன்னும் எளிமையாகச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நண்பர்கள் சிலர் அறிவுறுத்தியதால் அங்கே சொன்னதை இன்னும் எளிமையாகவும் விளக்கமாகவும் சொல்ல அடியேன் முயல்கிறேன்.

ஸ்ரீ ஸ்வாமினி - திருமகள் நம்மையுடையவள்!

இந்தப் பதிவு கொஞ்சம் வைணவ தத்துவங்களில் செல்லும். அதனால் கொஞ்சம் பொறுமையாகப் படிக்கும் படி நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். தத்துவங்கள் என்பதால் எல்லோருக்கும் புரியும் படி சொல்வது எளிதாக இருக்காது என்று எண்ணுகிறேன். முடிந்த வரை எளிதாகத் தர முயல்கிறேன். அடியேன் சிறிய ஞானத்தன்.

முதலாளியின் மனைவியும் முதலாளி என்று ஏற்றுக் கொள்வது சில நேரங்களில் ஏற்புடையது. பல நேரங்களில் ஏற்றுக் கொள்ள முடியாதது. நாம் ஒரு வீட்டில் வேலைக்காரராக இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் எல்லோருமே நமக்கு முதலாளிகளாக இருக்கலாம். ஆனால் அலுவலகத்தில் மேலாண்மையாளராக இருக்கும் ஒருவரது மனைவியும் நம்மிடம் மேலாண்மையாளரைப் போல் நடந்து கொண்டால் நாம் ஏற்றுக் கொள்வோமா? சில மேலாளர்களின் மனைவியர் அப்படித் தான் எண்ணிக் கொள்கின்றனர் என்பது வேறு. ஆனால் நம் கண்ணோட்டத்தில் அது அபத்தமாகத் தோன்றும் இல்லையா? அதைவிடக் கொடுமை சில நேரங்களில் சில மேலாளர்களின் மனைவியர் தங்கள் கணவர்களின் கீழ் வேலை செய்பவர்களின் மனைவியர் தங்களுக்கு அடிமைகள் என்பது போல் நடந்து கொள்வது தான். :-) பலருக்கும் அந்த அனுபவம் இருக்கும் என்று எண்ணுகிறேன். நான் மேலாளர் ஆவதற்கு முன்னாலேயே என் வீட்டம்மாவிடம் அப்படி நடந்து கொள்ளக் கூடாது என்று சொல்லிவிட்டேன். என் நல்வினைப்பயன் என் வீட்டம்மாவும் அந்த மாதிரி எண்ணிக் கொள்பவர் இல்லை. அதனால் என் குழுவில் வேலை செய்பவர்கள் எல்லாம் வீட்டிலும் அலுவலகத்திலும் நண்பர்களாகவும் இருக்கிறார்கள்.

சரி. இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா? இதோ சொல்லிவிட்டேன். வடமொழியில் ஸ்வம் என்றால் சொத்து. ஸ்வாமி என்றால் சொத்தை உடையவன். ஸ்வாமினி என்றால் சொத்தை உடையவள். உயிருள்ளது, உயிரற்றது என்று இந்த உலகிலும் பேரண்டங்களிலும் இருக்கும் எல்லாமே ஸ்வம் என்பதற்குள் அடக்கம். அந்த சொத்துக்களை உடையவன் ஸ்வாமி. அந்த ஸ்வாமி யார் என்ற கேள்விக்கு வடமொழி வேதங்களும் தமிழ் வேதங்களும் மிகத் தெளிவாகச் சொல்லிவிடுகின்றன. எளிமையாக கோதை நாச்சியார் 'நம்மையுடையவன் நாராயணன்' என்றும் 'நாராயணனே நமக்கே பறை தருவான்' என்றும் சொல்லிவிடுகிறார். அதனால் பெருமாள் தான் நம்மைப் பெறும் ஆள்; அவரே எல்லாரையும் விட பெரும் ஆள் என்று மிகத் தெளிவாகச் சொல்லிவிடுகிறார்கள். யார் நம் ஸ்வாமி; நம்மையுடையவர் என்பது ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகிவிடுகிறது.

சரி. இப்போது சொல்லுங்கள். நம்மையுடையவன் நாராயணன். சரி. அவனது துணைவி - என்றும் அவனை விட்டு நீங்க மாட்டேன் என்று அவனது மார்பில் நிலையாக அமர்ந்தவள் - அவள் நம்மையுடையவளா இல்லையா? மேலாளரின் மனைவியும் நமக்கு மேலாளரா இல்லையா?

அவனைச் சேர்ந்தவர் எல்லாருமே நம்மையுடையவர்கள். 'அவன் அடியார் அடியார் அடியார் அடியார் அடியார் தமக்கு அடியேன்' என்று ஆழ்வார்கள் சொல்லும் போது அவனின் துணைவி நம்மையுடையவளாய் இருப்பதில் என்ன தடை? அப்படித்தானே தோன்றுகிறது. உண்மை தான். ஸ்வாமியின் தர்மபத்னி நமக்கு ஸ்வாமினி.

திருமகள் திருமாலின் துணைவி என்ற முறையில் மட்டுமே நம்மையுடையவளா? எப்படி நாராயணன் அவனின் தனியுரிமையால் நம்மையுடையவனோ அப்படியே பெரிய பிராட்டியாரும் (திருமகளைப் பெரிய பிராட்டி என்பர்) தனது தனியுரிமையாலேயே நம்மையுடையவளா? இந்தக் கேள்விக்கு ஆசாரியர்கள் சொல்லும் பதில் 'ஆமாம்' என்பதே. இருவருமே நம்மையுடையவர்கள். இருவரும் இணைபிரியாதவர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் இணையானவர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் ஏற்றவர்கள் - திருமாலுக்கு ஏற்ற துணைவி திருமகள்; திருமகளுக்கு ஏற்ற துணைவன் திருமால். இருவரும் சேர்ந்தே நம்மையுடையவர்கள். திருமகளின்றித் திருமால் என்றுமே இல்லை. அதனால் அவனால் நம்மை அவனுக்கு மட்டுமே உரிமையானவராகக் கொள்ள முடியாது. இருவருக்கும் சொத்து நாம். இப்படி தன் தனியுரிமையாலும் நம்மை உடையவளாக இருப்பவள் மகாலக்ஷ்மி என்பதைச் சொல்லவே தனியாக ஸ்ரீ ஸ்வாமினி என்று சொல்லியிருக்கிறார்கள்.

அப்படி இருவருமே பரம்பொருள்; இருவருமே நம்மையுடையவர்கள் என்றால் இன்னொரு கேள்வி எழுகிறது. பரம்பொருள் ஒன்றே என்பது தான் வேதங்கள் சொல்வது. அதுவே அறிவிற்கும் ஏற்றது. பரம்பொருள் இருவராக இருப்பது சாத்தியமில்லை. 'ஏகம் சத். விப்ரா பஹுதா வதந்தி - உண்மை ஒன்றே. அறிஞர்கள் அதனைப் பலவாறாகப் (புகழ்ந்து) பேசுகிறார்கள்' என்றும் 'ஏகம் அத்விதீயம் - ஒன்று;(தனக்கு இணையாக) இரண்டாவது இல்லாதது' என்றும் வடமொழி வேதங்களும் 'தானோர் தனிவித்து' என்றும் 'ஒருவனே தேவன்' என்று தமிழ்மறைகளும் பேசுவதற்கு ஏற்ப இல்லையே இருவரும் பரம்பொருள் என்பது? இந்தக் கேள்விக்கு ஆசாரியர்கள் சொல்லும் பதில்: எப்படி மலரும் மணமும், சுடரும் ஒளியும் இணைபிரியாமல் இருக்கிறதோ அது போலவே இறைவனும் இறைவியும் இணைபிரியாமல் இருப்பதால் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் இருப்பு என்பதே இல்லை; அதனால் இருவரும் ஒரே தத்துவமே. அதனால் ஒன்றே தேவன் என்பதற்கு இருவரும் பரம்பொருள் என்பது ஏற்புடையதே.

பிரணவம், திருமந்திரம், துவயமந்திரம் இவையும் இந்தப் பொருளையே சொல்கின்றன என்று இரவிசங்கரின் பதிவில் பின்னூட்டமாகச் சொல்லியிருந்தேன். அவற்றையும் விரித்தால் மிக விரிவாக இந்தப் பதிவு அமைந்துவிடும். அவற்றைப் பற்றி வேறோரிடத்தில் பேசலாம்.