Monday, January 30, 2006

139: வாழ்க நீ எம்மான்!

நம் தேசப்பிதா மகாத்மாவை மகாகவி போற்றி பாடிய பாடல் காந்திஜியின் நினைவு நாளுக்காக....

வாழ்க நீ எம்மான்! இந்த
வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டு
பாழ்பட்டு நின்ற தாமோர்
பாரத தேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
மகாத்ம! நீ வாழ்க! வாழ்க!

வாழ்க நீ எம்மான் - எங்கள் தலைவனே ! நீ வாழ்க
இந்த வையத்து நாட்டில் எல்லாம் - இந்த உலகத்தில் உள்ள நாடுகளில் எல்லாம்
தாழ்வுற்று - கீழான நிலைமை அடைந்து
வறுமை மிஞ்சி - வறுமை மிகுந்து
விடுதலை தவறி - விடுதலை இழந்து அடிமையுற்று
கெட்டு பாழ்பட்டு
நின்ற தாம் ஒர்
பாரத தேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகாத்ம!
நீ வாழ்க! வாழ்க!

Sunday, January 29, 2006

138: *நட்சத்திரம்* - முன்னாள் விண்மீன் ஆகிறேன்

ரொம்ப சந்தோசமா இருக்குங்க. விண்மீன் வாரம் ரொம்ப நல்லா இருந்தது. என் எல்லா வலைப்பூக்களிலும் இந்த வாரம் இட்டப் பதிவுகள் இந்தப் பதிவோடு சேர்த்து 18 பதிவுகள். ஏற்கனவே மற்றப் பதிவுகளை எழுதி வைத்திருந்ததால் அவற்றை இந்த வாரம் வரிசையாக இடுவது கடினமாக இல்லை. இந்தப் பதிவை இப்போது தான் எழுதுகிறேன். என்ன எழுதுறதுன்னு தெரியலை. அதனால் முன்னாள் நட்சத்திரங்களோட நட்சத்திர வாரக் கடைசிப் பதிவுகளைப் பார்த்து இந்தப் பதிவை எழுதுறேன். :-)

'ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரத்தின் சிறப்பையும் அடையாளங் காண்பதற்காக தமிழ்மண வானில் ஒவ்வொரு வாரத்தையும் நட்சத்திர வாரமாக ஆக்கி, ஒரு நட்சத்திரத்தைப் பிடித்திழுத்து துருவ நட்சத்திரமாகவும் ஆக்கி, 'அட பளிச்சுன்னு தனியா தெரியுதே என்னன்னு பாப்போம்' என்று பார்ப்போர் கவனத்தைக் கவர வைத்து, அந்நட்சத்திரத்தின் எழுத்துத் திறனை அனைவரும் பார்க்கும்படியாக வைக்க மேடை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் காசி, மதி மற்றும் குழு நண்பர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். இது மிக நல்ல முயற்சி என்று வாயால் சொல்லுவதைவிட அனுபவித்தே பார்த்துவிட்டேன். ' (நன்றி சுந்தர்).

இந்த வாரம் பின்னூட்டங்களுக்கும் குறைவில்லாமல் இருந்தது. முதல் பதிவுக்கு வந்த பின்னூட்ட எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருந்தாலும் மற்றப் பதிவுகளுக்கு எதிர்பார்த்த அளவு பின்னூட்டங்கள் இருந்தன. நன்றி மறக்காதவர்கள் தமிழ்மண அன்பர்கள் என்று உறுதி செய்து விட்டார்கள் :-) மிக்க நன்றி.

1. வாழ்வினிலே ஓர் நாள் திருநாள் - 181 பின்னூட்டங்கள்.
2. என் வலைப்பூக்கள் ஓர் அறிமுகம் - 32 பின்னூட்டங்கள்
3. முருகன் அருள் முன்னிற்கும் - 47 பின்னூட்டங்கள்
4. எனக்குப் பிடித்தப் பாடல்கள் - 50 பின்னூட்டங்கள்
5. பொருநைத் துறைவன் - 25 பின்னூட்டங்கள் 6. ஜன கன மன - 36 பின்னூட்டங்கள்
7. இயற்கை குணம்? - 27 பின்னூட்டங்கள்
8. தமிழ் இறைவனுக்கும் முன்னால் - 29 பின்னூட்டங்கள்
9. தமிழா ஆரியமா? - 21 பின்னூட்டங்கள்
10: வெண்மதியே வெண்மதியே நில்லு... - 10 பின்னூட்டங்கள்

இங்கு நட்சத்திரப் பதிவு பக்கத்தில் தெரிந்த பதிவுகளுக்கு மட்டுமே பின்னூட்ட எண்ணிக்கையைக் கொடுத்திருக்கிறேன். மற்ற வலைப்பூக்களில் வந்த பதிவுகளுக்கு என்றும் கிடைக்கும் அளவுக்கு பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன.

வாரத்தின் பின்பாதியில் இட்டப் பதிவுகளுக்கு இன்னும் பின்னூட்டங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த எண்ணிக்கைகள் இந்தப் பதிவை எழுதும் போது இருக்கும் நிலவரம். :-)

(பின்னூட்ட எண்ணிக்கையைத் தரும் ஐடியா உதவி: ஜோசஃப் சார். அவருக்கு நன்றி)

உலகம் சுற்றும் வாலிபன் ஜோ அவர்கள் தன் விண்மீன் வார இறுதியில் பின்னூட்டம் கொடுத்த எல்லோரையும் அடைமொழியுடன் தனித்தனியே 'அவர்களே' என்று விளித்து நன்றி சொல்லியிருந்தார். அப்படியே நானும் செய்யலாம் என்று எழுதத் தொடங்கினேன். பட்டியல் நீண்டு கொண்டே போவதால், போன வார நட்சத்திரம் முத்துக்குமரன் அவர்கள் செய்த மாதிரி பின்னூட்டம் இட்ட எல்லோருடைய பெயரையும் சொல்லி மொத்தமாக நன்றி சொல்லிவிடுகிறேன். அதான் ஏற்கனவே ஒவ்வொரு பதிவிலும் தனித்தனியாய் அவர்களுக்கு நன்றி சொல்லியாச்சே. :-)

நடராஜன், செல்வன், இராகவன், ஜோ, முத்துக்குமரன், ஞானவெட்டியான் ஐயா, சிவா, பொன்னம்பலம், தருமி ஐயா, ஆனந்த், நாமக்கல் சிபி, பரஞ்சோதி, துளசி அக்கா, இளவஞ்சி, சதீஷ், தேசிகன், ராமசந்திரன் உஷா, இலவசக் கொத்தனார், சதயம், ஜோசஃப் சார், மூர்த்தி, மணியன், இராமநாதன், தாணு அக்கா, என்னார் ஐயா, சிங். செயகுமார், தேன் துளி, கயல்விழி, நடேசன் சார், அப்டிபோடு அக்கா, சோம்பேறிப் பையன், தி.ரா.ச. சார், முகமூடி, கீதா, முத்து (தமிழினி), குமரேஷ், ஜாபர் அலி, கிறுக்கன், chameleon - பச்சோந்தி, மோகன் தாஸ், நிலா, நாதோபாஸனா, பதி ஐயா, கார்த்திக் (கே.எஸ்), ஜோகன் - பாரிஸ், சந்தோஷ், சாம், சிறில் அலெக்ஸ், கார்த்திக் ஜெயந்த், சமுத்ரா, சுந்தர், கைப்புள்ள, டோண்டு சார், கொழுவி, APJK எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னும் வருங்காலத்தில் இந்தப் பதிவுகளையும் என் எதிர்காலப் பதிவுகளையும் படித்துப் பின்னூட்டம் இடப் போகும் எல்லாருக்கும் மிக்க நன்றி. பின்னூட்டம் இடாமல் ஆனால் படித்து ரசித்த அன்பர்களுக்கும் மிக்க நன்றி.

சரி அடுத்து என்ன? முத்துக்குமரன் தன் பதிவுக்கு வந்து போனவர்கள் எண்ணிக்கையை counter மூலம் பார்த்துச் சொல்லியிருந்தார். நானும் சொல்கிறேன்.

Counter ஏறக்குறைய 2200 தடவை இந்த வாரத்தில் 'கூடல்' வலைப்பூ பார்க்கப் பட்டிருக்கிறது என்று சொல்கிறது. ஆனால் அந்த எண்ணிக்கையில் நானே பார்த்தது எத்தனை தடவை என்றும், பின்னூட்டம் இட்டவர்கள் என் மறுமொழியைப் பார்ப்பதற்கும் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்பதற்கும் வந்து பார்த்தது எத்தனை தடவை என்றும் சொல்ல முடியாது ஆகையால் இந்த எண்ணிக்கையை ஐந்தால் வகுத்து அதனையே சரியான எண்ணிக்கையாய் எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். அப்படிப் பார்த்தால் அந்த எண்ணிக்கை 440. இதுவும் அதிகமாகத் தான் தோன்றுகிறது.

'நட்சத்திரப் பதிவு' பக்கத்துக்காக நான் எழுதிய என் அறிமுகக் கவிதைக்கு அழகாக பொருள் சொன்ன இராகவனுக்கும் மயிலாருக்கும் என் சிறப்பு நன்றிகள். அதனை கிண்டல் செய்து ஒரு பதிவு போட்ட சின்னவருக்கும் இளவஞ்சிக்கும் நன்றிகள். இந்த மாதிரிக் கிண்டல் பதிவுகள் தான் இந்த வாரம் வந்தது. சங்கடப்படுத்தும் பின்னூட்டங்களோ பரபரப்பூட்டும் விமர்சனங்களோ வரவில்லை. அதற்கும் மிக்க நன்றி. இந்த வாரத்தில் படித்துப் பின்னூட்டம் இட வேறு சூடான தலைப்புகள் கிடைத்தும் என் பதிவுக்கு வந்து படித்தும் பின்னூட்டம் இட்டும் ஊக்கமளித்த எல்லா அன்பு நெஞ்சங்களுக்கு சிறப்பு நன்றிகள். :-)

நிலாவும் ராமச்சந்திரன் உஷாவும் நான் ஆன்மிகத்தைப் பற்றித் தான் அதிகம் எழுதுகிறேன் என்பதால் எனது ஆன்மிகம் அல்லாதப் பதிவுகளையும் அப்படியே நினைத்துக் கடைசி நிமிடத்தில் கண்டுகொண்டு படித்தோம் என்று சொல்லிப் பின்னூட்டம் இட்டிருக்காங்க. அப்படி நிறைய பேர் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். 'கூடல்', 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' & 'இந்தியக் கனவு 2020' இந்த வலைப்பூக்களில் ஆன்மிகம் அவ்வளவாய் வராது. அதனால் தைரியமாக இந்த வலைப்பூக்களை நீங்கள் படிக்கலாம். ஆன்மிகக் கடலில் கண்டெடுக்கும் முத்துக்கள் மற்ற வலைப்பூக்களில் இருக்கும். இந்த வலைப்பூக்களில் வேறு கடல்களில் கண்டெடுக்கும் முத்துக்களும் இயற்கைச் செல்வங்களும் இருக்கும் என்று சொல்லிக் கொள்கிறேன். :-)

இந்த வாய்ப்பினைக் கொடுத்து புதிய நண்பர்கள் இணைய உலகில் எனக்கு அறிமுகமாக உதவிய மதி அவர்களுக்கும் காசி அவர்களுக்கும் மற்றும் தமிழ்மண நிர்வாகக் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இது வரை என் வண்டி அதிவேகவமாய் ஓடி இதோ நாலு மாதங்கள் முடியும் முன்னரே 138 பதிவுகள் இட்டாயிற்று. நண்பர்கள் பலரின் கருத்துக்கு இணங்க இனிமேல் வண்டியின் வேகத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். தமிழ்மணம் ஒரு அடிக்சன் ஆகிவிட்டதால் எத்தனை தூரம் வேகத்தைக் குறைத்துக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

அடடா. ஏறக்குறைய மறந்தே போய்விட்டேன். நான் முதல் பதிவில் சொன்னது போல தமிழ்மணத்தில் இருக்கும் எல்லாப் பதிவாளர்களுக்கும் இந்த நட்சத்திர வாரம் என்னும் வாய்ப்பு நிச்சயமாகக் கிடைக்கும். உங்களுக்கு அது விரைவில் கிடைக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன். வரும் வாரங்களுக்காக விண்மீன்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பார்கள். அப்படிப் பட்டவர்களுக்கு என் சிறப்பான வாழ்த்துகள். வாங்க. வந்து கலக்குங்க.

இந்த வாரம் எப்படி இருந்தது? நிறைகள் எவை? குறைகள் எவை? எது பிடித்தது? எது பிடிக்கவில்லை? இந்த வாரத்தை நான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேனா? போன்றவைகளுக்கு உங்கள் கருத்துக்களை மறக்காமல் எனக்குத் தெரியப் படுத்துங்கள். அது எனக்கு மட்டும் இல்லாமல் இனிவரும் எல்லா விண்மீன்களுக்கும் உதவியாக இருக்கும்.

அப்புறம்... இந்த வாரம் முழுவதும் '*நட்சத்திரம்*' என்று பதிவுகளின் தலைப்பில் இட்டேன். இனி வரும் பதிவுகளில் '*முன்னாள் நட்சத்திரம்*' என்று போட்டு பதிவுகள் போடலாமா என்று கொஞ்சம் சொல்லுங்களேன்?! :-)

Saturday, January 28, 2006

137: *நட்சத்திரம்* - வெண்மதி வெண்மதியே நில்லு...

'மாம்ஸ். இந்தப் பாட்டைக் கேட்டியா?'

'எந்தப் பாட்டு ராம்ஸ்?'

'அதான். வெண்மதி வெண்மதியே நில்லு. நீ வானமா மேகத்துக்கா சொல்லு. வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்'

'அருமையாப் பாடறே. நானும் இந்தப் பாட்டு கேட்டுருக்கேன். நல்ல பாட்டு தான்'.

'என்ன நல்ல பாட்டுன்னு சொல்லி நிறுத்திக்கிட்டே. அருமையான பாட்டு இது'

'சரி. அருமையான பாட்டு தான். ஒத்துக்கறேன். ஏன் அருமையான பாட்டுன்னு சொல்றியா?'

'பாட்டோட அர்த்தத்தைப் பாரு. அந்த வரிகளோட அர்த்தம் தெரிஞ்சா இது எவ்வளவு அருமையான பாட்டுன்னு ஒத்துக்குவே'

'அப்டியா. சரி. வரிகளோட பொருளைச் சொல்லு. கேட்டுக்கறேன்'.

'ஒரு காதலன் காதலிக்கிட்ட சொல்ற மாதிரி இந்தப் பாட்டு வருது மாம்ஸ். அந்தப் பொண்ணை ரெண்டு பேரு காதலிக்கிறாங்க. இவனுக்கு அவ யாரைக் காதலிக்கிறான்னு தெரியல. அதான் அந்தப் பொண்ணை வெண்மதின்னு சொல்லி நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லுன்னு கேக்கறான். தன்னை மேகம்ன்னும் அடுத்தவனை வானம்ன்னும் சொல்றான்'.

'சரி. அப்புறம்'.

'நீ அவனைத் தான் காதலிக்கப் போற; என்னை இல்லைன்னா பரவாயில்லை. அத நான் பொறுத்துக்குவேன் அப்படின்னு சொல்றான்'.

'அப்படியா சொல்றான். எனக்கு அப்படி தோணலையே.'

'பின்ன வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம் அப்படின்னா என்ன அர்த்தம்?'

'எனக்குத் தெரிஞ்ச மாதிரி பொருள் சொல்றேன் ராம்ஸ். கோவிச்சுக்கக் கூடாது'.

'கோவிச்சுக்க மாட்டேன். சொல்லு மாம்ஸ்.'

'தன்னை மேகம்ன்னும் அடுத்தவனை வானம்ன்னும் பொண்ணை நிலவுன்னும் சொல்றது தான். இந்தப் பாட்டை எழுதுன கவிஞர் ஒரு உட்பொருள் வச்சிருக்கார். நாம இங்க இருந்து பார்த்தா வானத்துல இருக்கிற வெண்மதியை மேகம் மூடுற மாதிரி தெரியுது இல்லையா?'

'ஆமாம்.'

'ஆனா உண்மையிலேயே மேகம் நம்ம பூமிக்கு மேல இருக்கிற காற்று மண்டலத்துல இருக்கு. மதி ரொம்ப தூரத்துல இருக்கு. வானம் என்கிறதோ இல்லவே இல்லை. அது அகண்ட வெட்ட வெளி. அதனால நிலா வானத்தைத் தான் பிடிக்கும்ன்னு சொன்னாலும் மேகத்துக்கு ஒரு நஷ்டமும் இல்லை. ஏன்னா வானம் தான் உண்மையிலேயே இல்லையே. இல்லாத ஒரு பொருளை பிடிச்சாலும் அதை அடைய முடியாது இல்லியா. அது போல நீ அவனை விரும்பினாலும் எனக்குத் தான் சொந்தம்ன்னு சொல்றான்.'

'பரவாயில்லையே. இந்த அர்த்தம் நல்லாத் தான் இருக்கு'.

'அப்டியா. இதுக்கும் மேல ஒரு பொருளும் கவிஞர் வச்சிருக்கார்'

'என்ன பொருள் அது?'

'அந்தக் காதலனுக்கும் தெரியாத ஒரு பொருளை மறைமுகமா கவிஞர் இந்தப் பாட்டுல வச்சிருக்கார். வானம் உண்மையில் வெட்டவெளிதான். அதனால் வானத்துக்கு வெண்மதி சொந்தமாக முடியாது. ஆனால் மேகமும் பூமியைச் சுற்றியுருக்கும் காற்று மண்டலத்தை விட்டு வெளியே இருக்க முடியாது. அதனாலும் நிலவை அடைய முடியாது. அதனால் அந்தப் பெண் இந்தக் காதலனுக்கும் கிடைக்க மாட்டாள் என்பதைத் தான் உட்பொருளா வச்சிருக்கார் கவிஞர்.'

'ஐயோ. மாம்ஸ். ஓவரா அர்த்தம் சொல்றியே. ரொம்ப எளிமையா இருக்கிற இந்தப் பாட்டுக்கு அர்த்தம் சொல்ல ஒன்கிட்ட வந்தேனே. என்னைச் சொல்லணும்'.

'ஏன் ராம்ஸ்? இந்தப் பொருளுக்கு என்ன குறை?'

'என்ன குறை? ஒரு குறையும் இல்லை. அந்தப் பாட்டைப் பாடுன கவிஞரே இந்த அர்த்தத்தை யோசிச்சிருப்பாரோ இல்லையோ. நீ என்னடான்னா வெளிப்படையாத் தெரியுற அர்த்தத்தை விட்டுட்டு ஏதேதோ சொல்லிக்கிட்டுப் போற?'

'ராம்ஸ். நீ தமிழ்மணம் பாக்குறதில்லைன்னு நெனைக்கிறேன். அதுல குமரன்னு ஒருத்தர் பாட்டுக்கெல்லாம் பொருள் சொல்லிக்கிட்டு இருக்கார். அவர் எழுதுறதைப் படிச்சு படிச்சுத்தான் இந்த மாதிரி எல்லாம் தோண ஆரம்பிச்சிருச்சு.'

'ஐயோ. நல்லவேளை சொன்ன. நான் ஜன்மத்துக்கும் அவர் எழுதுறதப் படிக்க மாட்டேனே. பைத்தியம் புடிச்சிரும்'

136: *நட்சத்திரம்* - தமிழா? ஆரியமா?

இந்தக் கேள்வி என் முன் அடிக்கடி வைக்கப்படுகிறது. தமிழார்வம் கொண்டவர்கள் எல்லாருக்கும் வடமொழி பிடிக்காது; பிடிக்கக்கூடாது என்ற ஒரு எண்ணம் தமிழக மக்களிடம் இருக்கிறது. அது ஓரளவுக்கு உண்மையும் கூட. தனித்தமிழ் இயக்கத்தின் பின், வடமொழியின் மேல் ஒரு இனம் தெரியாத வெறுப்பு தமிழர்களிடம் இருப்பதாய் தோன்றுகிறது. வடமொழியை வெறுக்காத தமிழார்வலர்களும் வடமொழியைக் கற்கவோ அதில் சொல்லப்பட்டிருப்பதை மொழிபெயர்ப்பின் மூலம் படிக்கவோ அவ்வளவாய் விருப்பம் இல்லாதவர்களாகத் தான் இருக்கிறார்கள். அதனால் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்பவர்கள் ஒரு அர்த்தத்துடன் தான் கேட்கிறார்கள்.

இந்தக் கேள்விக்குப் பதில் கூறும் போது என் பின்புலத்தைக் கூறுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. தமிழ்மணத்திலும் சில நண்பர்கள் இந்தக் கேள்வியை நேரடியாகவும் மறைமுகமாகவும் கேட்டிருக்கிறார்கள். அதனால் என் பதிலை இங்கும் பதிவாய் இடுகிறேன்.

மதுரைவாழ் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் சௌராஷ்ட்ரர் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் தமிழல்லாத ஒரு மொழியைத் தாய்மொழியாய்க் கொண்டுள்ள ஒரு குழுவினர். இவர்கள் தமிழ்நாடு முழுவதிலும் இருந்தாலும், மதுரையில் தான் பெரும்பான்மையினராய் வசிக்கின்றனர். வீட்டில் சௌராஷ்ட்ரத்தில் பேசினாலும், வெளியே தமிழில் பேசி நிறைய பேர் மிக்கத் தமிழார்வத்துடன் நிறையத் தமிழ் தொண்டு ஆற்றிக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்குத் தமிழ் இரண்டாம் தாய்மொழி. தமிழனாய்ப் பிறந்து தமிழனாய் வாழும் ஒரு தமிழனுக்கு இணையான தமிழ்ப்பற்று இந்த மக்களிடம் காணலாம்.

நான் பிறந்தது ஒரு சௌராஷ்ட்ர குடும்பத்தில் தான். வீட்டில் இப்போதும் சௌராஷ்ட்ரத்தில் தான் பேசிக்கொண்டிருக்கிறேன். தமிழில் உள்ள ஆர்வம் போல் சௌராஷ்ட்ரர்களுக்கு ஆன்மிகத்தில் பெரும் ஆர்வம். நான் பள்ளியில் படிக்கும் போதும் கல்லூரியில் படிக்கும் போதும் என் நண்பர்களுடன் பொழுது போகவில்லையென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்குத் தான் போவோம். வாரத்தில் குறைந்தது மூன்று முறையாவது சென்று விடுவோம். அந்த ஆன்மிக ஈடுபாடும் தமிழார்வமும் தான் சிறுவயதில் இருந்தே தமிழ் இலக்கியங்களைப் படிப்பதில் என் கவனத்தைச் செலுத்தியது. நான் நான்கு வயதாக இருக்கும் போதே கந்தர் சஷ்டி கவசத்தை மனப்பாடமாகச் சொல்வேன் என்று என் பெற்றோர்களும் மற்றவர்களும் சொல்லியிருக்கிறார்கள். உறவினர்கள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லச் சொல்லிக் கேட்டது எனக்கும் சற்று நினைவிருக்கிறது. அப்படி தமிழில் ஏற்பட்ட ஈடுபாடு எனக்குத் தமிழ் சொல்லித்தந்த ஆசிரியர்களாலும் வளர்ந்தது.

ஏழாம் வகுப்பில் எனக்குத் தமிழ் சொல்லித்தந்தவர் சுரேந்திரன் ஐயா அவர்கள். தமிழை எவ்வளவு அழகாகச் சொல்லிக்கொடுக்க முடியும் என்பதை அவரைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அவர் ஒரு சௌராஷ்ட்ரர். நிறைய பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு 'பட்டிமன்றத் தென்றல்' என்றப் பட்டம் பெற்றவர்.

பின்னர் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை எனக்குத் தமிழாசிரியராய் வந்தவர் சக்திவேல் ஐயா. தமிழர். தமிழின் அழகை, தமிழின் இனிமையை சுரேந்திரன் ஐயா சொல்லிக் கொடுத்தார் என்றால், தமிழின் நுண்மையை தமிழின் பழமையை மற்றவர் தமிழில் செய்யும் தவறுகளை மிக நன்றாய்ச் சொல்லித்தந்தவர் சக்திவேல் ஐயா. இவர்கள் இருவருமே என் மேல் தனிப்பாசம் கொண்டு என் சந்தேகங்களுக்கு எல்லாம் மிகத் தெளிவாய் விளக்கம் கூறி என் தமிழறிவை நன்கு வளர்த்தார்கள்.

ஆன்மிகத்தில் எனக்கு இருந்த ஈடுபாடு சமஸ்கிருதத்தில் உள்ள புத்தகங்களைப் படிப்பதில் எனக்கு ஆர்வத்தை ஊட்டியது. சிறிது சிறிதாக சமஸ்கிருதத்தின் அழகையும் அனுபவிக்க ஆரம்பித்தேன். தமிழை முறையாகப் பள்ளியில் கற்றது போல் வடமொழியைக் கற்கவில்லை. தமிழிலோ ஆங்கிலத்திலோ மொழிபெயர்ப்புடன் கூடிய வடமொழி புத்தகங்களையே படித்தேன். அப்படிப் படித்ததில் வடமொழியில் சிறிது புலமை ஏற்பட்டது. வடமொழி ஆர்வம் சில புதிய நண்பர்களைக் கொண்டுவந்து சேர்த்தது. இப்படி நம் நாட்டின் செம்மொழி இரண்டின் மேலும் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது.

இந்தப் பின்புலத்தின் என்னிடம் கேட்கப்படும் 'உனக்கு தமிழ் அதிகமாய்ப் பிடிக்குமா? சமஸ்கிருதம் பிடிக்குமா?' என்ற கேள்விக்கு நான் கூறும் பதில், 'எனக்கு இரண்டு மொழிகளும் இரண்டு கண்களைப் போன்றவை. கண்களில் எதை அதிகமாய்ப் பிடிக்கும் என்று சொல்வது. இரண்டும் பிடிக்கும்' என்பதே.

சில நண்பர்களால் இந்தப் பதிலை ஏற்றுக்கொள்ள முடிகிறது. சில நண்பர்களால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையும் பார்த்திருக்கிறேன். வடமொழியே மூத்த மொழி; முதன்மையான மொழி; உயர்ந்த மொழி என்ற எண்ணம் கொண்ட நண்பர்களுக்கு தமிழை வடமொழிக்கு இணையாக நான் கூறுவது பிடிப்பதில்லை. தமிழில் ஈடுபாடு கொண்டு வடமொழியை வெறுக்கக் கற்றுக்கொண்ட நண்பர்களுக்கு வடமொழியை தமிழுக்கு இணையாக நான் சொல்வது பிடிப்பதில்லை. ஆனால் அதற்கு நான் என்ன செய்வது? எனக்கு இரண்டும் பிடித்திருக்கிறது. மதுரையில் பிறந்தததால் தமிழார்வம் வந்தது. சௌராஷ்ட்ரனாய்ப் பிறந்ததால் வடமொழியின் மேல் வெறுப்பு வரவில்லை. ஆன்மிகம் வடமொழியையும் கற்றுக்கொள்ள வைத்தது.

தமிழை விரும்பி வடமொழியை வெறுக்கும் ஒரு நண்பர், என்னிடம் ஒரு முறை இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு நான் சொன்ன 'இரண்டும் இரு கண்கள்' என்ற பதிலுக்குப் பின், 'சரி. அதில் வலக்கண் எது? இடக்கண் எது?' என்று கேட்டார். நான் அந்தக் கேள்வியில் உள்ள விவகாரத்தை அறியாமல் 'தமிழ் வலக்கண். ஆரியம் இடக்கண்' என்றேன். 'அப்படியென்றால் நீ வடமொழியை விட தமிழைத் தான் அதிகம் நேசிக்கிறாய்' என்று சொல்லிவிட்டார். நான் வாயடைத்து நின்றேன்.

Friday, January 27, 2006

134: *நட்சத்திரம்* - தமிழ் இறைவனுக்கும் முன்னால்...

'ஏன்டா. சீக்கிரம் வெளிய வா. பெருமாள் ஏளறார்'.

'ஏளரார்ன்னா என்னடா?'

'அதுவா. பெருமாள் வீதி உலா வர்றதைத் தான் அப்படிச் சொல்வோம்'

'அப்படியா. நாங்க எல்லாம் சாமி வருதுன்னு சொல்லுவோம்'.

'சரி. சரி. வெளிய வா. நாம் பெருமாளைச் சேவிக்கலாம்'

'சேவிக்கலாமா? அப்படின்னா?'

'தப்பாச் சொல்லிட்டேன். பெருமாளைக் கும்புடலாம் வாடா'

'சரி. என்னடா இது. இவ்வளவு பெரிய கூட்டம் சாமி முன்னாடி போகுது'

'அதுவா. அது பிரபந்த கோஷ்டிடா. சரி. சரி. பெருமாளை நல்லா சேவிச்சுக்கோ...இல்லை...இல்லை...கும்புட்டுக்கோ'.

'சாமிக்கு நல்லா அலங்காரம் பண்ணியிருக்காங்கடா. பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு. ஏன்டா சாமி இவ்வளவு வேகமா போகுது?'

'அதுவா பிரபந்த கோஷ்டி வேகமா போகுதுல்ல அதான்'

'ஏன்டா. முன்னாடி ஒரு கூட்டம் போச்சு. பின்னாடியும் ஒரு கூட்டம் போகுது. முன்னாடி போன கூட்டமாவது என்னமோ தமிழ்ல பாடிகிட்டுப் போனாங்க. பின்னாடி போறவங்க என்னமோ கத்திக்கிட்டுப் போறாங்களே. யாருடா இவங்க?'

'முன்னாடி போறவங்க பிரபந்த கோஷ்டிடா. ஆழ்வார்கள் பாடின நாலாயிர திவ்யப் பிரபந்தங்களைப் சேவிச்சுக்கிட்டுப் (பாடிக்கிட்டுப்) போறாங்க. பின்னாடி போறவங்க வேத பாராயண கோஷ்டி. வேதங்களை ஓதிக்கிட்டுப் போறாங்க'.

'வேதங்களை ஓதுறாங்களா. அது வடமொழியில இருக்கிறதால எனக்குப் புரியலைன்னு நெனைக்கிறேன். அதான் கத்துற மாதிரி தோணிச்சு. ஆமா. முன்னாடி போறவங்க பிரபந்தம்ன்னு என்னமோ சொன்னியே. அவங்க தமிழ்ல பாடுற மாதிரில்ல இருந்துச்சு?'

'அது தமிழ் தான்டா. ஆழ்வார்கள் பாடுன தமிழ் பாட்டுகளை எல்லாம் நாலாயிர திவ்யப் பிரபந்தம்ன்னு சொல்லுவாங்க'.
'அப்டியா. ஹேய். இவங்களும் ஏன்டா சாமி பின்னாடி ஓடுறாங்க?'

'பெருமாள் பிரபந்த கோஷ்டி பின்னாடி ஓடுறார். வேத பாராயண கோஷ்டி பெருமாள் பின்னாடி ஓடுறாங்க'.

'ஏன் எல்லாரும் ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் ஓடுறாங்க? வேடிக்கையா இருக்கே?'

'அதுவா. எங்க தாத்தாகிட்ட இதைப் பத்திக் கேட்டேன். அவரோட ஆசாரியர் சொன்னதை அவர் எனக்குச் சொன்னார்.

வடமொழி வேதங்கள் தன்னோட சொந்த முயற்சியால பெருமாளைத் தெரிஞ்சுக்க முயற்சி செஞ்ச மகரிஷிகளால் பாடப்பட்டது. அதனால பெருமாளோட முழுப் பெருமையும் பாட முடியாம வேதங்கள் பின்வாங்கிடுச்சாம். ஆழ்வார்கள் பெருமாளாலேயே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள். அதனால பெருமாளை உள்ளது உள்ளபடி உணர்ந்து பாடல்கள் பாடியிருக்காங்க. அவங்களோட இனிமையான தமிழ்ப் பாடல்களை கேக்கிறதுக்குத் தான் பெருமாள் பிரபந்தம் பாடுறவங்களைத் தொரத்திக்கிட்டுப் போறார். அவரை இன்னும் முழுசாத் தெருஞ்சுக்காத வேதங்களை ஓதுறவங்க அவரைத் தொரத்திக்கிட்டுப் போறாங்க'.

'நல்லா இருக்கே இந்த விளக்கம். எப்படியோ தமிழுக்கு முதலிடம் கெடைச்சா சரிதான்'.

'எங்க வீட்டுல எப்பவுமே தமிழுக்குத் தான்டா முதலிடம். ஏன் அப்படிச் சொல்ற'.

'அத விடு. ஆமா. இந்த போர்டுல உங்க தாத்தா பேருக்கு முன்னாடி என்னமோ உ.வே.ன்னு போட்டிருக்கே? அப்டின்னா என்னடா? திரு.ன்னு போட்டுப் பாத்துருக்கேன். ஆனா இது புதுசா இருக்கே'.

'அதுவா. அது உபய வேதாந்தி அப்படிங்கறதோட சுருக்கம்'.

'அப்டின்னா என்னடா?'

'எங்க ஆளுங்க சமஸ்கிருதத்துல இருக்கிற வேதங்களோட ஆழ்வார்கள் பாடுன திவ்யப் பிரபந்தங்களையும் தமிழ் வேதங்கள்ன்னு சொல்லுவாங்க. உபய வேதாந்தின்னா ரெண்டு வேதங்கள் உடையவர்ன்னு அர்த்தம். வடமொழி வேதங்களை விட தமிழ் வேதங்களுக்கு மதிப்பு கூட. ஆழ்வார் அருளிச்செயல்ன்னு எங்க தாத்தா எப்பவுமே ஆழ்வார் பாட்டுகள் பாடிக்கிட்டே இருப்பார்'

'ஆமான்டா. நானும் கேட்டுக்கேன். அப்ப எல்லாம் ஏதோ பழைய பாட்டாப் பாடுறார்ன்னு நெனைச்சுக்குவேன்.'

'சரி வா. பெருமாள் அடுத்தத் தெருவுக்குப் போயிட்டார். நாம உள்ள போகலாம். படிக்கிறதுக்கு நிறைய இருக்கு'.

Thursday, January 26, 2006

133: *நட்சத்திரம்* - இயற்கைக் குணம்?

இந்தக் கட்டுரை சுனாமிக்குப் பின் நான் ஆங்கிலத்தில் எழுதி இந்தியக்கனவு 2020 வலைப்பக்கத்திலும் என் ஆங்கிலப் வலைப்பூவிலும் பதிக்கப்பட்டது. அதில் உள்ள கருத்து இப்போதும் பொருத்தமாக இருக்கிறது (என்றும் பொருத்தமாக இருக்கும் போலும்) என்பதால் தமிழில் மொழிபெயர்த்து இங்கே பதிக்கிறேன்.

***

இந்தியப் பெருங்கடல் சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நாம் ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற அளவுக்கு உதவி செய்துவிட்டோம். இந்த மாதிரி இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்டவர்க்கு உதவும் நம் இயற்கைக் குணம் இன்னொரு சுனாமியாய் இனிய சுனாமியாய் இத்தகைய தருணங்களில் வெளிப்படுவது கண்டு நெகிழ்ச்சியாக இருக்கிறது. தங்களால் முயன்ற வரை தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே பலவிதமான போற்றத்தகுந்த உதவிகளை நிறையபேர் செய்திருக்கின்றனர். சுனாமி தாக்கிய இடங்களுக்கு அண்மையில் இருப்பவர்கள் பலர் உடனே அந்த இடங்களுக்குச் சென்று மிகச் சிறந்த பணிகள் ஆற்றியிருக்கின்றனர். தூரத்தில் இருப்பவர்கள் தொண்டு நிறுவனங்களுக்கு பொருள் உதவி செய்தும், நிவாரணப் பொருட்களை சேகரித்து அனுப்பியும் தங்கள் பங்கினைச் செய்திருக்கிறார்கள். இப்படிப் பட்ட செயல்களைக் காண்பது மிக்க நெகிழ்ச்சியாகவும் உந்துதலாகவும் இருக்கிறது.

ஆனால் இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது எனக்கு ஒரு கேள்வி அண்மையில் அடிக்கடி தோன்றத் தொடங்கியுள்ளது. இந்த மாதிரி இயற்கை அழிவு நேரும் போது மட்டும் தான் இப்படிப்பட்ட கருணைச் செயல்களை நாம் பார்க்கிறோம். மற்ற நேரங்களில் நம் இயற்கைக் குணமான இந்தக் கருணை எங்கே சென்று விடுகிறது? என்னை முதற்கொண்டு எல்லோரும் ஏன் நம்மைச் சுற்றியிருக்கும் துன்பப்படும் மக்களின் துயரங்களைக் கண்டு கொள்வதில்லை? நம்மைச் சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு எத்தனையோ கஷ்டப்படுகிறார்கள். நாம் ஏன் அவர்களை அப்படியே துன்பப்படும்படி விட்டுவைத்திருக்கிறோம்? நம் மனம் இயற்கை அழிவுகளால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ விழைகிறது; ஆனால் மற்றத் துன்பங்களான பொருளாதார சமூக அநீதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டுமென்று எண்ணுவதில்லையே? ஏன்?

நாம் இன்னும் கொஞ்சம் கவனமாய்ப் பார்த்தால் நம்மைச் சுற்றி நிறைய பேர் தம்மால் முடிந்த அளவு துன்பப்பட்டு இனிமேலும் தாங்காது என்ற நிலைமையை அடைந்துள்ளார்கள் என்பதையும் நம்முடைய பணத்திலும் நேரத்திலும் சிறிது செலவழித்தாலும் போதும் அவர்கள் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கமுடியும் என்பதைப் பார்க்கலாம். ஆனால் நாம் அதனைச் செய்வதில்லையே ஏன்? நம்மைத் தடுப்பது எது? நாம் இப்படி கடின மனம் கொண்டவராய் ஏன் மாறிவிட்டோம்? நாம், நம் குடும்பம், சுற்றம், நட்பு இவர்களைப் பற்றி மட்டும் கவலைப்படும் சுயநலம் கொண்டவர்களாக ஏன் ஆகிவிட்டோம்?

இயற்கை அழிவு தாக்கும் போது மட்டும் தான் நான் மற்றவர்களுக்கு உதவுவேன் என்று நான் சொன்னால் அது மிகக் கொடூரமான எண்ணம். மற்றவர்களுக்கு உதவுவது என்பது என் இயற்கைக் குணம் என்றால் நான் அப்படிச் சொல்ல மாட்டேன். என்னைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் காண்பேன்; கேட்பேன். ஏதோ உயிரோடு இருக்கிறோம் என்ற நிலையில் 'வாழ்வதொன்றே' மிச்சமாய் இருக்கும் துன்பப்படும் மக்களையும் காண்பேன். அவர்களுக்கு என்னால் முடிந்ததெல்லாம் செய்வேன்.

என் இயற்கை குணமான கருணையைப் பற்றி எனக்கு மற்றவர்கள் சொல்லவேண்டியிருப்பதை எண்ணினால் வெட்கமாக இருக்கிறது. தினமும் இந்தக் கருணை என்னும் குணத்தை வெளியே கொண்டுவருவதற்கு மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், அன்னை தெரஸா போன்ற சமூகச் சேவகர்களின் உந்தும் சொற்கள் தேவைப்படுவது வெட்கமாய் இருக்கிறது. என்னைச் சுற்றி இருப்பவர்கள் மேல் என் கருணைக் குணத்தை வெளிப்படுத்துவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. நான் இன்னும் அதிக கவனத்துடன் இருந்து என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன். எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் உறுதி - 'என் இயற்கைக் குணமான கருணை வெளிப்படுவதற்கு இன்னொரு இயற்கை அழிவு தேவையில்லை. சான்றோர்களின் உந்தும் வார்த்தைகளைத் தொடர்ந்து படிப்பேன்; ஆனால் மற்றவர்களுக்கு உதவும் என் குணம் வெளிப்பட அந்த வார்த்தைகள் இனித் தேவையில்லை. அது இன்னும் இயற்கையாக நடக்கும்'. இந்த உறுதி மொழியில் நிலையாக நிற்க நான் ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில் என் இயற்கைக் குணமான கருணைச் செயல்கள் செய்வதற்கும் ஆண்டவனை வேண்ட வேண்டியுள்ளதே என்று எண்ணும் போது வெட்கமாய் இருக்கிறது.

Wednesday, January 25, 2006

130: *நட்சத்திரம்* - ஜன கன மன

இன்றைக்குக் குடியரசுத் தினம். குடியரசு முறை நம் நாட்டிற்குப் புதியதன்று. தமிழகத்தில் மன்னர் ஆட்சியே இருந்திருந்தாலும் குடவோலை முறையில் ஊர்ச்சபையைத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்ததாகவும், வட நாட்டில் மௌரியர் காலத்திற்கு முன் 'கண ராஜ்யம்' என்னும் சிறு சிறு குழு குடியரசுகள் இருந்ததாகவும் படித்திருக்கிறேன்.

நம் தேசிய கீதம் எந்தத் தருணத்தில் இயற்றப்பட்டது என்பது ஒரு விவாதமாகவே இருக்கிறது. கவிகுரு இரவீந்திர நாத் தாகூர் அதனை ஆங்கில (வேல்ஸ்?) இளவரசர் பாரதத்திற்கு விஜயம் செய்த போது அவரை வரவேற்கும் முகமாக எழுதியது என்ற ஒரு கருத்து வலுவுடன் வலம் வருகிறது . இருக்கலாம். அதனை மறுத்துக் கூறவோ ஆதரித்துக் கூறவோ என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. இது அரசியல்வாதிகளின் வெறும் கூச்சலாக இருக்கலாம். இல்லை அதில் உண்மையும் இருக்கலாம்.

ஆனால் நம் தேசிய கீதத்தின் பொருளைப் பார்க்கும் போது அது நம் நாட்டின் பெருமையை மிக நன்றாகப் பாடுவதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. என்னைக் கேட்டால் இந்தப் பாடலைப் புறக்கணித்து விட்டு இன்னொரு பாடலை நாம் நம் நாட்டுப் பண்ணாகக் கொண்டுவரத் தேவையில்லை என்று தான் சொல்வேன். நீங்களே படித்துப் பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஜன கன மன அதிநாயக ஜய ஹே - மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !

பாரத பாக்ய விதாதா - இந்தியத் திருநாட்டுக்கு பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே.

பஞ்சாப சிந்த குஜராத மராட்டா த்ராவிட உத்கல பங்கா

ஐந்து பெரிய நதிகள் ஓடும் நிலம், பெரும் வீரர்கள் தோன்றிய இடம், சமய ஒற்றுமையை வலியுறுத்தும் சீக்கியத்தின் பிறப்பிடம் - பஞ்சாப் மாகாணம் உன்னுடையது.

புராதன பாரதத்தின் தலை வாசல், நான்கு வேதங்களின் பிறப்பிடம் , பழம்பெரும் சிந்து சமவெளிக் கலாச்சாரம் தழைத்தோங்கிய இடம் - சிந்து நதிப்பிரதேசம் உன்னுடையது.

பகவான் கிருஷ்ணனின் ராஜ்ஜியம், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறப்பிடம் - குஜராத் மாநிலம் உன்னுடையது .

வீர சிவாஜியின் பிறப்பிடம், தற்கால இந்தியாவின் தலைவாசல் - மராட்டிய மாநிலம் உன்னுடையது .

பழம்பெரும் திராவிடக் கலாச்சாரத்தின் தொட்டில், செம்மொழியாம் தமிழ்மொழியின் பிறப்பிடம், இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பாகங்களை அளித்த பெருநிலம் - திராவிட பீடபூமி உன்னுடையது.

பூரி ஜெகன்னாதம், கொனாரக் போன்ற சிறந்த கலைச்செல்வங்களாகிய கோவில்கள் இருக்கும் இடம், பழங்காலத்து கலிங்க தேசம் - உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம் உன்னுடையது.

இந்திய விடுதலையின் பிறப்பிடம், நூதன இந்தியாவின் மூளை, பெரும் ஞானிகள் பிறந்த தேசம் - பழம்பெருமை மிக்க வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது .

இந்த பெரும் மாநிலங்களும் அதில் வாழும் மக்களும் உன் பெருமைகளை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றனர்.

விந்த்ய ஹிமாசல

யமுனா கங்கா

வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் நடுவே அமைந்த இயற்கை எல்லை, மிகப் பெரியது என்றும் கடக்க முடியாதது என்றும் ஒரு காலத்தில் எண்ணப்பட்ட மலை, பல புராணக் கதைகளின் இருப்பிடம் - விந்திய மலை உன்னுடையது.

மாபெரும் மலைத்தொடர், அசலம் (அசையாதது) என்னும் சொல்லுக்கு ஒரு மாபெரும் உதாரணம், இந்தியத் தேசத்தின் இயற்கை எல்லை, மகரிஷிகளும் சாதுக்களும் வாழும் இறையாலயம், புராணக்கதைகளின் நாயகன், உலகின் மிகப் பெரிய சிகரத்தைக் கொண்ட மலைத்தொடர் - இமய மலை உன்னுடையது.

இந்தியத் திருநாட்டின் மாபெரும் சமவெளியை தழைத்தோங்கச் செய்யும் இரு நதிகள், இந்தியர்களின் ஆன்மத் தாயார்கள் - கங்கையும் யமுனையும் உன்னுடையவை.

இந்த இயற்கை அற்புதங்கள் உன் புகழை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றன.

உச்சல ஜலதி தரங்கா - மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன.

தவ சுப நாமே ஜாஹே - உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.

தவ சுப ஆஷிஷ மாஹே - உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.

காஹே தவ ஜய காதா - உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்.

ஜன கன மங்கல தாயக ஜய ஹே - இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!

பாரத பாக்ய விதாதா - இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ.

ஜய ஹே! ஜய ஹே! ஜய ஹே! ஜய ஜய ஜய ஜய ஹே! - வெற்றி உனக்கே! வெற்றி உனது நல்வழி செல்லும் மக்களுக்கே! வெற்றி உன் மங்கலகரமான கொள்கைகளுக்கே! வெற்றி உன் ஈடு இணையற்ற தத்துவச் செல்வங்களுக்கே! வெற்றி உன் பன்மைத் தன்மைக்கே! வெற்றி உன் அமைதியை விரும்பும் குணத்திற்கே! வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திருநாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!

***
நண்பர் சந்தோஷ் குடியரசு தினத்தை முன்னிட்டு ஒரு பதிவு இட்டிருந்தார். அதில் மிக நல்ல முறையில் நம் நாட்டுப் பண் பல இசைவாணர்களால் இசைத்துப் பாடப்பட்டு எடுக்கப் பட்டப் படத்தை இட்டிருந்தார். அதனை இந்தப் பதிவிலும் இடவேண்டும் என்று எண்ணி அவரிடம் கேட்டேன். அவர் சொன்ன முறையில் கூகிள் கொடுத்த இந்தப் படத்தை இங்கே தருகிறேன். பார்த்துக் கேட்டு மகிழுங்கள். முடிந்தால் எழுந்து நின்று நாட்டுப் பண்ணுக்கு மரியாதை செய்யுங்கள்.




129: **நட்சத்திரம்** - பொருநைத் துறைவன்

வீட்டில் எல்லா விதமான செல்வங்களும் இருக்கின்றன. எந்தக் குறையும் இல்லை. மாடு மனை, வீடு வாசல், நன்செய் புன்செய் என்று எல்லாமே கொழிக்கின்றன. செய்யும் அறச்செயல்களுக்கோ அளவில்லை. வேண்டி நின்றார் வேண்டிற்றளவும் கொடுத்து வள்ளல் என்ற பெயரும் கிடைத்திருக்கிறது. எல்லாம் இருந்தும் என்ன பயன்? வேளாளர்த் தலைவர் காரிக்கும் அவர் தம் மனைவியார் உதயநங்கைக்கும் தம் குலம் தழைக்க ஒரு குழந்தை இல்லையே என்பது தான் பெருங்குறை.

பொருநை நதிக் கரையில் திருக்குருகூரில் கோயில் கொண்ட ஆதிநாதப் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று குழந்தை வரம் வேண்டினால் நிச்சயம் அருள் கிடைக்கும் என்று பெரியோர்கள் சொல்ல, இதோ ஆதிநாதப் பெருமாள் கோயிலுக்கு வந்து அவன் அருளை வேண்டி இறைஞ்சி நிற்கின்றனர் . கோயில் பிரகாரத்திலேயே அன்றிரவு தங்கிவிட்டனர்.

கனவில் வந்தான் மாயவன். அடியார் படும் துயரைக் காணச் சகிக்காதவன் அல்லவா அந்த அச்சுதன் . தன் அம்சமான சேனை முதலியார் எனும் விஷ்வக்சேனரே அவர்களுக்கு ஒரு மகனாய் பிறப்பார் என்று அருள் செய்கிறான். மகுந்த மன மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகின்றனர் கணவனும் மனைவியும்.

***

இன்று பிரமாதி வருடம், வைகாசி மாதம், விசாக நட்சத்திரம். உதய நங்கை மிகுந்த ஒளியுடன் கூடிய ஒரு ஆண்மகவை ஈன்றிருக்கிறாள். கண்ணன் பிறந்த போது அன்று ஆய்ப்பாடி பட்ட பாடு காரியார் திருமாளிகை இன்று பட்டது. எங்கும் ஒரே கோலாகலம்.

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே

ஆனந்தத்தால் இங்கும் அங்கும் ஓடுகிறார்கள் சிலர்; கீழே விழுகிறார்கள் சிலர்; விரும்பி ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்கிறார்கள்; நம் தலைவன் எங்கு பிறந்துள்ளான்? எங்கே உள்ளான்? என்று அவனைக் காண விரும்பி நாடுவார்கள் சிலர்; பாடுவார்கள் சிலர்; பலவிதமான பறைகளைக் கொட்டிக்கொண்டு ஆடுகிறார்கள் சிலர்; இப்படிப் பட்ட கோலாகலம் கண்ணன் பிறந்த போது ஆய்ப்பாடியில் ஏற்பட்டது.

***

நாட்கள் சென்றன. குழந்தை பிறந்தது முதல் அழவேயில்லை. எந்த விதமான உணவும் உட்கொள்ளவில்லை. ஆனால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. எப்போதும் ஏதோ ஒரு மோன நிலையில் இருப்பது போல் ஆடாமல் அசையாமல் இருக்கிறது. வந்துப் பார்த்த வைத்தியர்கள் எல்லாம் எதுவும் செய்ய முடியவில்லை. உணவு உட்கொள்ளாமலேயே குழந்தை வளர்ந்து வருவதால் கொஞ்சம் நாள் சென்றால் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டனர்.

ஆதிநாதப் பெருமாள் அருளால் பிறந்த இந்த குழந்தை இப்படி மற்ற குழந்தைகளை விட மாறுதலாய் இருப்பதால் ஊரார் 'மாறன்' என்று அழைக்கத் தொடங்கிவிட்டனர். குழந்தைகளை பிறந்தவுடனே 'சடம்' என்னும் ஒரு வாயு தாக்குவதால் தான் குழந்தைகள் அழ ஆரம்பிக்கின்றன. இந்தக் குழந்தை பிறந்தது முதல் அழாததால் அந்த சட வாயு இவனை அண்டவில்லை என்று தோன்றுகிறது. அதனால் இவனைச் 'சடகோபன்' என்று அழைக்கலாம் என்று பெரியவர்கள் சொல்ல அதுவும் அந்தக் குழந்தைக்குப் பெயராகியது.

***

வைத்தியர்கள் சொன்ன மாதிரி சிறிது நாட்கள் சென்றால் குழந்தை சரியாகிவிடும் என்று தான் பெற்றோர் நினைத்தனர். ஆனால் ஏறக்குறைய ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்னும் குழந்தை அப்படியே தான் இருக்கிறது. எந்த இறைவனின் திருவருளால் குழந்தை பிறந்ததோ அந்த இறைவனின் திருக்கோயிலுக்குச் சென்றால் ஒரு வேளை குழந்தை மாற்றமடையலாம் என்று எண்ணி குழந்தையை ஆதிநாதப் பெருமாள் ஆலயத்திற்கு எடுத்து வந்தனர். குழந்தையை இறைவன் திருமுன்பு வைத்து அவனை இறைஞ்சி நின்றனர்.

ஆஹா. என்ன ஆச்சரியம்? இதுவரை ஆடாமல் அசையாமல் வெறும் பிண்டம் போல் கிடந்த குழந்தை தவழ்ந்து தவழ்ந்து அந்த புளிய மரம் நோக்கிச் செல்கிறதே. அந்தப் புளிய மரமும் சாதாரண மரமன்று. அது உறங்காப்புளி. எல்லாப் புளிய மரங்களும் இரவில் தம் இலைகளை மூடும் . இந்த புளியமரம் இரவிலும் தன் இலைகளை மூடுவதில்லை.

அந்த உறங்காப் புளியின் அருகில் சென்று அமர்ந்துவிட்டது குழந்தை. ஒரு வயதுக் குழந்தை தாமரை ஆசனம் இட்டு அமர்ந்திருப்பது ஏதோ தவத்தில் அமர்ந்திருப்பது போல் இருக்கிறது. எத்தனையோ முறை முயன்றும் மாறனை அம்மரத்தடியில் இருந்து நகர்த்த முடியவில்லை. அதனால் பெற்றோரும் ஆதிநாதர் திருக்கோயிலுக்கு அருகிலேயே வசித்து தினமும் தங்கள் திருமகனை வந்துப் பார்த்துப் போகிறார்கள்.

***

'ஹும். நமக்கும் வயதாகிவிட்டது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தத் தெய்வத் திருநாடாம் தென்பாண்டி நாட்டுத் திருக்கோளூரில் பிறந்து நம் குல ஆசாரத்திற்கு ஏற்ப வடமொழி வேதங்களையும் தமிழ்மொழி இலக்கிய இலக்கணங்களையும் கற்று பெரும்பண்டிதன் என்று புகழ் பெற்றோம். சிறு வயதிலிருந்தே இனிமையான கவிதைகள் பாடி வருவதால் மதுரகவி என்றும் அழைக்கப் படுகிறோம். பாம்பணையில் பள்ளி கொண்ட பரந்தாமனைச் சேவித்து அவன் அருள் என்னும் அழியாச் செல்வத்தைப் பெற, இந்த பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியிலிருந்து விடுதலைப் பெற, மோக்ஷபுரிகள் என்று சொல்லப் படும் அயோத்தி, மதுரா (வட மதுரை), மாயா (ஹரித்வார்), காசி, காஞ்சி, அவந்திகா (உஜ்ஜயினி), பூரி (புவனேஷ்வர்), துவாரகை என்று எல்லாத் திருத்தலங்களுக்கும் சென்று அங்கேயே சிறிது காலம் தங்கிப் பார்த்தோம். அயோத்தி நம் மனதிற்கு உகந்ததாகவும் இராமபிரானையும் அன்னை சீதையையும் தினமும் தொழுவதற்கு ஏற்பதாகவும் இருந்ததால் இங்கேயே தங்கிவிட்டோம். ஆனால் அவன் அருள் வந்ததாகவும் தெரியவில்லை. முக்தி மார்க்கம் தென்படுவதாகவும் தெரியவில்லை. கற்ற கல்வி அனைத்தும் ஒரு சதாசாரியன் கிடைக்காவிட்டால் விழலுக்கு இறைத்த நீர் என்பது எவ்வளவு உண்மை. வயது கூடக் கூட ஒரு நல்ல ஆசாரியன் கிடைப்பான் என்னும் நம்பிக்கை தளர்ந்து வருகிறது. இறைவா. எனக்கு ஒரு நல்ல ஆசாரியனைக் காட்டக் கூடாதா?'

மதுரகவியார் இப்படி இறைவனை இறைஞ்சி அடிக்கடி பெருமூச்சு விடுவது வழக்கமாய் விட்டது. கருணைக் கடலான இறைவன் நல்ல வழி காட்டாமலா போய்விடுவான்.

***

'ஆஹா. அது என்ன பெருஞ்சோதி. ஆதவன் மறைந்த பின் சில நாட்களாக தென் திசையில் இந்த பெரும் ஒளி தோன்றுகிறதே. என்னவாக இருக்கும்?'

'நண்பரே. அங்கு பார்த்தீர்களா? தெற்கில் ஏதாவது விசேஷமா? ஒரு பெரும் ஒளி தோன்றுகிறதே?'

'மதுரகவியாரே. எந்த ஒளியைச் சொல்கிறீர்கள்? எனக்கு எதுவும் தெரியவில்லையே?'

'இதே தான் எல்லாருடைய பதிலாகவும் இருக்கிறது. நமக்கு மட்டும் இந்த ஒளி தினமும் இரவில் தோன்றுகிறதே. அது என்ன என்று அறிந்து கொள்ள மிக்க ஆவலாக இருக்கிறது. நாளை நாம் தெற்கு நோக்கிச் செல்வோம். அந்த ஒளி எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிப்போம்'.

இப்படி எண்ணி அயோத்தியிலிருந்து கிளம்பினார் மதுரகவியார். தினமும் பகலில் ஓரிடத்தில் தங்கிப் பகலவன் மறைந்த பின் ஒளிக்கற்றையை நோக்கி நடந்து நடந்து மதுரகவியார் தென்னாட்டிற்கு வந்தார். பல நாட்கள் பயணித்தபின் திருக்குருகூர் ஆதிநாதப் பெருமாள் ஆலயத்திற்கு அருகில் வந்த போது அந்த ஒளி மறைந்தது. பின்னர் தோன்றவே இல்லை.

ஆதிநாதர் திருக்கோயிலில் தான் ஏதோ அதிசயம் இருக்க வேண்டும் என்று எண்ணி அங்குள்ள மக்களிடம் கேட்டார். அவர்கள் காரிமாறன் சடகோபனைப் பற்றிச் சொல்லி மதுரகவியாரை உறங்காப்புளி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

'அடடா. இந்த 16 வயது பாலகன் எவ்வளவு காந்தியுடன் இருக்கிறான். இவன் பிறந்தது முதல் அசையவே இல்லை என்று சொல்கிறார்களே. எந்த உணவும் உட்கொள்ளவில்லை என்றும் கண் திறந்து பார்த்ததில்லை என்றும் வாய் திறந்து பேசியதில்லை என்றும் சொல்கிறார்கள். ஆனால் இச்சிறுவனைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே. உடலிலோ முகத்திலோ எந்த வித வாட்டமும் இல்லை. அவன் முகத்து ஒளியை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கலாம் போல் இருக்கிறதே. இந்தப் பாலகனைப் பேசவைத்துப் பார்க்கலாம். இறைவன் நமக்கு ஒரு சதாசாரியனை இறுதியில் காட்டிவிட்டான் என்றே தோன்றுகிறது'.

மதுரகவியார் இப்படி எண்ணிக்கொண்டு ஒரு சிறு கல்லை எடுத்து அந்த சிறுவன் அருகில் போட்டார் . அந்த ஒலியைக் கேட்டு இதுவரை கண் திறக்காத மாறன் கண் திறந்து மதுரகவியாரைப் பார்த்தான்.

மதுரகவியார் உடனே 'செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும் ?' என்று வினவினார்.

சடகோபன் உடனே தன் திருவாய் மலர்ந்து 'அத்தைத் தின்று அங்கே கிடக்கும்' என்றார்.

அதனைக் கேட்டவுடன் முதியவரான மதுரகவியார் கீழே விழுந்து அந்தச் சிறுவனை வணங்கி தன்னைச் சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டி நின்றார். மாறன் சடகோபனும் ஏற்றுக் கொண்டார்.

***

'நடந்ததைக் கேட்டாயா? இந்த பிராமணக் கிழவர் மதுரகவியார் கோயிலில் ஆடாமல் அசையாமல் கிடந்த, நம் தலைவர் காரியாருடைய மகன் மாறன் ஒரு சிறுவன் என்று கூடப் பாராமல் அவன் காலில் விழுந்து தன்னைச் சீடனாக்கிக் கொள் என்று சொல்கிறாரே? இது தகுமா? அவர் வயது என்ன? இவன் வயது என்ன? அவர் குலம் என்ன? இவன் குலம் என்ன? அவர் கற்றது எவ்வளவு? இவன் கற்றது எவ்வளவு? எதற்கும் ஒரு அளவு உண்டு'.

'ஆம் நண்பா. நீ சொல்வதை நானும் ஒத்துக் கொள்கிறேன். வேளாளர்களாகிய நம் குலத்தில் பிறந்த இந்தச் சிறுவனை அந்தப் பார்ப்பனக் கிழவர் கீழே விழுந்து வணங்குவதும் என்னை சீடனாக்கிக் கொள்ளுங்கள் என்று கேட்பதும் அதற்கு அந்த பாலகன் ஒத்துக் கொள்வதும் மிக்க ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. உலகவழக்கிற்கு எதிராகவும் இருக்கிறது. மதுரகவியார் செய்வதில் ஏதேனும் பொருள் இருக்கும். அவர் ஏதோ கேட்க, சிறுவன் மாறன் சடகோபன் ஏதோ பதில் சொன்னானே. என்ன என்று அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்'.

***

'சுவாமி. நீங்கள் கோயிலுக்கு வந்து சடகோபனைப் பார்த்தவுடன் ஏதோ கேட்டு அவனும் ஏதோ பதில் சொன்னானே. அது என்ன என்று எங்களுக்கு விளக்க முடியுமா?'

'அன்பர்களே. திருக்கோயிலில் இருக்கும் நம் ஆசார்யன் சாதாரணமானவர் இல்லை. எல்லா ஞானமும் உடையவர். நான் கேட்டது

செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?

என்பது. இதன் பொருள் உயிரில்லாததாகிய இந்த உடலில் அணு உருவமாய் சிறியதாய் இருக்கும் ஜீவன் பிறந்தால் எதனை அனுபவித்துக் கொண்டு எந்த நிலையில் இருக்கும் என்பது.

அதற்கு நம் ஆசார்யன் சொன்ன பதில்

அத்தைத் தின்று அங்கே கிடக்கும்

என்பது. இதன் பொருள் அந்த உயிர் சாதாரணமான உயிராய் இருந்தால் அந்தப் பிறவி நேரக் காரணமான முன்வினைகளுக்கு ஏற்ப இன்பதுன்பங்களை அனுபவித்துக் கொண்டு அந்த உடலிலேயே வினைப்பயன் முடியும் அளவும் கிடக்கும்; அதுவே இறையுணர்வு கொண்ட உயிராய் இருந்தால் எம்பெருமானிடம் எப்போதும் ஈடுபாடு கொண்டு அவனிடமே தோய்ந்து கிடக்கும் என்பது'.

'விளக்கத்திற்கு நன்றி. இது பெரும் விஷயமாகத் தான் இருக்கிறது. சடகோபன் ஞானமடைந்தவன் என்பது தெளிவாகிறது. ஆனால் வயதிலும் மற்ற எல்லாவிதத்திலும் உயர்ந்தவரான நீங்கள் எப்படி இந்தச் சிறுவன் காலில் விழுந்து அவனை ஆசாரியனாக ஏற்றுக் கொள்ள முடியும்? இது தகுமா?'

'அன்பர்களே. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். மேலோன் கீழோன் என்பதெல்லாம் உலக வழக்கில் நமக்கு நாமே அமைத்துக் கொண்ட வழிமுறைகள். சிறியவர் பெரியவரை வணங்க வேண்டும் என்பதும் அந்த வழிமுறைகளில் ஒன்று. ஆனால் ஒருவர் ஞானமடைந்திருந்தால் அவர் எந்த வயதினராக இருந்தாலும், எந்த குலத்தினராக இருந்தாலும், எப்படிப் பட்டவராய் இருந்தாலும் நம்மால் வணங்கப்பட வேண்டியவர். ஞானிகளிடம் குலம் கோத்திரம் கல்வி கேள்வி வயது போன்றவைகளைப் பார்க்கக் கூடாது. அதனால் நான் நம் ஆசாரியன் சடகோபனிடம் அடைக்கலம் பெற்றது மிகவும் சரியே'.

***

மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்.

(1) இறைவன் எல்லாருக்கும் எல்லாவற்றிற்கும் மேலானவன் என்பதையும், (2) என்றும் நிலையான உயிர்களின் இயல்புகளையும், (3) அந்த உயிர்கள் மேலான இறைவனை அடையும் வழியையும், (4) அந்த வழிக்குத் தடையாக எப்போதும் தொடர்ந்துவரும் முன்வினைகளையும், (5) அவனருளாலே அவன் தாள் அடைந்து அனுபவிக்கும் பேரானந்தப் பெருவாழ்வையும், தன் பாடல்களில் கூறுகின்ற திருக்குருகூர் மாறன் சடகோபன் என்னும் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாடல்கள் வேதங்களை யாழின் இசையுடன் இசைத்தது போன்றுளது.

வேறொன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண்குருகூர் - ஏறெங்கள்
வாழ்வாம் என்றேத்தும் மதுரகவியார் எம்மை
ஆள்வார் அவரே சரண்.

எனக்கு வேறொன்றும் தெரியாது. வேதங்களைத் தமிழில் திருவாய்மொழியாக இசைத்த மாறன் சடகோபன் திருக்குருகூர் ஏறு - அவரே எங்கள் வாழ்வு' என்று ஏத்தும் மதுரகவியாழ்வார், எங்களை ஆள்பவர். அடியார்க்கு அடியாரான அவரே அடியோங்களுக்கு அடைக்கலம்.

Tuesday, January 24, 2006

127: *நட்சத்திரம்* - எனக்குப் பிடித்தப் பாடல்கள்

பிடித்தப் பாடல்கள் என்று எழுத ஆரம்பித்தால் வருடம் முழுக்க எழுதிக்கொண்டே இருக்கலாம். அதனால் இப்போது உடனே நினைவுக்கு வந்த மூன்று பாடல்களைப் பற்றி இங்கு எழுதுகிறேன். இவை மட்டுமே எனக்குப் பிடித்தப் பாடல்கள் அல்ல. எத்தனையோ உண்டு. அண்மையில் கேட்டு மனதில் உடனே தோன்றிய பாடல்கள் தான் இவை.

**********

முதல் பாட்டு சிலப்பதிகாரத்தில் வருவது. இளங்கோவடிகள் எழுதியது. இளங்கோவடிகள் சைவர் என்றும் சமணர் என்றும் சொல்லுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்தப் பாடலைப் படித்தவர்களும் கேட்டவர்களும் இவர் வைணவராய்த் தான் இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். நாராயணன் புகழை அப்படிப் பாடுகிறார்.

வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி
கடல்வண்ணன் பண்டொரு நாள் கடல் வயிறு கலக்கினையே
கலக்கிய கை அசோதையார் கடைக்கயிற்றால் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே.

வடதிசையில் இருக்கும் மலையாகிய மேருவை மத்தாக்கி வாசுகி என்னும் பாம்பை கயிறாக்கி (நாணாக்கி) கடல் போன்ற நிறத்தை உடைய இறைவா, நீ பழைய காலத்தில் ஒரு நாள் கடலைக் கடைந்து அமுதம் எடுக்க உதவினாய். அகில புவனங்களையும் படைக்கும் பிரம்மனை உன் தொப்புளில் வளரும் தாமரை மலரில் படைத்தாய். அப்படி மாபெரும் காரியங்களைச் செய்த நீயே யசோதையாரின் அன்புக்குக் கட்டுப்பட்டு அவரின் கயிற்றால் கட்டுண்டாய். இது என்ன மாயமோ. எங்களை மயக்கும் தன்மையாய் இருக்கிறதே.

அரும்பொருள் இவனென்றே அமரர்களும் தொழுதேத்த
உருப்பசி ஒன்றின்றியே உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினால் உறி வெண்ணை உண்டவாய்
வண்துழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே.

வலிமையின் வடிவான, துழாய் மாலை அணிந்தவனே! கிடைத்தற்கரிய செல்வம் இவனென்று என்றும் வாழும் அமரர்களாலும் தொழுதேத்தப் படுபவன் நீ. பசியில்லாவிட்டாலும் உலகங்கள் அனைத்தையும் அழிக்கும் காலம் வந்த போது நீ அவற்றை எல்லாம் உண்டாய். அப்படி உண்ட அதே வாயினால் உறி வெண்ணையையும் களவு செய்து உண்டாயே. இது என்ன மாயமோ? எங்களை உன் செயல்கள் மருட்டுகின்றனவே.

திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்! நின் செங்கமல
இரண்டடியால் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்த அடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்த அடி
மடங்கலாய் மாறட்டாய்! மாயமோ மருட்கைத்தே.

நரசிம்மமாய் வந்து மாற்றானைக் கொன்றவனே! அமரர்கள் திரண்டு வந்து தொழுது ஏத்தும் திருமாலவனே! அன்று திரிவிக்கிரம அவதாரம் எடுத்தப் போது உன் செந்தாமரை அடிகளால் இரண்டு அடி எடுத்து மூவுலகங்களையும் அவைகளில் இருக்கும் மயக்க இருள் தீரும் படி அளந்து நடந்தாயே. அப்படி நடந்த திருவடிகளா பாண்டவர்களுக்காக தூதாகவும் நடந்தன? இது என்ன மாயமோ? எங்களை உன் செயல்கள் மருட்டுகின்றனவே.

மூவுலகும் ஈரடியால் முறைநிரம்ப வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே. திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே.

முறையற்று இருந்த நிலை மாற்றி மூவுலகும் இரண்டு அடிகளால் அளக்கத் தாவிய செம்மையுடைய திருவடிகள் மேலும் சிவப்பத் தன் தம்பியான இலக்குமணனோடு கானகம் வந்து, தங்கத்தால் அரண் (மதில்) அமைத்துப் பாதுகாக்கப் பட்ட தொன்மையான இலங்கையின் பாதுகாவலை அழித்த சிறந்தவனாம் இராமபிரானின் சிறப்புகளை மனம் உவந்து கேட்காத செவியென்ன செவிகள்? திருமால் சீர் கேட்காத செவியென்ன செவிகள்?

பெரியவனை மாயவனை பேருலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனை கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே

அவனை விட யாரும் பெரியவர் இல்லை எனும் படி நின்றவனை, மாயவனை, பெரிய உலகங்களை எல்லாம் தன் தொப்புளுள் மலரும் தாமரை மலரில் படைத்த விண்ணவனை, கண்களும் திருவடிகளும், கைகளும், திருவாயும் சிவந்த தாமரை மலரை போல் விளங்கும் கரிய திருமேனி கொண்டவனைக் காணாத கண் என்ன கண்ணே? அவன் அழகைக் கண்டபின்னும் அதனை கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே? (அவன் அழகைக் கண்டால் கண்ணைக் கூட இமைக்க முடியாமல் மெய் மறந்து போவோம் என்கிறார்).

மடந்தாழும் நெஞ்சத்து கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்ற
படர்ந்தாரணம் முழங்க பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா என்னா நாவென்ன நாவே

மடமை ஆழ்ந்திருக்கும் நெஞ்சம் உடைய கம்சனின் வஞ்சங்களை எல்லாம் வெற்றிகொண்டு, கௌரவராம் நூற்றுவரை நோக்கி, எல்லாத் திசைகளும் போற்ற, வேதங்கள் எல்லா திசைகளிலும் முழங்க, பாண்டவராம் பஞ்சவர்க்காகத் தூது நடந்தானை போற்றிப் பாடாத நாவென்ன நாவே? நாராயணா என்று சொல்லாத நாவென்ன நாவே?

இந்தப் பாடலை எம்.எஸ். அருமையாகப் பாடியிருப்பார். முடிந்தால் கேட்டு அனுபவியுங்கள்.

**********

இரண்டாவது பாட்டு கருணையே உருவான இராமலிங்க வள்ளலார் பாடியது.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும்
மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வு நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

தருமத்திலே சிறந்த சென்னை மாநகரிலே கந்தகோட்டத்துள் அமர்ந்தருளும் கந்தவேளே! குளிர்ந்த திருமுகம் கொண்ட தூய மணி போன்றவனே! உள் நோக்கி நிற்பார் தமை காத்தருளும் சைவ மணியே! ஆறுமுகத் தெய்வமணியே! ஒரே நோக்குடன் உனது மலர் போன்றத் திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்களின் உறவு வேண்டும்! உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்று பேசுவார் உறவு கிடைக்காமல் இருக்க வேண்டும்! பெருமையுடன் கூடிய உனது புகழே பேச வேண்டும்! பொய்யானவை நான் பேசாதிருக்க வேண்டும்! நெறிகளிலே உயர்ந்த நெறியானதை நான் பின்பற்ற வேண்டும்! கர்வம் (மதம்) என்னும் பேய் எனக்குப் பிடிக்காமல் இருக்க வேண்டும்! தன் மனை தவிர வேறு பெண்ணை மருவும் ஆசை எனக்கு வராமல் இருக்கவேண்டும்! உனை நான் மறவாதிருக்க வேண்டும்! நல்ல அறிவு வேண்டும்! உனது கருணை என்னும் செல்வம் வேண்டும்! நோயில்லாத வாழ்வு நான் வாழ வேண்டும்!

**********

மூன்றாவது பாட்டு சிவனையும் விஷ்ணுவையும் ஓருருவாகப் பாடும் ஒரு கர்நாடக இசைப் பாடல். வார்த்தை விளையாட்டு இந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்தது.

பல்லவி:

மா ரமணன் உமா ரமணன்
மலரடி பணி மனமே தினமே (மா ரமணன்)

அனுபல்லவி:

மார ஜனகன் குமார ஜனகன்
மலை மேல் உறைபவன் பாற்கடல்
அலை மேல் துயில்பவன் பாவன (மா ரமணன்)

சரணம்:

ஆயிரம் பெயரால் அழைப்பினும்
ஆயிரம் உரு மாறினும் உயர்
தாயினும் மிகு தயாபரன் பதம்
தஞ்சம் என்பவரை அஞ்சல் என்றருளும் (மா ரமணன்)

பல்லவி:

மா என்றால் திருமகள். மா ரமணன் என்றால் திருமகள் மணவாளன் திருமாலவன். உமா ரமணன் என்றால் உமையன்னையின் மணவாளன் சிவபெருமான். அவன்(அவர்கள்) மலரடி பணி மனமே. தினமே.

அனுபல்லவி:

மாரன் என்றால் மன்மதன். அவன் தந்தை கண்ணன். அதனால் மார ஜனகன் விஷ்ணு. குமார ஜனகன் குமரனின் தந்தையான நடராஜன். கைலாய மலை மேல் உறைபவன் முக்கண்ணன். பாற்கடல் அலை மேல் துயில்பவன் மாயவன். தூயவர்கள் இவர்கள்.

சரணம்:

ஆயிரம் பெயர் கொண்டு அழைத்தாலும், ஆயிரம் உருவங்களால் வழிபட்டாலும், உயர்ந்த தாயை விட கருணையுடைய தயாபரன் அவன். அவனுடைய திருவடிகளைத் தஞ்சம் என்று வந்தவர்களை அஞ்சேல் என்று அருளுபவன் அவன்.





Monday, January 23, 2006

124: *நட்சத்திரம்* - முருகனருள் முன்னிற்கும்

2001 கடைசியில்:

கோவிலில் நுழையும் போதே அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு சின்ன வயதில் நானும் என் தம்பியும் அடிக்கடி இங்கு வந்தது நினைவுக்கு வந்தது . வீட்டுப் பக்கத்தில் பஸ்ஸைப் பிடித்தால் ஒரு அரை மணி நேரத்தில் திருப்பரங்குன்றம் வந்துவிடலாம் . ஆனால் இப்போதெல்லாம் வாடகை ஊர்தி கிடைப்பதால்
குடும்பத்தோடு திருப்பரங்குன்றம் வருவதற்கு அது தான் வசதியாக இருக்கிறது.

நானும் என் மனைவியும் அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். கணவனும் மனைவியுமாக அமெரிக்காவை வலம் வந்துக் கொண்டிருக்கிறோம். திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என்று பார்க்க வேண்டிய இடங்களை எல்லாம் இரண்டாவது தடவை பார்த்து வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருக்கிறது. வருடா வருடம் நான் வேலை பார்க்கும் நிறுவனம் இந்தியாவுக்கு வந்து செல்லும் செலவை ஏற்றுக்கொள்ளும். அதனால் தவறாமல் ஒவ்வொரு வருடமும் தாய்த் திருநாட்டைப் பார்ப்பதற்கு வந்துவிடுவதுண்டு . விடுமுறைக்கு மதுரை வரும் போதெல்லாம் திருப்பரங்குன்றம் தவறாமல் வந்துவிடுவதுண்டு . எங்கள் குல தெய்வம் திருப்பரங்குன்றம் முருகன். எங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு எல்லாம் முடியிறக்குவது இங்கு தான்.

கோவிலில் நுழைந்தவுடன் இடது பக்கம் திரும்பி கருப்பண்ணசாமியை வணங்கினோம் . அவருக்குத் தான் இங்கு முதல் மரியாதை. அவர் இருக்கும் தேர் போன்ற மண்டபம் எனக்கு மிகவும் பிடித்த இடம். தெய்வயானைத் திருமணக் காட்சியைக் காண வந்த மணமகனின் அப்பா அம்மா அண்ணன் மாமா மாமி எல்லாரும் அந்த மண்டபத் தூண்களில் அழகாக நின்றிருப்பார்கள். அதிலும் அண்ணன் தன் தம்பி கல்யாண கோலாகலத்தில் மகிழ்ந்து தன் தொந்தி குலுங்க நடனம் ஆடிக்கொண்டிருக்கும் காட்சி மனதைக் கொள்ளைக்கொள்ளும். எத்தனைத் தடவை பார்த்தாலும் சலிக்காத ஆராவமுதானத் தோற்றம்.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று சொல்லுவது போல் குமரக்கடவுள் குன்றின் மேலும் அடிவாரத்திலும் தான் பெரும்பாலும் கோவில் கொண்டுள்ளான். இந்தக் கோவில் மலை மேல் இல்லாவிட்டாலும் மலையைக் குடைந்து கட்டியிருப்பதால் ஐயனைக் காண சில படிகள் ஏறிச் செல்லவேண்டும் . கோவிலை அடுக்கடுக்காகக் கட்டியிருக்கிறார்கள் . ஒவ்வொரு அடுக்கிலும் பல அழகிய தெய்வ உருவங்கள். எல்லா தெய்வ உருவங்களையும் வணங்கிவிட்டு அவன் திருமுன் நிற்கிறோம் .

அந்தக் காலத்தில் இருந்ததை விட அதிக கூட்டம் இப்போது. எல்லாரும் சொல்வது போல மக்களுக்கு இறை நம்பிக்கை முன்பைவிட அதிகமாய் விட்டது தான் போலும். அம்மாவுடன் வரும்போதெல்லாம் இருக்கும் சிறிய கூட்டத்துடன் முண்டி மோதி வந்து தான் கந்தனைப் பார்ப்பது வழக்கம் . சுவாமியின் நேரெதிரே சுவற்றில் ஒரு பெரிய ஜன்னல் இருக்கும். அந்த ஜன்னலில் ஏறி நின்று கொண்டால் முருகனை எத்தனை நேரம் வேண்டுமானாலும் ஆசை தீரப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அம்மா என்னையும் தம்பியையும் அந்த ஜன்னலில் ஏற்றிவிட்டுவிடுவார்கள். இப்போது அந்த ஜன்னலில் ஒரு கம்பி தடுப்பு போட்டிருந்தார்கள்.

இல்லாவிட்டாலும் என்ன? அந்தக் காலம் போல் கூட்டத்தில் முண்டி மோதி இறைவனைப் பார்க்கும் பொறுமை இருக்கிறதா? சிறப்பு தரிசன அனுமதி சீட்டு வாங்கிக்கொண்டு நேராகக் குடும்பத்துடன் தெய்வயானை மணாளன் திருமுன்பு சென்று நின்றுவிட்டோம்.

சின்ன வயதில் முருகன் திருமுகத்தைப் பார்த்தது மட்டும் நினைவில் இருக்கிறது. அவன் பக்கத்தில் யார் யார் இருக்கிறார்கள், சுற்றுப்புறம் எப்படி இருக்கிறது என்றெல்லாம் பார்த்ததில்லை. ஆனால் இந்த முறை அதெல்லாம் கண்ணில் தென்பட்டது. மற்ற இடங்களைப் போல் நிற்காமல் இங்கே கார்த்திகேயன் ஒருகாலைத் தொங்கவிட்டுக்கொண்டும் மறு காலை மடக்கி வைத்துக்கொண்டும் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறான். திருமணக்கோலத்தில் இருப்பதால் கையில் ஒரு மலர்ச்செண்டு வைத்திருக்கிறான் . ஒரு பக்கத்தில் மணமகள் தெய்வயானையும் மலர்செண்டுடன் அமர்ந்திருக்கிறாள் . இன்னொரு பக்கம் அமர்ந்திருப்பது யார் என்பதில் கருத்து வேறுபாடு இருக்கிறது. சிலர் அது தெய்வயானையின் தந்தையான் இந்திரன் என்கிறார்கள். சிலர் வீணையை வைத்திருப்பதால் அது நாரதர் என்கிறார்கள்.

திருமணக் கோலத்தில் ஒரு சிம்மாசனத்தில் வீற்றிருப்பதால் முருகன் திருமுடியின் மேல் ஒரு வெண்கொற்றக் குடை இருக்கிறது. இரு பக்கமும் வானத்தில் சூரிய சந்திரர்கள் இருக்கிறார்கள் . இடப்பாதத்தில் தொடங்கி வலத்தோள் வரை முருகனின் வெற்றிவேலை சாத்திவைத்திருக்கிறார்கள்.

இங்கு வரும் பக்தர்கள் பல பேர் பாலாபிஷேகத்திற்கு பால் கொண்டு வருவார்கள். அம்மாவும் ஒவ்வொரு தடவையும் அபிஷேகத்திற்குப் பால் கொண்டு வந்தார்கள். அந்தப் பாலை முருகனுக்கு அபிஷேகம் செய்ய மாட்டார்கள். முருகன் கையில் சாத்தி வைத்திருக்கும் இந்த வேலுக்குத் தான் பாலாபிஷேகம் நடக்கும் . அந்த அபிஷேகப் பாலை அருந்துவதில் எனக்குக் கொள்ளை இஷ்டம். அபிஷேகத்திற்குப் பின் அந்தப் பால் அதிக இனிப்புடன் இருப்பதாய்த் தோன்றும். அந்த அபிஷேகப் பால் குடித்தால் நல்ல பேச்சுத் திறமையும் கூர்மையான அறிவும் கிடைக்கும் என்று அம்மா நிறைய தடவை சொல்லியிருக்கிறார்கள். இப்போதெல்லாம் அலுவலகத்தில் ஏதாவது சொல்லவேண்டிய நேரத்தில் சொல்ல முடியாமல் முழிப்பதைப் பார்த்தால் தேவையான அளவு அபிஷேகப் பாலைக் குடிக்கவில்லையோ என்று தோன்றுகிறது. அம்மா இருந்திருந்தால் கேட்டிருக்கலாம்.

இந்த ஆராய்ச்சியை எல்லாம் மனம் செய்து கொண்டு இருக்கும் போதே அர்ச்சகர் எங்களிடம் இருந்த அர்ச்சனைத் தட்டை வாங்கி எங்கள் பெயர் நட்சத்திரம் எல்லாம் கேட்டு அர்ச்சனை செய்ய ஆரம்பித்துவிட்டார். கற்பூர ஆரத்தி காட்டும் போது திடீரென்று ஒரு எண்ணம் மனதில் ஓடியது. 'முருகா. எங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு உன் பெயர் வைக்கிறோம்'. எனக்கே அந்த எண்ணம் மிக்க ஆச்சரியமாய் இருந்தது . இதுவரை குழந்தையைப் பற்றி நானும் என் மனைவியும் பேச ஆரம்பிக்கவில்லை. இரண்டு பேரும் வேலைக்குப் போவதால் கொஞ்ச நாள் சந்தோசமாக இருக்கலாம் என்று எண்ணியிருக்கிறோம். உறவினர்கள் கூட யாரும் குழந்தைப் பற்றிக் கேட்டதாய் நினைவில்லை. எப்படி இந்த எண்ணம் திடீரென்று வந்தது. சற்றுத் திகைப்பாகத் தான் இருந்தது.

யாரிடமும் அந்த எண்ணம் வந்தது என்பதை உடனே சொல்லவில்லை. முதலில் எப்படி அந்த எண்ணம் அந்த நேரத்தில் வந்தது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். பிறகு மற்றவர்களிடம் சொல்லிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

**********

2002 நடுவில்:

விடுமுறை முடிந்து அமெரிக்கா வந்த ஒரு ஐந்து மாதத்தில் நல்ல செய்தியைச் சொன்னார் துணைவியார். அப்போது என் முகத்தில் தவழ்ந்த சிரிப்பைக் கண்டு 'ஏன் சிரிக்கிறீங்க?' என்று கேட்டபிறகு திருப்பரங்குன்றத்தில் இறைவன் திருமுன்பு ஓடிய எண்ணத்தைப் பற்றிச் சொன்னேன். 'இந்த வருடம் நமக்குக் குழந்தை பிறக்கப் போவதால் தான் நம் குலதெய்வம் முன்னால் அந்த எண்ணம் வந்திருக்கிறது. நமக்குப் பிறக்கும் குழந்தைக்கு முருகன் பெயர் வைக்கவேண்டும்' என்று சொன்னேன். அவரும் மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டார்.

குழந்தைக்குப் பெயர் தேடும் படலம் கொஞ்ச நாளில் ஆரம்பித்தது. நம் நாட்டில் குழந்தை பிறந்த பின் அது ஆணா பெண்ணா என்று பார்த்தபின் பெயர் தேடிச் சூடினால் போதும். ஆனால் இங்கோ குழந்தை பிறந்த உடனேயே பிறப்புச் சான்றிதழுக்காகப் பெயரைச் சொல்ல வேண்டும். அதனால் பல பெயர்களைப் பற்றி விவாதித்து ஒரு ஆண் பெயரையும் ஒரு பெண் பெயரையும் முடிவு செய்தோம். ஆண் குழந்தை என்றால் 'ஷ்யாம் கார்த்திக்' என்றும் பெண் குழந்தை என்றால் 'தேஜஸ்வினி' என்றும் பெயர் வைக்க முடிவு செய்தோம். பெண்ணாயிருந்தாலும் நீங்கள் முருகன் முன் நினைத்தது போல் முருகன் பெயரைத் தான் வைக்கவேண்டும் என்று என் துணைவியார் சொல்லிக் கொண்டிருந்தார். நானோ, பெண்ணாயிருந்தால் எப்படி முருகன் பெயரை வைப்பது; சுஜாதா ஒரு முறை தேஜஸ்வினி என்ற தலைப்பில் ஒரு கதை எழுதியிருந்தார்; அந்தக் கதையைப் படித்ததிலிருந்து எனக்குப் பெண் குழந்தை பிறந்தால் அந்தப் பெயரைத் தான் வைக்க வேண்டும் என்று இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

**********

2003 ஆரம்பத்தில்:

பங்குனி உத்திரத் திருநாளில் எங்கள் மகள் பிறந்தாள். இனிமேல் நானும் அவளும் ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாடலாம் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நானும் பங்குனி உத்திரத்தில் தான் பிறந்தேன். குழந்தை பெற்ற அசதியில் என் மனைவி அரைத்தூக்கத்தில் இருக்கும் போது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. குழந்தைக்குப் பெயர் முடிவு செய்துவிட்டீர்களா என்று கேட்டார்கள். நானும் ஆமாம் , முடிவு செய்துவிட்டோம், தேஜஸ்வினி என்று ஒவ்வொரு எழுத்தாக பெயரைச் சொன்னேன். குழந்தை பிறந்த பின் பெண் குழந்தையாய் இருந்தாலும் என்னுடன் பேசி முருகன் பெயர் வைத்துவிடலாம் என்று என் மனைவியார் எண்ணியிருந்திருக்கிறார் . ஆனால் அவர் அரைத்தூக்கத்தில் இருந்ததால் நான் தேஜஸ்வினி என்றப் பெயரைச் சொல்லும் போது அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்று பின்னர் சொன்னார். நான் பரவாயில்லை; இப்போது பெயர் வைத்துவிட்டோம்; இனிமேல் மாற்றமுடியாது என்று அவரை சமாதானப் படுத்திவிட்டேன்.

**********

2003 முடிவில்:

இதோ குழந்தை பிறந்த எட்டு மாதத்தில் மதுரைக்கு வந்திருக்கிறோம் . குழந்தைக்கு முடியிறக்க குடும்பத்தோடும் உறவினர்களோடும் திருப்பரங்குன்றம் வந்திருக்கிறோம் . முடியிறக்குவதற்கு முன் அர்ச்சனை செய்யவேண்டும் என்று பெரியவர்கள் சொன்னதால் அர்ச்சனை செய்வதற்கு நானும் என் மனைவியும் குழந்தையோடு இறைவன் திருமுன்பு நிற்கிறோம் . ஒரு விதமான குற்ற உணர்வு மனதை பிழிந்துக் கொண்டிருக்கிறது. முருகன் கட்டளையை மீறிவிட்டோமோ என்று மனம் அலைபாய்கிறது . எப்போதும் நிமிர்ந்து நேர்கொண்ட பார்வையுடன் அவன் அழகைப் பருகிய கண்கள் இப்போது வேறு எங்கெங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறதே ஒழிய அவனை நேரடியாகப் பார்க்கக் கூசுகிறது.

அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொள்ள அர்ச்சகர் வந்து நின்றார். எங்கள் இருவரின் பெயர் நட்சத்திரம் கேட்டபின் குழந்தையின் பெயர் நட்சத்திரம் கேட்டார். 'உத்திரம் , தேஜஸ்வினி' என்று நான் சொன்னவுடன் அவர் சொன்னது ' தேஜஸ்வினியா. நல்ல பேராச்சே. சுப்ரமண்ய சஹஸ்ரநாமத்தில் ஓம் தேஜஸ்வினே நம:ன்னு வருது. இன்னைக்கு காலையில தான் அதை கவனிச்சு ரொம்ப நல்ல பேராச்சேன்னு நினைச்சேன். நீங்க குழந்தைக்கு முருகன் பேரே வச்சிருக்கேள்' என்று சொல்லிவிட்டு அர்ச்சனை செய்யச் சென்றுவிட்டார். கற்பூர ஆரத்தி காட்டும் போது அங்கு அமர்ந்திருக்கும் தேஜஸ்வியும் என் கையில் இருந்த தேஜஸ்வினியும் ஒரே நேரத்தில் சிரித்தார்கள்.

Sunday, January 22, 2006

123: *நட்சத்திரம்* - என் வலைப்பூக்கள்: ஓர் அறிமுகம்

பெரும்பாலானோர் ஒன்றோ இரண்டோ வலைப்பூக்களைத் தான் வைத்திருக்கிறார்கள். நான் தான் தோன்றும் போதெல்லாம் ஒரு புதிய வலைப்பூவைத் தொடங்கி எழுத ஆரம்பித்துவிடுகிறேன். அதனால் என் எல்லா வலைப்பூக்களைப் பற்றியும் ஒரு சிறிய அறிமுகம் கொடுக்கலாம் என்று நினைத்தேன்.

அபிராமி பட்டர்: அபிராமி அந்தாதியின் 100 பாடல்களுக்கு சொற்பொருள் விளக்கம் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இதுவரை 15 பாடல்களுக்குப் பொருள் சொல்ல முடிந்திருக்கிறது.

விஷ்ணு சித்தன்: விஷ்ணு சித்தராகிய பெரியாழ்வாரின் பாசுரங்களுக்குப் சொற்பொருள் விளக்கம் சொல்லத் தொடங்கியது இந்த வலைப்பூ. விஷ்ணு சித்தரின் கதையைச் சொல்லிமுடித்து இருக்கிறேன். விரைவில் பாசுரங்களைப் பற்றி எழுதுவேன்.

கூடல்: இந்த வலைப்பூ ஒரு தனிப்பொருளைப் பற்றி இல்லாமல் தோன்றுவதை எல்லாம் எழுதுவதற்காகத் தொடங்கப் பட்டது. கதை, கவிதை, கட்டுரை என்று எல்லாமே இதில் வரும். வருகிறது.

மதுரையின் ஜோதி: மதுரையில் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்து சௌராஷ்ட்ர மொழியிலும் தமிழிலும் பல பக்திப் பாடல்கள் பாடிய மகான் ச்ரி நடன கோபால நாயகி சுவாமிகள். அவரது பாடல்களுக்குச் சொற்பொருள் விளக்கங்களை இந்த வலைப்பூவில் காணலாம்.

பஜ கோவிந்தம்: ஆதி சங்கரரின் பஜ கோவிந்தம் என்னும் வடமொழி நூலில் உள்ளப் பாடல்களுக்கு இங்கு சொற்பொருள் விளக்கம் எழுதுகிறேன்.

திருவாசகம் ஒரடொரியொ: இசைஞானி இளையராஜா இசையமைத்தத் திருவாசகப் பாடல்களுக்குச் சொல்பொருள் விளக்கம் இங்கே எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

பாட்டுக்கொரு புலவன் பாரதி: மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல்களை இங்கே கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆங்காங்கே தேவைப்பட்டால் விளக்கமும் கொடுக்கிறேன்.

கோதை தமிழ்: ஆண்டாளின் திருப்பாவைக்கு இங்கு சொற்பொருள் தரப்படும். தற்போது கோதையின் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

இந்தியக் கனவு 2020: நண்பர் சிவாவின் இந்தப் பதிவின் மூலம் இந்தியக் கனவு 2020 என்ற சிறு இயக்கத்தைப் பற்றிப் படித்திருப்பீர்கள். இந்த வலைப்பூவில் அந்த இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றியச் செய்திகள் வரும்.

சகலகலாவல்லி: குமரகுருபரர் பாடிய சகலகலாவல்லி மாலையின் பாடல்களுக்குச் சொற்பொருள் விளக்கத்தை இங்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன்.

இது போக இன்னும் ஒரு நான்கு ஆங்கில வலைப்பூக்களும் இருக்கின்றன. வலைப்பதிக்க தொடங்கிய போது அவற்றிலும் சில இடுகைகள் இட்டேன். அண்மையில் அவ்வளவாய் அவற்றில் எழுதவில்லை. அந்த ஆங்கில வலைப்பூக்களைப் பார்க்க இங்கே பாருங்கள்.

121: *நட்சத்திரம்* - வாழ்வினிலே ஓர் நாள் திருநாள்

தலைப்பில் சொன்ன மாதிரி தான் தோன்றியது அந்த மின்னஞ்சலைப் பார்த்த போது. எனக்குத் தெரிந்த, நான் தொடர்ந்து படிக்கும் வலைப்பதிவர்கள் எல்லாம் தமிழ்மண விண்மீன்களாக ஆகி (ஆக்கப்பட்டு?!!) பெரும்புகழ் (?!!) எய்துவதைப் பார்த்தப் போது நமக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்ற ஆசை வந்தது. ஒரு வேளை பெரும்பாலும் ஆன்மிகம் பற்றியே எழுதுவதால் மதியின் பார்வையில் படாமல் போய்விடுவோமோ என்ற எண்ணமும் அவ்வப்போது வந்தது. அவர் நம் வலைப்பதிவுகளைப் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை; நாம் போய் பல பேருக்குப் பின்னூட்டம் இட்டால் நம் பெயர் அவர் பார்வையில் படலாம் அல்லவா? அதனால் எப்போதும் படித்துவிட்டு ஆனால் பின்னூட்டம் இடாமல் வரும் வலைப்பதிவுகளிலும் பின்னூட்டம் இடலாம் என்று முடிந்த வரை பின்னூட்டமும் இடத் தொடங்கினேன். அதெல்லாம் வீண் முயற்சி என்பது மதி அவர்களின் 'குமரன். தமிழ்மண நட்சத்திரமாய் இருக்கச் சம்மதமா?' என்று கேட்டு வந்த மின்னஞ்சலைப் பார்த்த போது தெரிந்தது.

அந்த மின்னஞ்சலைப் பார்த்த போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இதுக்காகத் தானே காத்திருந்தேன் என்று உடனே சரி என்று பதில் அனுப்பினேன். பின்னர் சில தடவை மின்னஞ்சலில் பேசிக்கொண்டோம். அப்போது தான் தெரிந்தது அவர் என் பதிவுகளையும் படித்திருக்கிறார் என்பது. பின்னூட்டம் இடாததால் எனக்கு அவர் படிக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை. என் பதிவுகளையே அவர் படித்திருப்பதால் இங்கு தமிழ் மணத்தில் வரும் எல்லாப் பதிவுகளையும் அவர் படித்திருப்பார்; படித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது. அபாரப் பொறுமை அவருக்கு. அதனால் எப்போது நமக்கு இந்த வாய்ப்பு கிட்டும் என்று காத்துக் கொண்டிருக்கும் வலைப் பதிவு நண்பர்களே! கவலை வேண்டாம். சீக்கிரம் இந்த வாய்ப்பு உங்களுக்கும் கிட்டும்.

தமிழ்மணம் பகலவன் போல என்று நான் சொல்வதுண்டு. பகலவன் எந்தச் செயலையும் இந்த உலகில் செய்யாவிட்டாலும் பகலவன் தான் எல்லாச் செயல்கள் நடப்பதற்கும் தூண்டுதல். இவ்வுலகில் வேண்டிய அளவு வலிமையை (எனர்ஜி) கதிரவன் தான் தன் கதிர்க் கரங்களால் வழங்குகிறான். அது போல் என்னையொத்த வலைப் பதிவர்களுக்கு தேவையான எனர்ஜியை, உந்துதலை, தூண்டுதலைத் தருவது தமிழ்மணம் தான். உண்மையைச் சொன்னால் தமிழ் மணம் இல்லாவிட்டால் நான் வலைப் பதியத் துவங்கியிருப்பேனா? நான்கு மாதங்களில் இவ்வளவு பதிவுகள் பதித்திருப்பேனா? என்பதே சந்தேகம். அதனால் வாய்ப்பு கிடைத்தப் போதெல்லாம் தமிழ்மணத்திற்கும் அதற்கு பின்பலமாக இருந்து வேண்டிய எல்லா வேலைகளைச் செய்யும் தமிழன்பர்களுக்கும் மீண்டும் மீண்டும் என் நன்றிகளைச் சொல்லியிருக்கிறேன். இந்த நட்சத்திர வாரத் தொடக்கத்திலும் மீண்டும் ஒரு முறை என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விண்மீன் வாரத்தின் முதல் பதிவில் என்னைப் பற்றிய அறிமுகம் செய்துகொள்ளவேண்டும் என்று சொன்னார்கள். ஏற்கனவே என்னைப் பற்றி பலமுறை என் பதிவுகளில் சொல்லியிருந்தாலும் முதன்முதலாக என் பதிவைப் பார்க்கும் நண்பர்கள் யாராவது இருக்கலாம் என்பதால் சுருக்கமாக என்னைப் பற்றிச் சொல்லிக் கொள்கிறேன்.

பிறந்தது சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த, சங்கம் இல்லாத நேரத்திலும் தமிழன்பர்கள் நிறைந்த மதுரை மாநகரில். படித்து முடித்தது முதுநிலைப் பொறியியல். வேலை செய்வது கணினி, மென்பொருள் சார்ந்த நிறுவனத்தில். கடந்த ஏழு வருடமாக வாழ்வது அமெரிக்காவில் மினசோட்டா மாநிலத்தில். திருமணம் ஆகி ஒரு மூன்று வயது பெண் குழந்தையும் உண்டு.

சிறு வயதிலிருந்தே தமிழிலும் ஆன்மிகத்திலும் ஆர்வம். பழைய நூல்களைத் தேடிப் படிப்பேன். பலவிதமான கருத்துகள் உடைய நூல்களைப் படித்திருக்கிறேன். களவும் கற்று மற என்று பெரியவர்கள் சொன்ன படி எதிர் மறையான கருத்துகள் உடைய நூல்கள் சிலவற்றையும் படித்திருக்கிறேன்.

எழுதத் தொடங்கிய போது எல்லோரையும் போல் நானும் கவிதை தான் எழுதத் தொடங்கினேன். முதலில் எழுதத் தொடங்கியது முழுவதும் மரபுக்கவிதைகள் போல் தோன்றும் கவிதைகளே. மரபுக்கவிதைகள் என்று சொல்லாமல் அவை போல் தோன்றும் என்று ஏன் சொல்கிறேன் என்றால் அவையெல்லாம் இலக்கணப்படி அமைந்ததா இல்லையா என்று இது வரை தெரியாது.

மற்றவர்களுக்காக (பின்னே நானே எழுதி நான் மட்டும் படித்துக் கொண்டிருந்தால் எப்படி?) புதுக் கவிதை என்று எழுதத் தொடங்கியது கல்லூரிக்கு வந்த போது. முதன்முதலாக எழுதியப் புதுக் கவிதை இப்போதும் நினைவில் இருக்கிறது.

கடவுளும் அவள் இடையும் ஒன்று
சிலர் உண்டென்பர்
சிலர் இல்லையென்பர்

அதைப் படித்து ரசித்தவர்களை விட கடவுளை அவள் இடையுடன் ஒப்பிட்டு கடவுளைக் கேவலப்படுத்திவிட்டாய் என்று சண்டைக்கு வந்தவர்கள் தான் அதிகம்.

அதன் பின் கல்லூரியில் (கல்லூரிகளில்) படித்தக் காலமெல்லாம் கதை, கட்டுரை, கவிதை என்று எழுதித் தள்ளுவதிலேயே நேரமெல்லாம் சென்றது. யாராவது படிக்கிறார்களா என்று கவலைப் பட்டது கிடையாது அந்தக் காலத்தில். எழுதுவதற்கு வேறு வகையான ஊக்கங்கள் கிடைத்தன; வாசகர்கள் இருக்கிறார்களா என்று தேடத் தேவையில்லாததாய் இருந்தது. இளநிலை பொறியியல் படித்த கல்லூரியில் கடைசி ஆண்டில் நடந்த கல்லூரி ஆண்டு விழாவில் கவிதைப் போட்டிக்கு ஒரே நடுவராய் என்னை நண்பர்கள் தேர்ந்தெடுத்த போது ஆஹா நம் கவிதைகளை இவர்களும் படித்திருப்பார்கள் போலிருக்கிறதே; அதனால் தான் நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று ஒரே மகிழ்ச்சியாக இருந்தது. அதற்குப் பின் தான் அது சர்க்கரை ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்னும் கதை என்பதும், அவர்கள் என் கவிதைகளைப் படிக்கவில்லை; மற்றவர்கள் 'இறுதியாண்டில் படிக்கும் கொஞ்சாமாவது கவிதை தெரிந்தவன் இவன் தான்' என்று சுட்டிக்காட்டியதால் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்பதும் தெரிந்தது தனிக் கதை.

வேலை பார்க்கத் தொடங்கிய பின் எழுதுவது குறைந்து பேசுவது அதிகம் ஆனது. பல இடங்களில் ஆன்மிகத் தலைப்புகளில் பேச வாய்ப்புகள் கிடைத்தன. அமெரிக்கா வந்த பின் மீண்டும் எழுதத் தொடங்கினேன். எழுதியவற்றை மின்னஞ்சலில் நண்பர்களுக்கு அனுப்புவேன். சில நேரங்களில் 'நன்றாய் இருக்கிறது' என்று மட்டும் சொல்லி பதில் வரும். அதனால் நிஜமாகவே யாராவது படிக்கிறார்களா என்ற சந்தேகம் வந்தது. இந்த வயதில் யாராவது படித்தால் எழுதலாம்; இல்லையேல் எழுதுவது வீண் என்ற எண்ணம் வந்தது. அதனால் அதிகம் எழுதவில்லை. அவ்வப்போது ஏதாவது எழுதுவது தான்.

இப்படியே சென்று கொண்டிருந்த போது இசைஞானி இளையராஜா திருவாசகத்தை ஓரடோரியோவாக இசைத்து இசைத் தட்டை வெளியிட்டார். நண்பர் சிவா என் குழுவில் வேலைப் பார்த்தவர் என்ற வகையில் மட்டுமே அதுவரை எனக்குத் தெரியும். அவர் இளையராஜாவின் இசைக்கு அடிமை என்பதால் திருவாசக இசைத் தட்டை விற்றுக் கொடுப்பதில் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்து கொண்டிருந்தார். அவரிடமிருந்து எனக்கு ஒரு இசைத் தட்டு கிடைத்தது. அப்போது நான் இதில் உள்ளப் பாடல்களுக்கு எல்லாம் பொருள் எழுதுகிறேன்; நீங்கள் படிப்பீர்களா என்று கேட்டேன். ஒருத்தர் தொடர்ந்து படித்தாலும் போதும்; நான் எழுதுகிறேன் என்ற நிலைமையில் தான் அன்று இருந்தேன். அவர் சரி என்றார். ஒரு நாளுக்கு ஒரு செய்யுள் என்று பொருள் எழுதி மின்னஞ்சலில் அனுப்பத் தொடங்கினேன். முதல் பாடல் முடிந்ததும் அவர் நான் ஆங்கிலத்தில் (தங்கிலீஷ்) எழுதியவற்றைத் தமிழில் எழுதி அவர் வலைப்பதிவில் போட்டார். அப்போது தான் தன் வலைப் பதிவையும் தமிழ் மணத்தையும் எனக்கு அறிமுகப் படுத்தினார். வந்ததையா நமக்கும் வலைப் பதிக்க ஆசை. தொடங்கினேன். எழுதிக்கொண்டு இருக்கிறேன். தொடர்ந்து ஆதரவு தாரீர். நன்றிகள்.

**********

இந்தப் பதிவை எழுதி முடித்தப் பிறகு, தமிழ்மணத்தின் 'நட்சத்திரப் பதிவு' பக்கத்தில் போடுவதற்காக ஒரு சிறு அறிமுகம் வேண்டும் என்று மதி சொல்லிவிட்டார். அதனால் அந்தச் சிறு அறிமுகத்தைக் கவிதை வடிவில் எழுதித் தந்தேன். அந்தக் கவிதையை அங்கு பாருங்கள்.

Monday, January 16, 2006

118: தினமலருக்கு நன்றி!!!

ஆமாங்க. அதே தான். நம்ம வலைப்பூ பற்றி தினமலரில் வந்திருக்கு. நான் 50வது பதிவு போட்ட நேரத்தில் 'மதுரையின் ஜோதி' என்ற தலைப்பில் இருக்கும் என் வலைப்பூ பற்றி தினமலரில் செய்தி வந்தது. இப்போது 'இந்தியக் கனவு 2020' என்ற தலைப்பில் இருக்கும் வலைப்பூ பற்றி தினமலர் செய்தி வெளியிட்டிருக்கிறது.



இந்த 'இந்தியக் கனவு 2020' என்னும் வலைப்பூ அதே பெயரில் தற்போது இயங்கிவரும் ஒரு சிறு இயக்கத்தைப் பற்றிய செய்திகளை வெளியிட தொடங்கப் பட்டது. அந்த இயக்கம் தொடங்கி இன்றோடு (ஜனவரி 16) ஒரு வருடம் நிறைவு பெறுகிறது. தற்செயலாக தினமலர் இந்த வலைப்பூவைப் பற்றி செய்தி வெளியிட்டுள்ளது அந்த வருட நிறைவை வாழ்த்துவது போல் இருக்கிறது. அதனால் மகிழ்ச்சி இரு மடங்கானது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று எண்ணும் நம் எண்ணம் இதனால் வலுவடைகிறது. என் செயலாவது யாதொன்றுமில்லை இனித் தெய்வமே; நின் செயலே என்று உணர்ந்தோம்.

இந்தத் தகவலைச் சொல்லிய மாயவரத்தான் அவர்களுக்கும் தி.ரா.ச. அவர்களுக்கும் நன்றிகள்.

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திருநாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!

Sunday, January 15, 2006

116: குமரிக்கண்டம் - மேல் விவரம்?

குமரிக்கண்டம், கபாடபுரம், பஃறுளி ஆறு, குமரி ஆறு, ஆதி மதுரை என்பவை பற்றி மற்றவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவற்றைப் பற்றிச் சிறிது படித்தும் இருக்கிறேன். 'பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள' என்னும் சிலப்பதிகார வரிகளையும் படித்திருக்கிறேன். ஆனால் இதைப் பற்றிய அகழ்வாராய்ச்சி முடிவுகள், இலக்கிய ஆதாரங்கள், மொழியாராய்ச்சி மற்றும் பிற அறிவியல் இயலாரின் ஆராய்ச்சி முடிவுகள் இப்படி ஏதாவது படிக்க வேண்டும் என்று இணையத்தில் தேடிப் பார்த்தேன். அவ்வளவாய் ஒன்றும் கிடைக்கவில்லை. விவரம் தெரிந்தவர்கள் கொஞ்சம் சுட்டிகளையோ, புத்தகங்களைப் பற்றிய விவரங்களையோ கொடுத்து உதவுங்கள். நன்றி.

Friday, January 13, 2006

113: பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!!!

இன்று பொங்கல் திருநாள். பழந்தமிழர் தங்கள் புது வருடத்தை இன்று தான் தொடங்கினர் என்று படித்திருக்கிறேன். அதனால் எல்லாருக்கும் பொங்கல் வாழ்த்துகளுடன் புத்தாண்டு வாழ்த்துகளும்.

பூமிக்குத் தென் திசையில் பகலவன் பயணிக்கும் ஆறு மாதங்களும் (ஆடி முதல் மார்கழி வரை) தென் வழி (தக்ஷிணாயனம்) என்பர். கதிரவன் பூமிக்கு வட திசையில் பயனிக்கத் தொடங்கும் வட வழியின் (உத்திராயனம்) முதல் நாள் இன்று. வட வழி ஆறு மாதங்களும் (தை முதல் ஆனி வரை) புனிதமான மாதங்களாகச் சொல்லுவர். அதில் முதல் நாட்களை நன்றி சொல்லும் நாட்களாக நம் முன்னோர் வைத்திருக்கின்றனர். கதிர்கள் நன்கு முற்றி வளர்வதற்கு ஒளிவீசி அருள் செய்யும் கதிரவனை நன்றி கூறி வணங்குவதாகப் பொங்கல் திருநாள் முதல் நாளில் கொண்டாடப் படுகிறது. உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி சொல்லி வணங்குவதாக மாட்டு பொங்கல் இரண்டாம் நாளில் வருகிறது. உலகப் பொதுமறை கொடுத்து உதவிய ஐயன் வள்ளுவனை நினைத்து வணங்குவதாக மூன்றாம் நாள் வருகிறது. எப்போதும் நம்முடன் இருந்து உதவும் நம் உற்றார்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி சொல்லும் விதமாகக் காணும் பொங்கல் வருகிறது.

எல்லா விதங்களிலும் மிக சிறந்த விழாவாக பொங்கல் திருநாள் உள்ளது. அதனை எல்லோரும் மகிழ்ச்சியாக எந்த விதமான பாகுபாடும் இன்றிக் கொண்டாடி மகிழ்வோம்.

பொங்கலோ பொங்கல் என்னும் புண்ணிய கீதம் இங்கு
எங்குமே எழுகின்றது; ஏழையர் இன்னல் தீர
மங்கலம் எங்கும் தங்க மானிடர் அன்பு ஓங்க
பொங்கலைப் போற்றுகின்றோம்! புதியதோர் ஆண்டே வருக!

பொங்கலோ பொங்கல்!!!

Monday, January 09, 2006

108: திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே!

உயர்வற உயர்நலம் உடையவனும் அயர்வறும் அமரர்கள் அதிபதியும் ஆன எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் திருமறு மார்பனைப் பாடிப் பரவிய திவ்யதேசங்கள் 108. அவற்றில் முதல் திவ்ய தேசம் கங்கையில் புனிதமான காவிரியின் நடுவில் உள்ள திருவரங்கம். பெரிய பிராட்டியாரோடு பெரிய பெருமாள் நித்ய வாசம் செய்யும் பூலோக வைகுண்டம்.

வைகுண்ட ஏகாதசியாகிய இன்று பெரிய பெருமாள் திருவரங்க நகரப்பன் பரமபத வாசல் வழி வந்து எல்லாருக்கும் திவ்ய தரிசனம் தருகின்றான். அவன் திருமுன்பு அவனாலேயே 'நம் சடகோபன்' என்று கொண்டாடப் பட்ட நம்மாழ்வாரின் பாசுரங்களைப் பாடி பரமானந்தம் எய்துவோம்.

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ணநீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்று கைகூப்பும்
தாமரைக் கண் என்றே தளரும்
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்
இருநிலம் கைதுழாவிருக்கும்
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்
இவள்திறத்து என் செய்கின்றாயே

சிவந்த கயல்மீன்கள் பாய்ந்து விளையாடும் நீர்வளம் மிக்கத் திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள பெரிய பெருமாளே! இந்தப் பெண் இரவும் பகலும் தூக்கம் என்பதே அறியாமல் இருக்கிறாள். அவள் கண்களில் இருந்து விழும் கண்ணீர் துடைக்கும் படியாய் இல்லை; கைகளால் இறைக்கும் படியாய் இருக்கிறது. உன் திவ்ய ஆயுதங்களை எண்ணி 'சங்கு, சக்கரம்' என்று சொல்லிக் கை கூப்புகிறாள். உன் அழகிய தாமரை போன்ற கண்களை நினைந்து அந்த அழகில் மயங்கித் தளர்ந்து போகிறாள். 'உன்னைப் பிரிந்து எப்படி நான் உயிர் வாழ்வேன்' என்று மயங்குகிறாள். வேறு வழி தெரியாமல் பூமியைக் கைகளால் துழாவித் துன்புற்று ஒன்றும் செய்ய இயலாமல் வருந்துகிறாள். நீர் இந்தப் பெண் விஷயமாக என்ன செய்யப் போகின்றீர்?

என் செய்கின்றாய் என் தாமரைக்கண்ணா
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என்செய்கேன் எறிநீர்த் திருவரங்கத்தாய்
என்னும் வெவ்வுயிர்த்துயிர்த்து உருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்
முகில்வண்ணா தகுவதோ என்னும்
முன்செய்திவ்வுலகம் உண்டுமிழ்ந்தளந்தாய்
என்கொலோ முடிகின்றது இவட்கே

முன்னொரு காலத்தில் இந்த உலகங்களை எல்லாம் படைத்துப் பின் பிரளயக் காலத்தில் அவற்றை எல்லாம் உண்டு தன் திருவயிற்றில் வைத்துக் காத்து பின் வெளிக் கொணர்ந்து நிலைப்படச் செய்த நீ பின் திரிவிக்கிரமனாய் அந்த உலகங்களை அளக்கவும் செய்தாய்! அப்படிப் பட்ட எல்லா வல்லமையும் பெற்றவனே! இந்தப் பெண் 'தாமரைக் கண்ணா. நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?' என்று புலம்புகிறாள். கண்ணீர் மல்க இருக்கிறாள். 'அலைகள் வீசும் காவிரியை உடைய திருவரங்க நகரானே! நான் என்ன செய்வேன்?' என்கிறாள். உம்மை எண்ணி எண்ணி பெருமூச்சுகள் விட்டுக் கொண்டே உருகி நிற்கிறாள். 'நான் முன் செய்த தீய வினைகள் தான் இன்று என்னை வாட்டுகின்றன. ஏ தீய வினைகளே. தடையாய் முன்னே நில்லாதீர்கள்' என்கிறாள். 'கருணை மேகம் போல் நிறம் கொண்டவனே. இது உனக்குத் தகுமா?' என்கிறாள். நீர் இவளுக்கு என்ன முடிவு வைத்திருக்கிறீர்?

வட்கிலள் இறையும் மணிவண்ணா என்னும்
வானமே நோக்கும் மையாக்கும்
உட்குடை அசுரர் உயிரெல்லாம் உண்ட
ஒருவனே என்னும் உள்ளுருகும்
கட்கிலீ உன்னைக் காணுமாறருளாய்
காகுத்தா கண்ணனே என்னும்
திட்கொடி மதில்சூழ் திருவரங்கத்தாய்
இவள் திறத்து என்செய்திட்டாயே

இவள் கொஞ்சம் கூட வெட்கம் என்பதே இல்லாமல் எங்கும் எப்போதும் உன் பெயர்களைச் சொல்லித் திரிகிறாள். கரிய மாணிக்கம் போன்ற நிறத்தானே என்கிறாள். நீ வருவாய் என்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். பின் நீ வராததால் மயங்கி நிற்கிறாள். 'உடலின் உள்ளே, உயிரின் உள்ளே நின்று நம்மை எல்லாம் கெடுக்கும் அசுரர் கூட்டங்களை எல்லாம் அழித்து நிற்கும் ஒருவனே' என்கிறாள். அந்தக் கருணையை எண்ணி உள்ளம் உருகுகிறாள். 'கண்களால் காண்பதற்கு அரியானே! உன்னை நான் கண்டு அனுபவிப்பதற்கு நீயே அருள வேண்டும். காகுத்தா. கண்ணனே' என்கிறாள். கொடிகள் ஏற்றப் பட்ட திடமான மதில்களால் சூழப்பட்டிருக்கும் திருவரங்க நகரானே! இவள் இப்படி உன் மேல் பைத்தியமாய் அலையும் படி நீ என்ன தான் செய்தாய்?

இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும்
எழுந்துலாய் மயங்கும் கைகூப்பும்
கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும்
கடல்வண்ணா கடியை காண் என்னும்
வட்டவாய் நேமி வலங்கையா என்னும்
வந்திடாய் என்றென்றே மயங்கும்
சிட்டனே செழுநீர்த் திருவரங்கத்தாய்
இவள் திறத்து என் சிந்தித்தாயே

சில நேரங்களில் எந்த வித உணர்வும் இன்றி தன் கைகளும் கால்களும் இட்டது இட்டபடி இவள் கிடக்கிறாள். சில நேரங்களில் எழுந்து உலாவி மயங்கி நிற்கிறாள்; கைகளைக் கூப்புகிறாள். 'காதலில் விழுவது மிகுந்த துன்பத்தைக் கொடுக்கிறது' என்று மூர்ச்சை அடைகிறாள். 'கடல் நிறத்தானே! நீ மிகுந்த கொடுமைக்காரன்' என்கிறாள். 'வட்டமான வடிவத்தை உடைய சக்கரத்தை வலக்கையில் ஏந்திய பெருமானே! எனக்கு அருள வந்திடாய்' என்று சொல்லிச் சொல்லி மயங்குகிறாள். இப்படி இவளை துன்புறுத்தும் நீயோ நல்லவன் (சிட்டன்) போல் தூங்கிக் கொண்டிருக்கிறாய். நீர் வளம் செழித்து இருக்கும் திருவரங்க நகரானே! இவளைப் பற்றி நீர் என்ன எண்ணம் கொண்டிருக்கிறீர்?

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கைகூப்பும்
திருவரங்கத்துள்ளாய் என்னும்
வந்திக்கும் ஆங்கே மழைக்கண்ணீர் மல்க
வந்திடாய் என்றென்றே மயங்கும்
அந்திப் போது அவுணன் உடலிடந்தானே
அலைகடல் கடைந்த ஆரமுதே
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த
தையலை மையல் செய்தானே

உன்னையே இவள் சிந்தித்துக் கொண்டிருக்கிறாள். சில நேரம் நீ வருவாயோ இல்லையோ என்று திகைத்து நிற்கிறாள். பின் நிச்சயம் நீ வருவாய் என்று தேறி கைகளைக் கூப்புகிறாள். 'திருவரங்கத்தில் இருப்பவனே' என்று உன்னை அழைக்கிறாள். தலையால் வணங்குகிறாள். மழையைப் போல் கண்களில் நீர் மல்க 'வந்திட மாட்டாயா' என்று மயங்குகிறாள். பகலும் இரவும் சந்திக்கும் அந்திப் போதில் அவுணனாகிய இரணியனின் உடலை நரசிங்கமாய் வந்துப் பிளந்தவனே! அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்த ஆரா அமுதனே! உன்னைக் கண்டு உன் திருவடிகளையே அடைய திண்ணமான எண்ணம் கொண்டிருக்கும் இந்தப் பெண்ணை மயக்குகிறாயே? இது உனக்குத் தகுமோ?

மையல் செய்தென்னை மனம் கவர்ந்தானே
என்னும் மாமாயனே என்னும்
செய்யவாய் மணியே என்னும் தண் புனல் சூழ்
திருவரங்கத்துள்ளாய் என்னும்
வெய்யவாள் தண்டு சங்கு சக்கரம் வில்
ஏந்தும் விண்ணோர் முதல் என்னும்
பைகொள் பாம்பணையாய் இவள் திறத்தருளாய்
பாவியேன் செயற்பாலதுவே.

'என்னை மயக்கி என் மனதைக் கொள்ளை கொண்டவனே. மாமாயனே' என்கிறாள். 'செம்மையான சிவந்த அழகிய உதடுகள் உடைய மணியே' என்கிறாள். 'குளிர்ந்த தண்ணீரால் சூழப்பட்டத் திருவரங்கத்தில் உள்ளவனே' என்கிறாள். 'வெம்மையுடைய வாள், கதை, சங்கு, சக்கரம், வில் என்னும் திவ்ய ஆயுதங்களை ஏந்தும் விண்ணவர்களின் தலைவனே' என்கிறாள். படம் விரித்து இருக்கும் ஆதி சேடனை படுக்கையாய் கொண்டவனே! இவள் மீது உன் கருணையை வைப்பாய். பாவியேனாகிய நான் செய்யக் கூடியது அது மட்டுமே தான் (வேண்டுவது மட்டுமே தான்).

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்
பற்றிலார் பற்ற நின்றானே
காலசக்கரத்தாய் கடலிடங் கொண்ட
கடல்வண்ணா கண்ணனே என்னும்
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய்
என்னும் என் தீர்த்தனே என்னும்
கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும்
என்னுடைக் கோமளக் கொழுந்தே

'உலகத்தைக் காப்பதற்காக (பாலிப்பதற்காக) இன்பத்தையும் துன்பத்தையும் படைத்தவனே. உலகப் பற்றில்லாதவர்களுக்கு ஒரே பற்றாய் நிற்பவனே. காலம் என்னும் சக்கர வடிவாய் இருப்பவனே. பாற்கடலில் பள்ளி கொண்ட கடல்வண்ணனே. கண்ணனே' என்கிறாள். 'அழகிய மீன்கள் துள்ளி விளையாடும் நீரால் சூழப்பட்ட திருவரங்க நகரானே' என்கிறாள். 'தூய்மைகளுக்கெல்லாம் தூய்மையான என் தீர்த்தனே' என்கிறாள். அழகு பொருந்திய கண்களில் கண்ணீர் மழைபோல் வழிய நிற்கும் என் மென்மையான கொழுந்து போன்ற பெண் உருகித் துடிக்கிறாள்.

கொழுந்து வானவர்கட்கு என்னும் குன்றேந்திக்
கோநிரை காத்தவன் என்னும்
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்
அஞ்சன வண்ணனே என்னும்
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்
எங்ஙனே நோக்குகேன் என்னும்
செழுந்தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய்
என் செய்கேன் என் திருமகட்கே

'வானில் வாழ் தேவர்களுக்கு எல்லாம் கொழுந்து போன்றவனே' என்கிறாள். 'கோவர்த்தன மலையைத் தூக்கி பசுக்கூட்டத்தைக் காத்தவனே' என்கிறாள். உன்னை எண்ணி அழுகின்றாள். தொழுகின்றாள். உயிர் வெந்து போகும் படி பெருமூச்சு விடுகின்றாள். 'கரு நிற மை போன்றவனே' என்கிறாள். எழுந்து நின்று மேலே நோக்கி கண் கொட்டாமல் இருக்கிறாள். 'உன்னை நான் எப்படிப் பார்ப்பேன்' என்கிறாள். அகன்று ஆழமாகத் தண்ணீர் சூழ்ந்திருக்கும் திருவரங்கத்தாய்! எனது திருமகளுக்காக நான் இன்னும் என்ன செய்வது?

என் திருமகள் சேர் மார்பனே என்னும்
என்னுடை ஆவியே என்னும்
நின் திருஎயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே என்னும்
அன்றெரு தேழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே என்னும்
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே
தெளிகிலேன் முடிவிவள் தனக்கே

'நான் உன்னை அடைவதற்கு உறுதுணையாய் இருக்கும் என் திருமகள் வாழும் மார்பினை உடையவனே' என்கிறாள். 'என் உயிருக்கும் உயிரானவனே' என்கிறாள். 'அன்று வராக அவதாரம் எடுத்த போது உன் திருக் கொம்பால் தாங்கி நீ அடைந்த நிலமகள் மணவாளனே' என்கிறாள். 'கண்ணனாக அவதாரம் செய்த போது ஏழு எருதுகளைத் தாக்கிக் கொன்று அதன் பரிசாக நப்பின்னைப் பிராட்டியை அடைந்த அன்பனும் நீயே' என்கிறாள். தென் திசைக்கு அணிகலனாய் விளங்கும் திருவரங்கத்தில் கோயில் கொண்டவனே! உன்னைப் பிரிந்து என் மகள் படும் துன்பத்திற்கு என்ன தான் முடிவோ; எனக்குத் தெரியவில்லை.

முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும்
மூவுலகாளியே என்னும்
கடிகமழ் கொன்றைச் சடையனே என்னும்
நான்முகக் கடவுளே என்னும்
வடிவுடை வானோர் தலைவனே என்னும்
வண்திருவரங்கனே என்னும்
அடியடையாதாள் போல் இவள் அணுகி
அடைந்தனள் முகில் வண்ணன் அடியே

'எனக்கு என்ன முடிவு என்று அறிகிலேன்' என்கிறாள். 'மூன்று உலகங்களையும் ஆள்பவனே' என்கிறாள். 'மணம் வீசும் கொன்றை பூவை தன் சடைமுடியில் அணிந்திருக்கும் சிவபெருமானாகவும் நீயே இருக்கிறாய்' என்கிறாள். 'நான்முகனாம் பிரம்ம தேவனாகவும் நீயே இருக்கிறாய்' என்கிறாள். 'அழகான வடிவம் கொண்ட தேவர்கள் தலைவனாம் இந்திரனாகவும் நீயே இருக்கிறாய்' என்கிறாள். 'வளங்கொண்ட திருவரங்க நகரானே' என்கிறாள். இதுவரை உன் அடிகளை அடையாதவள் போல் இருந்தாள். இப்போது முகில் வண்ணனாகிய உன் திருவடிகளை நெருங்கி அனுபவித்து அடிகளை அடைந்துவிட்டாள்.

முகில்வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி
உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில்வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ்
வண்குருகூர்ச் சடகோபன்
முகில்வண்ணன் அடிமேல் சொன்ன சொல்மாலை
ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில்வண்ண வானத்து இமையவர் சூழ
இருப்பர் பேரின்ப வெள்ளத்தே


முகில்வண்ணன் அடியை அடைந்து அவன் அருளைச் சூடி உய்ந்தவன், வெண்மையான ஆடையைப் போன்ற வண்ணம் கொண்ட நீரையுடைய தாமிரபரணி நதிக் கரையில் இருப்பவன், வளம் மிக்க குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரியில் வாழ்பவன், சடகோபன் - முகில்வண்ணன் திருவடிகளின் புகழைச் சொன்ன சொல் மாலையாம் திருவாய்மொழியின் ஆயிரம் பாடல்களில் இந்தப் பத்துப் பாடல்களும் பாடக் கூடியவர் மேகங்களால் நிறைந்த வானத்தில் தேவர்கள் சூழ்ந்திருக்க பேரின்ப வெள்ளத்தில் என்றும் இருப்பார்கள்.

----------
Updated on 11-Jan-2006:

நம்மாழ்வார் தன்மேல் நாயகி பாவத்தை ஏறிட்டுக் கொண்டு பராங்குச நாயகியாய் இருக்கும் போது, பராங்குச நாயகியின் திருத்தாயாரின் கூற்றாக வருவது இந்தப் பத்துப் பாசுரங்களும். பரமனைக் காணாமல் பராங்குச நாயகி தவிக்கும் தவிப்பு மிக அருமையாக இந்தப் பாசுரங்களில் கூறப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசி மார்கழியில் வரும் என்பது தெரியும். ஆனால் இந்த வருடம் அது எந்த நாளில் வருகிறது என்று தெரிந்து கொள்ளாமல் இருந்தேன். தேசிகனின் வலைப்பூவில் வைகுண்ட ஏகாதசி ஜனவரி பத்தாம் தேதி என்று தெரிந்தவுடன் திருவாய்மொழியை சேவிக்கலாம் என்று எண்ணி முதல் பத்தை எழுத ஆரம்பித்தேன். பின்னர் ஒரு எண்ணம். திருவரங்கத்தைப் பற்றிய திருவாய்மொழியாய் இருந்தால் இன்னும் சிறப்பாய் இருக்குமே என்று தோன்றியது. உடனே 'கங்குலும் பகலும்' நினைவிற்கு வந்தது. முதல் பத்தில் முதல் பாசுரத்தின் வரிகளை தொடக்க வரிகளாய் வைத்து எழுத ஆரம்பித்தேன்.

திருவாய்மொழியின் முதல் பாசுரம்:

உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் எவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவனவன்
துயரறு சுடரடி தொழுதெ(ழு) என் மனனே

எழுதிக்கொண்டு வரும்போது 108 திவ்ய தேசங்களைப் பற்றியும் எழுதினேன். பதிவை எழுதி முடித்துப் பதித்தும் விட்டேன். தமிழ்மணத்தில் அது வந்த பிறகு தான் கவனித்தேன் அது 108வது பதிவு என்று. 108வது பதிவில் 108 திவ்ய தேசங்களைப் பற்றிச் சொல்லி அதில் முதலாவதாகிய திருவரங்கத்தைப் பற்றி எழுத வைத்தது அவன் அருளே என்று மகிழ்ந்தேன். முன்பே திட்டமிடாமல் தற்செயலாய் நிகழும் இது போன்ற நிகழ்வுகளால் தான் அவனே அவனைப் பாடிக் கொள்கிறான்; புகழ்ந்து கொள்கிறான் என்பது நிச்சயமாகிறது. இப்படிப் பட்ட நிகழ்ச்சிகள் ஏராளமாய் எனக்கு நடந்து அவனே எல்லாம் செய்துகொள்கிறான் என்ற உண்மையைப் புரியவைத்துள்ளன.